Tuesday, 27 May 2025

ஆடல் 9, கம்பப்பாடல்கள்: வஜ்ரபாகு - தாமரைக்கண்ணன் புதுச்சேரி



சூரசம்மார நிகழ்வின் ஒரு பகுதியாக நடக்கும் கம்பம் ஏறும் சடங்கு கந்த புராணத்தின் வச்சிரபாகு பாத்திரம் ஒன்றை மையமாக்கி நிகழ்கிறது. வச்சிரபாகு என்னும் அரக்கன் தான் அந்த கம்பம், குறைந்தபட்சம் அறுபதடி உயரம் உள்ள கம்பம். இவன் இராவணனைப்போல பத்துத் தலையும் இருபது கரமும் உடையவன். வச்சிரம்பாகு என்னும் பெயருக்கு வச்சிரம் போன்ற உறுதியான தோள்களை உடையவன் என்று பொருள். 

கந்த புராணத்தில் வச்சிர பாகு

தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசப்படாத கதாபாத்திரம் வச்சிரபாகு, கந்தபுராணத்தில் இடம்பெறும் அசுரர்களில் ஒருவன். சூரபதுமனின் மூன்றாவது மகன். மற்றோர் வகையில் கந்தபுராணத்தின் ‘முன்னோடிக்காவியமான’ கம்பராமாயணத்தில் வச்சிரபாகுவின் இடத்தில் வருபவன் சுந்தரகாண்டத்தில் அனுமனால் தேய்த்தழிக்கப்படும், இராவணன் மகன் அட்சயகுமாரன். 

அட்சயகுமாரனை வதம் செய்யும் அனுமன்

கந்தபுராணத்தில் இரண்டாவதாக உள்ள அசுரகாண்டத்தில் புதல்வரைப்பெறு படலம் என்ற படலத்தில் சூரமதுமனுக்கும், அவனது தம்பிகளுக்கும் பிறந்த ஆற்றல் மிக்க மகன்களை கச்சியப்பர் பாடுகிறார். சூரபதுமனின் முதல்மகன் பானுகோபன், குழந்தையாக இருக்கையில் வெயில் தன்மீது பட்டதால் சூரியனை சினந்து தண்டித்தான், பின் பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க அவனை விடுவித்தான். இதனால் பானுகோபன் என்ற பெயர் பெற்றான்.

பானுகோபனுக்கு பின் சூரனுக்கு இரணியன் மற்றும் வச்சிரபாகு ஆகிய மகன்கள் அவனது பட்டத்தரசியாகிய பதுமகோமளையின் மூலம் பிறந்தனர். மேலும் அவனது பிற தேவியர் மூலம் மூவாயிரம் அசுரர்கள் பிறந்தார்கள். சூரனது தம்பியான சிங்கமுகனுக்கு அதிசூரன் என்ற மகன் பிறந்தான். மற்றோரு தம்பியான தாருகனுக்கு அசுரேந்திரன் என்றொரு மகன் பிறந்தான். 

பரிதி யின்பகை யாமிவற் பெற்றபின் பரிவால்
நிருதர் காவலன் அங்கிமா முகத்தனை நிறஞ்சேர்
இரணி யன்றனை வச்சிர வாகுவை எழிலார்
மருவு லாங்குழற் பதுமகோ மளைதர மகிழ்ந்தான். 

மகேந்திர காண்டத்தில் வீரபாகு விரமகேந்திரபுரிக்கு தூது வருகையில் மீண்டும் வச்சிரபாகுவின் பெயர் இடம்பெறுகின்றது 

கந்தமாதன பர்வதத்திலிருந்து இலங்கை செல்ல வீரபாகு கடலை தாவுகிறார். இலங்கை வடதிசையின் காவலனான வீரசிங்கனை முதலில் சண்டையிட்டு கொல்கிறார். பின்னர் வீரபாகு இலங்கையின் சிகரங்களில் ஒண்றின்மீது பாய்ந்து இறங்குகிறார், அவரது ஆற்றலையும் எடையையும் தாளாது இலங்கை கடலில் மூழ்கத்துவங்குகிறது, இதைக்கண்டு இலங்கையின் காவலனாக நிற்கும் அதி வீரன், வீரபாகுவிடம் போர் செய்கிறான், செல்கையில் அவனையும் தூது முடிந்து மீண்டு வருகையில் அவனது தந்தை யாளிமுகனையும் கொல்கிறார் வீரபாகு. வீரமகேந்திர புரியில் நுழைய எண்ணி கிழக்குத்திசை வாயிலில் நிற்கும் கயமுகன் என்னும் அசுரனை பொருதி அழிக்கிறார் 

மகேந்திரபுரி நகரில் நுழைந்து சூரனின் மாளிகையை அடையும்முன் பல அசுரர்களின் மாளிகைகளை கடந்து தாவி செல்கிறார் வீரபாகு, பானுகோபனின் மாளிகையையும், இருபது கரங்களை உடைய வச்சிரவாகுவின் மாளிகையையும் தாண்டிச்செல்கிறான். 

