Tuesday, 27 May 2025

அரசியல் முரண்பாடுகளின் ஆதாரம் அரசியலில் மட்டும் இல்லை. அதற்கான வேர் சமூகத்திலும் பண்பாடிலும் பிணைந்திருக்கிறது - ஸ்டாலின் ராஜாங்கம் நேர்காணல்- 2

ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின் ராஜாங்கம் தமிழ் சமூகவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வாளர், செயல்பாட்டாளர். இலக்கிய ஆய்வாளர், ஊடக ஆய்வாளர். தலித் வரலாற்றை மீட்டெழுதுவதில் பெரும்பங்கு வகிக்கும் முன்னணிச் சிந்தனையாளர். கல்வியாளர். தமிழில் இன்று தலித் ஆய்வுகளில் ஒலிக்கும் முதன்மைக்குரலாக ஸ்டாலின் ராஜாங்கம் திகழ்கிறார். ஸ்டாலின் ராஜாங்கத்தின் அயோத்திதாசர் ஆய்வு, விடுபட்ட தலித் ஆளுமைகளின் மீதான ஆய்வு, தமிழ் சினிமாவில் உள்ள பண்பாட்டு கூறுகள் குறித்து என பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. தொடர்ந்து பண்பாட்டு ஆய்வு கட்டுரைகள் இலக்கிய இதழில்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. காலச்சுவடு இதழ் உட்பட இலக்கிய இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி வருகிறார். 

ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முன்னூர்மங்கலம் என்னும் ஊரில் 19-7-1980 பிறந்தார். தந்தை ராஜாங்கம், அன்னை காளியம்மாள். மனைவி பூர்ணிமா. மகன்கள், புத்தமித்ரன், ஆதன் சித்தார்த். தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணிபுரிகிறார்.

ஸ்டாலின் ராஜாங்கம்- தமிழ் விக்கி


ஆய்வு முடிவுகள் மட்டும் முக்கியமானவை இல்லை, முடிவுகளை வந்தடைவதற்கான முறைகளும் முக்கியமானவை- ஸ்டாலின் ராஜாங்கம் நேர்காணல் பகுதி- 1

சுனில்: உங்கள் புத்தகங்களை ஆரம்பத்திலிருந்து பார்க்கும்போது, இப்போது அயோத்திதாசர் பற்றி எழுதி இருக்கிற “மருத்துவர் அயோத்திதாசர்” அப்புறம் “பண்பாட்டு பலகணிகள்” வரை நீங்கள் எழுதியதிலேயே ரொம்ப ஆன்மீகமான புத்தகங்களாக நான் பார்க்கிறேன். ஒரு பொலிடிகல் நரேடிவ்ல இருந்து ஒரு ஸ்பிரிசுவல் நரேடிவ நோக்கி போகிறதா சொல்லலாம். இந்த இடத்துக்கு எப்படி வந்தீங்க?

முருகன்: இதோட எனக்கும் ஒரு கேள்வி இருக்கு. ஸ்டாலின் ராஜாங்கம் ஒரு பண்பாட்டு ஆய்வாளர் என்று அறியப்படுவதாக இருக்கீங்க. ஆனால் அதுக்கு மேலே நீங்க ஒரு அரசியல் விமர்சகர். அரசியல் விஷயங்களை பேசத் தொடங்கி அங்கிருந்து அயோத்திதாசர், அயோத்திதாசர் வழியா பண்பாட்டு ஆய்வுங்குற வேற ஒரு தளத்துக்கு போயிருக்கீங்கனு எனக்கு தோன்றுகிறது.அதை நீங்க எப்படி விளக்குறீங்க?

