Tuesday, 27 May 2025

‘இசைவியல்’ ஒரு யோக சாதகனுக்கு - நித்ய சைதன்ய யதி

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: குரு நித்ய சைதன்ய யதி 'Letters to an Aspiring Yogi' என 15 கடிதங்கள் எழுதியுள்ளார். அதில் இரண்டு கடிதங்களின் மொழிபெயர்ப்பு இது. "யோகம்" என்பதை Science of Harmonious Union என்பார் நித்யா. அதையொட்டி, தமிழில் யோகம் என்பதை இசைவியல் என்று மொழிபெயர்ப்பு செய்துள்ளேன்.

************************

கடிதம் 1

இப் பிரபஞ்சத்தில் மறைமுகமான நன்மை ஒன்றுள்ளது. அது ஒவ்வொரு உயிரையும் பல்லாயிரம் வடிவிலான அருளாக வந்தடைகிறது. அத்தகையதொரு அருளுணர்வை உங்களுள் வளர்த்துக்கொள்வதன் வழியாக, கணம் கணமென அறியப்படுவனவற்றை இங்கு நிகழ்த்திக்கொண்டிருக்கும் அறியப்படாத ஒன்றுடன் ஒரு உரையாடலை துவக்க முடியும். இந்த உரையாடல் வளர்ச்சிக்கான, புரிதலுக்கான, உங்கள் நிறைவுணர்வின் பொருளுக்கான பாதை.

எங்கும் திகழும் அந்த மறைமுக நன்மையைப் போலவே, நீங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவாலான, தடைகளை ஏற்படுத்தும் எதிராற்றல் ஒன்றும் உள்ளது. குழப்பம், ஐயம், சோம்பல், அகக்குலைவு, ஏமாற்றப்பட்ட அல்லது கைவிடப்பட்ட உணர்வு, தடைகள், தன்னிரக்கம், பொறுமையின்மை என பல வடிவங்கள் கொள்வது அது. அருளுடன் கொள்ளும் மென்மையான, இடையறாத, நேர்மையான ஒரு உரையாடல் தீமையின் இருளைப் போக்கும் அற்புத ஆற்றல் கொண்டது.

மகிழ்வுடன் இருத்தல் என்பது அனைத்து உயிர்களுக்குமான பிறப்புரிமை. உங்களது அகமெனும் கருவிலிருந்து தோன்றும் மகிழ்ச்சியை நீங்கள் தேர்ந்தெடுப்பவர்களுடன் பகிர்ந்துகொள்ளக்கூடிய வகையில்தான் இவ்வுலகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மலர்களும், பறவைகளும், வளர்ப்பு மிருகங்களும், குழந்தைகளும் இந்தப் பெருமகிழ்வை யாரும் கேட்காமலேயே பகிர்ந்துகொள்கின்றன. மானுட இயல்பை - நம்முடையதும் பிறருடையதுமான இயல்பை - சிறிது உற்று கவனித்தாலே உங்கள் உலகை விரித்துக்கொள்ளவும், உங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் பலருடன் பகிர்ந்துகொள்ளவும் முடியும். ஆனால், தன்னொளிர்வு இல்லாத அன்பும், புரிதலற்ற மகிழ்ச்சியும் நம்மை ஏமாற்றும் பொறிகளாக மாறிவிடக் கூடும். அறிதல் மிக அவசியமான ஒன்று.

நீங்கள் விரும்புவது எதனை என்றும் யாரை விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். யாரோ ஒருவரை உங்கள்பால் ஈர்க்கும் உங்களின் அருமை என்ன என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உண்மையில் காதலிப்பவரிடமும் காதலிக்கப்படுபவரிடமுள்ளது, அகமெனும் ஒற்றை மெய்மையின் ஒன்றையொன்று நிரப்பும் பாதிகளே. உங்கள் நன்மைக்காகவும் பிறர் நன்மைக்காகவும் அதை முழுமையாக அறிய விரும்புங்கள்.