உச்சி யையிரண் டிருபது கரதல முடைய
வச்சி ரப்பெரு மொய்ம்பினோன் மாளிகை வரைப்பும்
அச்செ னத்தணந் தேகிமூ வாயிரர் ஆகும்
எச்சம் எய்திய மைந்தர்தம் இருக்கையும் இகந்தான்

அதன்பின்னர் சிறையிலிருக்கும் செயந்தனை தேற்றுகிறார். சூரன் அவைக்கு தூது செல்கிறார், ஆசனமற்று நிற்பவருக்கு கந்தன் அருளால் அழகிய ஆசனம் கிடைக்கின்றது, அதில் அமர்ந்து சூரனுக்கு நல்லுரை சொல்கிறார். சூரன் ஏற்கவில்லை. முருகனை பழித்துரைக்கிறான், வீரபாகுவை சிறைசெய்ய கட்டளையிடுகிறான். தொடர்ந்து வந்த அசுரர்களான சதமுகன், சகஸ்திர வாகுகள் ஆகியோரைக் வீரபாகு அழிக்கிறார். இதனால் கோபமாகும் சூரனை நோக்கி அவனது இளையமகனாகிய வச்சிரபாகு தான் வீரபாகுவை கட்டி இழுத்துவருவதாக கூறிச்செல்கிறான்

முச்ச கம்புகழ் அவுணர்கோன் முனிவினை முன்னி
யச்செ னக்கிளர்ந் தெழுந்துசென் றவனடி வணங்கி
மெய்ச் சிரங்கள் ஓரையிரு திறலுடை விறல்சேர்
வச்சி ரத்திரு மொய்ம்புடைக் காதலன் வகுப்பான்

நொய்ய தூதுவன் பொருட்டினால் இத்திறம் நுவறல்
ஐய கேட்கநிற் கியலுமே இறையிவண் அமர்தி
மொய்யில் யான்சென்று மற்றவன் பெருமுரண் முருக்கிக்
கைய கப்படுத் துய்ப்பனால் அன்னது காண்டி

வச்சிரவாகு வதைப்படலம்

இதையடுத்து கந்தபுராணத்தில் வரக்கூடிய வச்சிரவாகு வதைப்படலத்தில் 101 பாடல்கள் இருக்கின்றன. இந்தப்படலத்தை பார்ப்பதற்கு முன்னர், கந்தபுராணம் போன்ற புராணங்களுக்கு இயல்புரைத்தல் தேவையற்ற ஒன்றாக இருக்கின்றது எதிலும் மிகை அழகியலே முன்வைக்கப்படும், சம்பவங்கள் யாவும் அதீத கற்பனை கொண்டு திகட்டும் அளவிற்கு புனையப்படும். ஆனால் இந்த புராணங்களின் அமைப்பே அப்படித்தான் என்ற புரிதலின் அடிப்படையில் இப்பாடல்களை பார்க்க வேண்டும்.

இராவணனைப்போல பத்து தலைகளும் இருபது கைகளை உடைய வச்சிரபாகு போருக்கு தயாராகிறான். கவசங்கள் அணிந்து ஆயுதங்களை நிரப்பிக்கொண்டான். தும்பை மலரை சூடிக்கொண்டான். போர்மறவர்களின் பூ தும்பை, தங்கத்தாலான தும்பையை வீரர்கள் அணிவதுண்டு. ஆநிரை கோட்டை மண் முதலியன கவர்வதும் மீட்டலும் இன்றி வலிமையை காட்ட செய்யும் போர் தும்பைத்திணை.