மரப்பாச்சி நண்பர்கள்: இந்தக் கேள்விகளின் தொடர்ச்சியாக இன்னொரு கேள்வி. இப்போ நீங்க சொல்கிற மாதிரி பார்த்தால் அயோத்திதாசர் ஒரு அரசியல் தன்மை உள்ளவரா, பண்பாட்டு தன்மை உள்ளவரா என்று சந்தேகம் எழுகிறது.ஏனென்றால் அவருடைய ஐடியாவே ஒரு விஷயத்தை தொடர்ந்து சொல்றதன் மூலமா அதை உண்மை ஆக்க முடியும், இருக்குற விஷயத்தை சொல்லாம இருக்குறதன் மூலமா அதை பொய் ஆக்க முடியும் என்பது தான். அப்போ இதை ஒருத்தன் ஃபாலோ பண்ணுனான்னா ஒரு பக்கா கிரிமினல் ஆகிடுவான். ஒரு அரசியல்வாதி கூச்ச நாச்சமே இல்லாம பொய் சொல்றதுக்கும்,ஒரு சாமானியன் ஒரு சின்ன விஷயத்தை சொன்னாலே புண்படுறதுக்கும் இது பயன்படும். இதை நீங்க கருத்துல எடுத்து அயோத்திதாசரை ஆய்வு செய்றீங்களா? இப்போ ஏற்கனவே நிறைய பிரச்சினைகள் இருக்கும் போது, இந்த வாதம் எதிர்வாதம்ங்குறது மேலும் சிக்கல்களை உண்டாக்கக்கூடியதா இருக்காதா? இல்லை இதை ஒரு தற்காப்பு மாதிரிதான் பாக்குறீங்களா?


ஸ்டாலின்: நாம் வாசிப்பது மாதிரி பண்பாடு, சமயம்,அரசியல் என்று பிரித்து தனித்தனியாக சிந்தித்து இயங்கியவர் இல்லை அயோத்திதாசர். இவை எல்லாமே அவருக்கு ஒன்று தான். எல்லா பார்வைகளும் ஒன்றோடொன்று பிணைந்து தான் வெளிப்பட்டிருக்கிறது. எனினும் நான் அவருடைய அரசியல் பகுதிகளை ரொம்ப பேசுவது இல்லை. ஏனென்றால் அது ஏற்கனவே தெரிந்ததாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியலாகவும் இருக்கிறது. பழகிய அரசியல் வழியாக அயோத்திதாசரை அறிமுகப்படுத்தினால் சிக்கல் இல்லாமல் ஏற்றுக்கொள்ளபவர்கள் இருப்பார்கள். அவர் தீவிர பிராமண எதிர்ப்பாளர். அதேபோல தீவிர பிரிட்டிஷ் ஆதரவாளர். அவருடைய அரசியல் பகுதி கிட்டத்தட்ட பெரியாருடைய அரசியல் மொழிக்கு நெருக்கமாக இருக்கும். பெரியாரை அயோத்திதாசருடைய தொடர்ச்சி என்று இந்த அடிப்படையில் குறிப்பிடலாம். ஆனால் அவரிடம் அரசியல் மட்டுமல்லாமல் சமூகம், பண்பாட்டு பார்வை எல்லாம் பிணைந்து தான் இருக்கின்றன. சில கட்டுரைகளில் அரசியல் பிரச்சினைகளை எழுதுவார். சில கட்டுரைகளில் சடங்கு பற்றி எழுதுவார். சில கட்டுரைகளில் இரண்டும் கலந்து கட்டி இருக்கும். இவற்றில் நான் ரொம்ப முக்கியமாக நினைப்பது பண்பாட்டு பற்றிய எழுத்துகளை தான். ஒருவேளை அவருடைய அரசியல் பகுதிகளை மட்டும் முன்வைத்து பேசியிருந்தால் எனக்கு இப்போது வந்திருக்கிற கெட்ட பெயர்களிலிருந்து கூட தப்பித்து இருக்கலாம். ஆனால் நான் ஏன் பண்பாட்டு விளக்கங்களை முக்கியமாக நினைக்கிறேன் என்பதை சொல்ல வேண்டுமானால், இவ்விடத்தில் முருகன் கேட்ட கேள்வியையும் இணைத்து யோசிக்கலாம்.