மனதின் பகுத்தறியும்-மதிப்பிடும் புலமும், பருவுலகையும் நனவெனும் களத்தையும் ஆளும் பிரபஞ்ச விதியும் ஒன்றாக இணைவதே யோகம். அத்தகை இசைவு, தெளிந்த பார்வையை அளிக்கிறது. பொருளின் உறுதிப்பாட்டை, செயலின் உறுதியை நிறுவுகிறது. உணர்வுகளை நிலைப்படுத்துகிறது. படிப்படியாக இதை எய்துகையில் பெரும் அக அமைதியை நீங்கள் உணர்கிறீர்கள். எப்போதும் உங்கள் மனதில் வாழ்வின் இயல்பான இனிமை ஒளிர்கிறது. கருணை உணர்வு உங்களைச் சூழ்ந்துள்ள அனைத்திற்கும் பரவுகிறது. 

முதலில் உங்கள் மனம் நோக்கி கவனத்தை குவியுங்கள். அதை கவனியுங்கள். உங்கள் மனம் அலைபாய்கிறது. அனைவருக்கும் நிகழ்வது அதுவே. மனதின் ஒழுக்கும் காலத்தின் ஒழுக்கும் வேறுவேறல்ல. உங்கள் பிறப்பிலிருந்தே தொடங்கிய ஒழுக்கு இது. உங்கள் உடலில் உள்ள உயிர் பிரியும்போது அது நிற்கும். நேரத்திற்கும் மரணத்திற்கும் ‘காலம்’ என்ற பெயரையே பயன்படுத்துகிறோம். நேரம் என்பது இயக்கம் எனும் புலன். உங்களது மன இயக்கத்தை நீங்கள் எப்போதும் உணர்வதில்லை. தூங்கும்போதும், கவனமில்லாமல் இருக்கும்போதும் அது புலப்படாமல் இருக்கிறது. ஒளி பாய்வதை நீங்கள் காண்பதில்லை; ஒரு பொருளை ஒளிரச் செய்கையில்தான் அது தெளிவாகிறது. அதேபோல்தான் மனமும். புறவயமான ஒன்றோ அல்லது அகவயமான ஒன்றோதான் மனதை தன்னைப்பற்றி உணரச் செய்கிறது. பொருட்களும், மனிதரும், அவற்றின்- அவர்களின் இடையேயான செயல்பாடும் உறவும் புறவயமானவை. ‘நான்’ எனும் நனவு, நேரம் பற்றிய உணர்வு, மதிப்பீடு, விருப்பம், உணர்ச்சிகள் என்பவையெல்லாம் அகவயமானவை.

ஒரு குறிப்பிட்ட வெளி அல்லது கருத்தின் மீது நீண்ட நேரம் இடையறாது மையம் கொள்கையில், உணர்வு தீவிரமடைகிறது, தெளிவடைகிறது. உங்கள் மனம் மேலாண்மை செய்யும் ஆற்றல் கொண்டது. உணர்வின் ஒழுக்கை உங்களால் வழிநடத்த முடியும், ஒரு ஆர்வத்திலிருந்து இன்னொன்றிற்கு தாவச்செய்ய முடியும். 

உங்கள் மனம்

  • இயங்கிக்கொண்டே இருக்கிறது
  • அவ்வப்போது தெளிவிழக்கிறது
  • ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தாவுகிறது
  • அதை கட்டுப்படுத்தமுடியும்
  • அது மையம் கொள்கிறது

மனதின் இந்த இயல்புகளை எல்லாம் பொறுமையுடன் கவனியுங்கள். அதனுடன் தோழமை கொள்ள இதுவே சிறந்த வழி.

