Showing posts with label நரிக்குறவர். Show all posts
Showing posts with label நரிக்குறவர். Show all posts

Saturday, 29 July 2023

வாக்ரிவாளோ - கரசூர் பத்மபாரதி

நரிக்குறவர்களின் பூர்வீகம்

ஒரு சமூகத்தைப் பற்றிய இனவரைவியல் (ethnography) செய்திகளை இரண்டு நிலையில் அறியலாம். அவை எழுதப்பட்ட நிலை, எழுதப்படாத வாய்மொழி நிலை. இவர்கள் மகாராஷ்டிரா, குஜராத், மேவார் போன்ற வட மாநிலங்களிலிருந்து தமிழ் நாட்டுக்குக் குடி பெயர்ந்து வந்திருப்பர் என்பது எழுதப்பட்ட நிலையிலும், நரிக்குறவர் கூறும் வாய்மொழிக் கதைகளிலும் தெரிகிறது. நரிக்குறவ மக்களைப் பற்றிய எழுத்துவழிச் செய்திகள் மிகச் சிலவே.

'குருவிக்காரர் மராத்தி பேசுகின்றனர். பறவைகள் பிடிப்பார்கள், பிச்சையெடுப்பார்கள். இவர்கள் நரியினை வேட்டையாடி அதன் தோலில் பை செய்வதோடு, அதன் இறைச்சியினையும் உண்கின்றனர். இவர்களை ஜாங்கள் சாதி எனவும், காட்டு மராத்தி எனவும் அழைப்பர். இவர்கள் தங்களை வகிரி அல்லது வகிரிவாலா எனக் கூறிக்கொள்வர். 'எத்து மறிக்கே வேட்ட காண்டுலு' எனவும் இவர்கள் வழங்கப்படுகின்றனர். எருதுகளின் மறைவில் நின்று வேட்டையாடுபவர்கள் என்பது இதன் பொருள். பறவைகளை அகப்படுத்த இவர்கள் எருதுகளின் மறைவில் நின்று பறவைகளைப் போலவே குரல் கொடுப்பர்' என்று எக்டர் தர்ஸ்டன் கருத்துப்படியும், நரிக்குறவர்கள் கூறும் புலப்பெயர்வுக்கான காரணக் கதையின்படியும் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும், மராத்தி பேசும் மக்களாகவும் நரிக்குறவர்களைக் கொள்ளலாம்.