போர் வீரர்களிடையே சென்று வீரபாகுவை வென்று, கட்டி சூரனின் முன்னே இழுத்துவருவோம் வாருங்கள் என்று சொல்கிறான். இளைஞர்களாகிய அமைச்சர்கள் தளபதிகளின் மகன்கள் கிளம்புகிறார்கள். பத்தாயிரம் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி விரைகிறான் வச்சிரபாகு. அவனது படைச்சிறப்பு பாடப்படுகிறது. போர்முகத்தில் வச்சிரபாகுவின் தேரை பேய்கள் சூழ்ந்து பற்றுகின்றன, அவனது இடத்தோள் துடிக்கின்றது. தீக்குறிகள் தோன்றுகின்றன. அவன் அவற்றைத்தாண்டி வில்லை ஏந்தி வீரபாகுவின் முன்னெழுகிறான். அதைக்கண்ட வீரபாகு அந்திக்குள் வச்சிரபாகுவை அழிப்பதாக உறுதிகொள்கிறான். வீரபாகு எழுப்பும் ஆரவார ஒலியானது அசுரர்களை அஞ்சச்செய்கிறது. வச்சிரபாகுவின் இருபது காதுகளிலும் இந்த ஒலி புகுந்து நடுங்கச்செய்கிறது. அவனது தேரோட்டி இது வீரபாகுவின் ஆரவாரம் என்கிறான். சினந்து வீரபாகுவை அழிப்பேன் என்று செல்கிறான் வச்சிரபாகு. அசுரப்படைகள் தங்களது ஆயுதத்தை வீரபாகுவின் மீது ஏவுகின்றன. அவற்றால் வீரபாகுவின் உடலில் குருதி வழிகின்றது, சினந்தெழும் வீரபாகு அசுரர்களை அழிக்க துவங்குகிறார். 


அசுரர் அனைவரையும் இரக்கமின்றி அழிக்கிறார் வீரபாகு, வச்சிரபாகுவின் துணைவர்கள் அங்கங்களை வெட்டி வீழ்த்துகிறார். அரக்கர்களை பற்றி திசையெங்கும் எறிகிறார், அவர்கள் திசைக்காவலர்களின் உலகில் சென்று விழுகிறார்கள். சிறந்த வீரர்களை நேரடியாக வீர சொர்க்கத்திற்கு வீசுகிறார். திசையானைகளுக்கு உணவாக்குகிறார். வடவைத்தீயின் பசியடங்கும்படி கடலில் எறிகிறார். இதைக்கண்டு தனது முன்னால் தேருடன் வரும் வச்சிரபாகுவுடன் போர் புரிய எண்ணி திருமாலின் திரிவிக்கிரம வடிவம் போல பேருருவம் கொள்கிறார் வீரபாகு. அஞ்சாது வீரபாகுவை நோக்கி ஆயிரம் அம்புகளை எய்கிறான் வச்சிரபாகு அவற்றை கைகளால் சிதறடிக்கின்றார். மீண்டும் ஆயிரம் ஆயிரம் அம்புகளை அவரது உடலெங்கும் எய்கிறான் வச்சிரபாகு.

எண்டி சைப்புறந் தாங்கியே பெயர்கிலா திரக்கங்
கொண்ட வெங்கரிக் கிரையெனச் சிலவரைக் கொடுக்குந்
தெண்டி ரைப்புனல் பருகிய நிரப்பது தீர
உண்டி யாகவே வடவைபால் சிலவரை உய்க்கும்

ஒருகணம் வருந்திய வீரபாகு வெகுண்டு எழுந்து வச்சிரன் தேரை உதைக்கிறார், தேரின் பத்தாயிரம் குதிரைகளும் பதைத்து விழுந்தன, தேரோட்டி கீழே உருண்டு இறந்தான். வேறு தேரில் பாய்ந்து ஏறிய வச்சிரபாகு பிறைச்சந்திரனில் நாகத்தை நாணாக கட்டியதுபோன்ற வில்லில் இருந்து ஆயிரம் அம்புகளை வீரபாகுவின் நெற்றியில் தொடுக்கிறான். வீரபாகு அவனது தேரை தனது சிவந்த கைகளால் பற்றி விண்ணில் எறிகிறார். அத்தேர் பூமியிலிருந்து ஒருலட்சம் யோசனை தூரம் மேலேசென்றது, அது கீழே வந்து விழும்முன்னரே அவன் ஏற தயாராக உள்ள மற்ற தேர்களை எல்லாம் வீரபாகு சிதைத்து அழித்தார்.அவர்முன்னே வச்சிரபாகு விழுகிறான், பின் மீண்டும் சண்டைக்கு கைகளில் வில்லுடனும் தண்டுடனும் எதிர்த்து வருகிறான்.