பயிற்சி

  1. நேரம் கடந்துசெல்வதை, அதைப்போலவே உங்கள் மனமும் ஒழுகிச் செல்வதை கவனியுங்கள். காலத்தின் ஒழுக்கையோ, மனதின் ஒழுக்கையோ திருப்பிச் செலுத்த இயலாது.
  2. தடையின்றி ‘ஓம்’ ‘ஓம்’ என்று சொல்லுங்கள். இடையில் பிற எண்ணங்கள் வராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஏதோ ஒரு எண்ணம் உள் நுழைய முயலும். உங்கள் விழிப்புணர்வு இருளும் ஒரு கணம் வழியாக வருவது அது.
  3. ஒரு பொருள் பற்றி எண்ணுங்கள்; அதைத் தொடர்ந்து தொடர்பற்ற வேறொரு பொருள் பற்றி நினையுங்கள்
  4. உங்களுக்கு மிக அணுக்கமானவரைப் பற்றி சிந்தியுங்கள். அன்பர் மீதான உங்கள் அகப்பார்வை விலகும்போதெல்லாம், இனிய நிகழ்வொன்றை நினைவில் கொணர்ந்து மனதை அவர் மீதே செலுத்துங்கள்
  5. பெருமகிழ்வு கொண்ட உங்கள் அகத்தின் அழகையும் அமைதியையும் உங்களது தோழர் என, மெய்யான காதலரென உங்கள் அருகே அமர அனுமதியுங்கள்.

************************

கடிதம் 2

முந்தைய கடிதத்தை படித்துவிட்டு உங்கள் நனவோடையின் ஒழுக்கை அமைதியாக உற்றுநோக்கியபின் நான் குறிப்பிட்ட ஐந்து பண்புகள் உங்கள் கவனத்திற்கு வந்திருக்கும்:

  • தொடர் ஒழுக்கு (க்ஷிப்தம்)
  • அவ்வப்போது விழிப்புணர்வு இருண்டுபோதல் (மூடம்)
  • ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவும் ஆர்வத்தின் தொடர்ச்சியின்மை (விக்ஷிப்தம்)
  • கவனத்தை சிதறடிக்கும் ஆர்வத்தை தடுக்கக் கூடிய உங்களது மேலாண்மை (நிரோதம்)
  • குறிப்பிட்ட நேரத்தில் மனதை நிரப்பும் ஒற்றை ஆர்வத்தில் முழுதாக கரைந்துபோதல் (ஏகாக்ரம்)

இந்த ஐந்து நிலைகளில், இறுதியாக சொல்லப்பட்டதன் பண்புகள் அனைவராலும் போற்றப்படுபவை. வலி, சலிப்பு போலல்லாமல் நீங்கள் இந்த நிலையை தவிர்க்க முயல்வதில்லை. முழுதாக ஈர்க்கப்பட்ட நிலையில் நீங்கள் உங்களைப் பற்றியே எண்ணுவதில்லை. இந்நிலையில் ‘நான்’ எனும் நனவுக்கும் ‘நான்’ அல்லாத பிறவற்றுக்கும் இடையில் தெளிவான பிரிவினை இல்லை. அத்தைகையதொரு அனுபவத்தில் காலம் இடம் போன்ற கூறுகள் பற்றிய உணர்வை கடந்து செல்கிறீர்கள். அந்நிலையில் கலக்கமோ கிளர்ச்சியோ இருப்பதில்லை.

இதுவரை படித்துவிட்டு, உங்கள் உடலையும் மனதையும் நிலைநிறுத்தி கண்களை மூடி அத்தகையதொரு நிலையை தீண்ட முடியுமா என்று முயலுங்கள். எதை நோக்கி மெல்ல முன்னேற வேண்டுமோ அந்த இலக்கைப் பற்றிய எண்ணம் உங்களில் தெளிந்துவரக் கூடும். பத்து நிமிடம் வரை அமைதியாக அமர்ந்திருந்த பின் தொடர்ந்து படியுங்கள்.

இப்போது உங்கள் மனம் பரபரப்பின்றி அமைந்திருக்கக் கூடும். நான் சொல்வதும், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதும் இப்போது உங்களுக்கு தெளிவாக புரியக்கூடும். நீங்கள் மிக மகிழ்ந்திருந்த தருணங்களை நினைவில் மீட்டெடுக்கக் கூடும். அத்தகைய நிலையே தெளிந்த மெய்மை நிலை. 

