Showing posts with label சங்ககாலம். Show all posts
Showing posts with label சங்ககாலம். Show all posts

Saturday, 8 June 2024

சங்கத் தமிழில் கடவுளர் - மு. சண்முகம் பிள்ளை

இந்திரன்


இந்திரன் வானுலகத் தேவர்களின் அதிபதி. 'துறக்கத்து அமரர் செல்வன்' (பரி.5:69), ’அமரர் செல்வன்’ (பரி.5:51), ’வானத்து வளம்கெழு செல்வன்' (பரி.5:59), 'அருநிலை உயர் தெய்வத்து அணங்கு' (பரி.9:12), ’விண்ணோர் வேள்வி முதல்வன்’ (பரி.5:30), என்று சிறப்பிக்கப்படுகின்றான். இவன் வடபால் உயர்ந்தோங்கியுள்ள பெருமலையைக் காவல் புரிபவன் (பரி.9:1-3). நூறு வேள்விகளைப் புரிந்தவன். அதனால் விளைந்த பகைவரை வென்று கொல்லும் வெற்றி படைத்தவன் (முருகு.155-156). ஆயிரம் கண்களை உடையவன் (முருகு155; கலி.105,15; பரி.9-9). பகைவர்களை வருத்தும் இயல்புடைய வச்சிராயுதத்தைக் கையில் ஏந்தியவன் (புறம்.241:3, படி.18:30, கலி.105:15), நெடியோன் என்றும் இவன் குறிக்கப்படுகிறான் (புறம்.241:3). நான்கு கொம்புகள் படைத்த யானையின் பிடரியில் ஏறி நடத்துபவன்.

Sunday, 28 April 2024

சங்கத் தமிழில் வேதநெறி - மு. சண்முகம் பிள்ளை


மறை, வேதம், வாய்மொழி (பரி.3:11-12), எழுதாக் கற்பு (குறுந்.156), கேள்வி (பதிற்.21:1, பரி.2:24,61;3:48, பரி.தி.1:19), முதுமொழி (பரி.3:42,47;8:11;13:10), முதுநூல் (புறம்.166.4) என்றெல்லாம் ‘வேதம்’ சங்க இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது. நான்கு கூறுபாடாக அமைந்தது. ஆறு அங்கத்தாலும் உணரப்பட்டது. பழமையான ஒரு நூல் (புறம்.166:3-4), அருமறை (பரி;1:13,2:57,3:14,4:65), நான்மறை (புறம்.26:13;93:7;362:9; பரி.9:12), நால் வேதம் (புறம்.2:18;15:17), அருமை நான்கு என்னும் அடை மொழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தணரால் ஓதப்படுவது என்னும் கருத்தில் அந்தணர் வேதம், அந்தணர் வேதம் (மது.654-656), அந்தணர் அருமறை (பரி1:13,2:57, 3:14, 4:65), அந்தணாளர் நான்மறை (புறம்.363:8-9), என்றும் குறிக்கப்படுகிறது. நீண்ட சடையையுடைய முதுமுதல்வனது வாக்கை விட்டு நீங்காது உறைவது வேதம் (புறம்.166:12), இது எழுதாமல் செவிவழிக் கேட்டுக் கற்கப்படும் நூல் (குறுந்.156:5). வேதம் இசையோடு பாடப்பெறுவது என்பது,

தாதுஉண் பறவை போது முரன்றாங்கு
ஓதல் அந்தணர் வேதம் பாட (மதுரைக்காஞ்சி 655-656)

என்பதனால் விளங்கும். 'சிறந்த வேதம் விளங்கப் பாடி” (மதுரைக்காஞ்சி.468) என்னும் மதுரைக்காஞ்சித் தொடருக்கு, ''அதர்வ வேதம் ஒழிந்த முதன்மைப்பட்ட வேதங்களைத் தமக்குப் பொருள் தெரியும் படி ஓதி' என்று பழைய உரைகாரர் பொருள் எழுதியுள்ளார். இங்கே 'சிறந்த' என்பது வேதங்கள் நான்கையும் குறிக்கும் பொது அடை மொழியாகவும் கொள்ளத்தக்கது. ஆயினும், வேதங்களுள் சாமவேதம் சிறப்பாகக் கூறப்படுவதனாலும் வேதங்களுள் கானம் செய்யப்படுவதற்கு ஏற்ப அமைந்தது இதுவே ஆதலானும், 'சிறந்த வேதம் என்னும் அடைமொழியும் ’'பாடி” என்னும் தொழிலும் குறிக்கப்பெறுவதனாலும் இது சாமவேதத்தைக் குறிப்பதாகக் கருதலாம் என்று தோன்றுகிறது.