வச்சிரபாகுவை எதிர்க்கும் வீரபாகு அவனது வில்லை பேரொலியுடன் உடைக்கிறார், வாளுடன் சென்று அசுரனின் கைகளை வெட்டுகிறார். முருகனின் தூதுவனான அவர் கடைசியாக வாளை வீசி அசுரர் தலைவனாகிய வச்சிரபாகுவின் பத்துத் தலைகளையும் வெட்டி அவனை வீழ்த்துகிறார்.

எந்தைதன் தூதுவன் எறிந்த வாளினால்
ஐந்திரு சென்னியும் அற்று வீழ்தலும்
மைந்தியல் வச்சிர வாகு ஆகிய
வெந்திறல் அவுணர்கோன் வீடி னானரோ

நான் இங்கிருந்தால் வச்சிரபாகு இறப்புக்கண்டு மகிழ்ந்து நிற்கிறேன் என்று சூரன் எண்ணக்கூடும் என்று அவன் சினத்திற்கு பயந்து ஆதவன் விண்ணிலிருந்து மறைந்து போனான்

துஞ்சினன் வச்சிரத் தோளன் கண்டிது
நெஞ்சகம் மகிழ்ந்திவண் நிற்ப னேஎனின்
வெஞ்சின அவுணர்கோன் வினவில் தீமையென்று
அஞ்சினன் கரந்தென அருக்கன் போயினான் 

தன் இளையமகன் வச்சிரன் பட்டது கேட்டு சூரன் துன்பக்கடலில் ஆழ்கிறான், அவன் மனைவி பதுமகோமளை மாரிலடித்துக்கொண்டு மயங்கி நிலம் வீழ்கிறாள் 

ஈரைஞ் சென்னிசேர் இளையகான் முளை
வீரம் சிந்தியே விளிந்த வாற்றினை
சூரன் கேட்டலும் துலங்கித் துன்பெனும்
வாரி உள்ளுர மயங்கி வீழ்ந்தனன்
 
பழிதவிர் கற்புடைப் பதுமை தன்மகன் 
ஒழிவுறு தன்மையை ஓர்ந்து மாமலர்க்
குழலவிழ்ந் தலமரக் கொங்கை மேல்புடைத்
தழுதனள் வீழ்ந்தனள் மறிக்கும் அங்கையாள் 


ஆனால் கந்தபுராணத்தில் வச்சிரபாகுவின் கதை இங்கேயே முடிவதில்லை, யுத்த காண்டத்தில் சூரன் வதைப்படலத்தில் மீண்டும் வச்சிரபாகு உயிர் பெறுகிறான். சூரன் தன் படை சுற்றம் முழுவதும் இழந்த பின், தனது தாயான மாயையை நினைக்கின்றான், அவளது யோசனைப்படி சுதாமந்தரபர்வதம் என்னும் மலையை இந்திரஞாலத்தேரின் மூலம் வரவழைக்கிறான். அந்த மலையின் காற்றுப்பட்டு இறந்துபோன சூரனின் படை முழுவதும் உயிர் பெறுகிறது. சிங்கமுகாசுரன், பானுகோபன், அக்கினிமுகன், வச்சிரவாகு, தருமகோபன் அதிசூரன், அசுரேந்திரன், சூரனது மூவாயிரம் மைந்தர்கள் ஆகிய அனைவரும் மீண்டும் உயிர் பெற்றெழுகின்றனர்.

எழுந்தான்வயப் புலிமாமுகன் இரவிப்பகை எழுந்தான்
எழுந்தான்எரி முகவெய்யவன் இளமைந்தனும் எழுந்தான்
எழுந்தான்அறத் தினைக்காய்பவன் இருபாலரும் எழுந்தார்
எழுந்தார்ஒரு மூவாயிரர் ஏனோர்களும் எழுந்தார்

மீண்டும் களம்காணும் சூரன் படைகளை கண்டு வெகுண்டெழும் நவவீரரை இருக்கச்செய்து முருகன் தனது கையில் பாசுபத (கடவுள் மாப்படை) படைக்கலத்தை எடுத்து அதை வணங்கி அசுரர்களை அழிக்க ஏவுகிறார். பாசுபதம் சிங்கமுகாசுரன், பானுகோபன், அக்கினிமுகன், வச்சிரவாகு, மூவாயிரர், சிங்கமுகனுடைய குமாரனாகிய அதிசூரன், அவன் தம்பிகள் நூற்றுவர், தாரகனுடைய மகனான அசுரேந்திரன், அமைச்சனான தருமகோபன் ஆகிய அனைவரோடு தேரின் மீதிருந்த சுதாமந்தர பர்வதத்தையும் அழித்து முருகனிடம் மீண்டு செல்கின்றது.