ஒரு கண்ணாடி முன் நிற்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்கள் முகத்தில் பளிச் என ஒளி விழுகிறது. அந்தக் கண்ணாடி மாசுமறுவற்றிருக்கிறது. விளைவாக மிகத் தெளிந்த பிரதிபலிப்பு. தெளிந்த நிலையில் நிகழ்வது இதுவே. இந்த ஒப்புமையில் மூன்று பகுதிகள் உள்ளன: ஒளி, முகம் அல்லது பொருள், கண்ணாடி. படிவத்தின் பண்பையும் இதனோடு நான்காவதாக சேர்த்துக்கொள்ளலாம். தெளிந்த நிலையில் ஒளியே தூய நனவின் ஆன்மாவாக இருக்கிறது. அதனை இறை என்றோ அகம் என்றோ, புருஷன் என்றோ மெய்மை என்றோ சொல்லிக்கொள்ளலாம். ஒவ்வொரு பண்பாடும் ஒரு பெயரை அதற்கு அளிக்கிறது. முகம் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் அறிதல் புலத்தில் பதிவாகும் ஆர்வம். கண்ணாடி என்பது முக்குணங்களில் ஒன்று. அந்தந்த நிலைக்கேற்ற பெயர் அதற்கு வழங்கப்படும். நாம் தெளிந்த நிலை என்று இங்கே சொல்வதற்கு சத்வ குணம் என்று பெயர்.

புறவய புரிதலுக்கும் அகவய இயல்நிகழ்வுக்கும் இடையில் வேறுபாடு உண்டு. கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்ப்பதற்கு பதிலாக, ஒரு ஒளிப்படத்தை திரையில் வீழ்த்துவதை கற்பனை செய்துகொள்ளுங்கள். இதில் ஒளியானது பின்புறமிருந்து வருகிறது. ஒளிரச் செய்யவேண்டிய பொருள் வழியாக ஊடுருவுகிறது. பிம்பத்தைப் பார்ப்பவருக்கு ஒளியின் மூலமோ ஒளிப்படம் வைக்கப்பட்டிருப்பதோ தெரிவதில்லை. விளைவை மட்டுமே அவரால் பார்க்கமுடிகிறது. அதேபோல், உங்களது புலனறிவுப் புலத்தை ஒளிரச் செய்யும் ஒளியை உங்களால் நேரடியாகக் காண முடியாது. உள்செலுத்தப்படுவது எது என்ற உணர்வோ, உங்கள் அகவயமான கருவியை தன் ஆளுகைக்குள் எடுத்துக் கொள்ளும் ஆர்வம் பற்றிய உடனடி உணர்வோ உங்களுக்கு இருப்பதில்லை. அதிலிருந்து வரும் எறிவே உங்கள் நனவுதான். இந்த வீச்சு காலத்தையும் இடத்தையும் சட்டகமாகக் கொண்டது, அவ்வீச்சின் உள்ளார்ந்த பகுதிகளும் அவையே. அதனால் அந்த அனுபவம் நான்கு-பரிமாண மெய்மையாக உங்களுக்கு தோன்றக்கூடும்.

நனவோடை என்பது எப்போதும் ஒழுகிக்கொண்டிருப்பது என்பது அடுத்த புதிர். ஏதோ ஒரு இயக்காற்றல் காரணமாக அதன் வேகம் கூடலாம், குறையலாம், ஓட்டம் நிற்கலாம். ஒவ்வொரு உயிரும் அகமும் உடலும் கொண்ட தனிப்பட்ட பொருள் ஒன்றாக படைக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப அந்த இயக்காற்றல் செயல்படுகிறது. ஒருவரது இயக்குநீர் ஒழுக்கு (hormonal flow), சுரப்பிகளின் ஊற்றம் (glandular secretions), ஏற்பிகளின் கூருணர்ச்சி (irritability of receptors), குளக எதிர்ப்புசக்தி (synaptic resistance), உள்ளார்ந்த வேட்கைகள் (latent urges), முன் நிரல் செய்யப்பட்ட நாட்டங்கள் (preprogrammed pursuits) போன்ற பல கூறுகள் நனவோடையின் ஒழுக்கோடு தொடர்புடையவை. இந்த அக-உடற் கூறுகள் சுழற்காற்றுகளை, கொந்தளிப்புகளை, பேரலைகளை ஏற்படுத்தக்கூடும். மற்றுமொரு நனவுநிலையை இது சுட்டுகிறது - பிரதிபலிப்பில் குறுக்கீடு ஏற்படுகிறது. நீங்கள் கண்டுகொண்டிருந்த தெளிந்த அமைதியான பிம்பத்திலிருந்து பெரிதும் மாறுபட்டது இது. இப்போது நீங்கள் உணர்வது தெளிவை அல்ல ஒளியுருவலை (translucency instead of transparency); அமைதிக்கு பதிலாக கொந்தளிப்பை; நிதானத்திற்கு பதிலாக அவசரத்தை. இதிலிருந்து நீங்கள் தப்பவியலாது. ஏனெனில், இது உங்களது இயல்பின் மற்றொரு கூறு - ரஜஸ் எனப்படும் குணம். 

மேற்சொன்ன இரண்டு வகை பிரதிபலிப்புகளும் ஆதல் எனும் தொடர் நிகழ்வின் பகுதிகளே. தவிர்க்க முடியாத மூன்றாவது கூறு ஒன்றுண்டு. ஒரு அனுபவத்தை உறையச்செய்து அதன் நேர்படியாக்கி நினைவில் தங்கச் செய்வது. இங்கு தேவைப்படுவது ஒளியல்ல. அதனை தடுத்து ஒரு பகுதியை இன்னொன்றிலிருந்து பிரிக்கக்கூடியது. இது இயக்கமற்ற நிலை. தெளிவுக்கு பதிலாக மழுப்பலைக் கொணரக்கூடியது. இந்நிலை குறிப்பிட்ட அளவுக்கு நீடிக்குமென்றால் நீங்கள் ஊக்கமிழப்பை, வெறுமையை, பொருளின்மையை, தன்மறுப்பை உணர்வீர்கள். சம்ஸ்க்ருதத்தில் இது தமஸ் எனப்படுகிறது. 

உங்கள் ஆர்வங்களை பிரதிபலிக்கும் இந்த முக்குணங்கள் உங்களில் மாறி மாறி நிகழ்வதை ஏற்கப் பழகுங்கள். அடுத்த கடிதத்தில் இம்முக்குணங்களின் வரிசைமாற்றங்களையும் சேர்க்கைகளையும் (permutations and combinations) விளக்குவேன். 

************************

நித்ய சைதன்ய யதி

தமிழில் - ஆனந்த் ஶ்ரீனிவாசன்

ஆனந்த் ஸ்ரீனிவாசன்

நித்ய சைதன்ய யதி (1923-1999) நடராஜ குருவின் நேரடி சீடர். நாராயண குருவின் தத்துவ பள்ளியைச் சேர்ந்தவர். தத்துவத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற பிறகு கொல்லம் ஶ்ரீ நாராயண கல்லூரியிலும், சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். நாராயண குருவின் தத்துவ நூல்களுக்கும் பகவத் கீதை, உபநிஷதங்களுக்கும், சங்கரரின் சௌந்தர்ய லஹரிக்கும் விரிவான உரைகள் எழுதியுள்ளார். ஆங்கிலம், மலையாளம், தமிழ் என இருநூறுக்கும் மேலான குருவின் நூல்கள் வெளியாகி உள்ளது.


நித்ய சைதன்ய யதி - Tamil Wiki


ஆனந்த் ஶ்ரீநிவாசன்

தமிழ் மொழிபெயர்ப்பாளர். இலக்கிய பிரதி மேம்படுத்துனர், திருத்துனர். எழுத்தாளர் ஜெயமோகனின் 25,000 பக்க நாவலான ‘வெண்முரசு’க்கு தன் மனைவி சுதாவுடன் இணைந்து திருத்துனராக இருந்தார். நித்ய சைதன்ய யதியின் படைப்புகளை தமிழில் கொணர்வதற்காக ‘நித்ய சைதன்யம்’ என்ற இணைய தளம் நடத்தி அதில் நித்யாவின் படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார். கன்னட எழுத்தாளர் ஹெச்.எஸ்.சிவபிரகாஷின் ‘குரு’, வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரியின் ‘உயிர்த்தெழல்’ ஆகிய நூல்கள் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.


ஆனந்த் ஸ்ரீனிவாசன் - Tamil Wiki