அரிமு கத்தவன் ஆதவன் தனைமுனம் அழன்றோன்
எரிமு கத்தவன் வச்சிர மொய்ம்பன்நூற் றிருவர்
முரண்மி குத்தமூ வாயிரர் அறப்பகை முதலோர்
விரிக டற்படை வெற்பொடு முடிந்தவண் வீழ்ந்தார் 


மட்டக்களப்பு சூரசங்கார கூத்தில் வச்சிர பாகு

கந்தபுராணத்தில் இடம்பெறும் வச்சிரபாகு சூர சம்மார கூத்துப்பிரதியிலும் இடம் பெறுகிறான். வச்சிரபாகுவின் பெயர் இருமுறை மட்டக்களப்பு கூத்துப்பிரதியில் இடம்பெறுகின்றது 

1. சூரனிடம் தூது சென்று மீளும் வீரபாகு கந்தசுவாமியிடத்தில் தான் செய்த பராக்கிரமங்களை சொல்லும்போது பல்வேறு அசுரர்களை அழித்ததாக கூறுகிறான். அவர்களில் ஒருவன் வச்சிரவாகு. 

சூரபற்மன் செய்தி கேளையா - நான் கண்டுவந்த 
சூரபற்மன் செய்தி கேளையா
பாரமலை தான்கடந்து வாயு வேகமாய் நடந்து
கோரமுள்ள இராட்சதரை கொன்று அப்பால் மேவிய

பாதைதனில் யாளிமுகன் கயமுகன் வீரசிங்கன்
வாதை செய்து போர் புரியவந்தான் வீர ராட்சதனும்
அதிவீரன் சதமுகன் ஆனதொரு வச்சிரவாகு
அவர்களுடன் போர்பொருதி அணிப்படையைக் கொன்று
அப்பால்
வேகமுள்ள இராட்சதரை வென்று அப்பாலேகி அந்த
வீரமாமகேந்திர புரிதான் கடந்தேன் 

2. சூரன் படைகளுடன் கிளம்புகையில் வச்சிரபாகு பெயர் மீண்டும் வருகின்றது. இறந்தவன் பெயர் மீண்டும் வருவதை கூத்துப்பிரதியில் ஆராயத்தேவையில்லை. இதற்கு சான்றாக மூலக்கதையான கந்தபுராணத்திலும் இவர்கள் உயிர்பெற்றெழும் காட்சி உள்ளது 

காசிபன் மகன் சிங்கமுகன் தாருகனும் வீரசிங்கன் கஜமுகன்
அணிதிரளாக
போசி என்னும் புகைக்கண்ணன் பானுகோபன் இரணியசிங்கனுடன் வச்சிரவாகு
ஆசி என்னும் சதவீரன் சகத்திரவாகு அக்கினிமுகன் அதிவீரர்
படைகள் சூழ
வாசி என ரதம் செலுத்திக் கொடிமுரசார வண்ணமி சூரபற்மன்
படைகளுடன் புறப்பட்டானே 

தமிழக சம்மாரத்தில் வச்சிர பாகு

தென்னாற்காடு பகுதி சூர சம்மார நிகழ்வில் வச்சிரபாகுவுக்கு இன்னும் முக்கியமான இடம் உள்ளது. வச்சிரபாகுவை வென்று அவனை கம்பமாக்கி அக்கம்பம் ஏறி சபதம் முடிக்கின்றனர் வீரபாகுவினர். 

வீரபாகு: மதியற்ற பயலே சிவனார் அளித்திட்ட வரத்தினால் துள்ளாதடா

சூரன்: சிந்த சிந்தாகவே உந்தனை சிறையிலிட சேவகரை விட்டேனடா

வீரபாகு: தீயனே நீ விட்ட சேவகரை வாளினால் சிதையவே கொன்றேனடா 

சூரன்: குந்தனே உனை அழித்திட வச்சிர வச்சிரவாகுவெனும் கூற்றுவனும் வந்தானடா

வீரபாகு: கொடு வச்சிரவாகுவைக் கொன்று அவனை கம்பமாய் கொண்டேறி நின்றேனடா

   - சூரன் வீரபாகு தர்க்கம், கடலூர் வண்டிப்பாளையம் பிரதி 

ஆடல் : தொடர்


தாமரைக்கண்ணன் புதுச்சேரி

தாமரைக்கண்ணன் புதுச்சேரி