நான் ஆரம்ப காலத்தில் அரசியல் பிரச்சினைகளை பின்தொடர்ந்து அதற்கு என்ன தீர்வு என்று யோசிக்கக்கூடியவனாகவே இருந்தேன். “சாதியம் கைகூடாத நீதி” நூலை அந்த வகையில் கூறலாம். அதேவேளையில் எனக்கு பிடித்த நூல் அது. அப்புறம் ஆணவக் கொலைகளின் காலம் நூலை கொணர்ந்தேன். அரசியல் சார்ந்து எழுத எனக்கு இன்னும் எவ்வளவோ இருக்கிறது. ஆனால் அதை ரொம்ப குறைச்சுகிட்டேன். முதல் காரணம் என்னவென்றால் அரசியல் பிரச்சினைகளை எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். இரண்டு, அரசியல் ரீதியான முரண்பாடுகளின் ஆதாரம் அரசியல் ரீதியானது மட்டும் இல்லை. அதற்கான வேர் சமூகம் பண்பாடு போன்றவற்றோடு பிணைந்திருக்கிறது. இதனை ஸ்டாலின் என்ற தனிநபர் கண்டுபிடிக்கவில்லை. என்னுடைய வாசிப்பு வழியாகத்தான் இப்போது இந்த புரிதலுக்கு வருகிறேன். இப்போது நான் ஆணவக் கொலைக்கு எதிராக ஒரு கட்டுரை எழுதுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். “இப்போக்கு மாற்றப்படணும். அரசு இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று எழுதுகிறேன். அவ்வாறான எழுத்துகள் தேவை என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் எங்கே சிக்கல் வருகிறதென்றால் ஒரு மாதம் கழித்து இன்னொரு ஆணவக்கொலை நடக்கிறது. நான் ஏற்கனவே எழுதியதற்கு எந்த தீர்வும் வரவில்லை அல்லது அத்தீர்வு குறிப்பிட்ட பிரச்சினையை முற்றிலும் ஒழிப்பதில்லை என்பதை பார்கிறோம். சாதிரீதியான வன்முறைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. இதற்கான தீர்வு அரசியல் தளத்தில் நடக்கணும். ஆனால் அது உடனடியானது. அதேவேளையில் பிரச்சினையின் மொத்த வேரையும் அது அழிக்காது. பிரச்சினையின் வேரோடு தொடர்புடைய சமூக பண்பாட்டு தளத்தில் அவற்றை புரிந்துகொள்வதற்கும், எதிர்கொள்வதற்கும் தீவிரமாக வேலைகள் நடக்க வேண்டும். பிறகு அதன் தாக்கம் இங்க வரணும். அதேவேளையில் அத்தாக்கம் உடனடியானதாக இருக்காது. அதுக்கு கொஞ்சம் நாள் ஆகும்.

எனவே சமூக பாகுபாடுகளுக்கு எதிரான வேலைகள் எல்லா தளத்திலும் யோசிக்கப்பட வேண்டும். சட்ட நடவடிக்கைகள் உடனடியாக நடக்கவேண்டும். ஆனால் அது மட்டும் நடந்துகிட்டு இருந்தால் பிரச்சினைகள் நிற்க போவதில்லை. இதனை செய்கிறவர்கள் யார்? அவர்களுடைய மனநிலை என்ன?, சமூகத்தைப் பற்றின அவர்களுடைய புரிதல் என்ன?, சமூகப் பார்வை என்ன?, உளவியல் என்ன? என்பவை மாதிரியான விசயங்களை புரிந்து யோசிக்க வேண்டும். அவற்றை புரிந்து கொள்வதன் வழியாக தான் அவற்றை மாற்றுவது பற்றியும் யோசிக்க முடியும். இதெல்லாம் நடக்காத வரைக்கும் தண்டனைகளால் மட்டுமே ஒரு சமூகத்தை மாற்ற முடியாது. இத்தகைய மாற்றங்களை அரசியல் தளத்தில் இருப்பவர்களால் செய்யமுடியாது. அவர்கள் பிரச்சினைகளை புரிந்துகொள்ளாததால் அல்லது அரசியல் ரீதியாக மட்டுமே புரிந்துகொண்டிருப்பதால் புதுப்புது சட்ட விதிகளையும் தண்டனைகளையும் தான் தீர்வாக உருவாக்குவார்கள். எவ்வளவு பேருக்கு இவ்வாறு செய்து கொண்டே இருக்க முடியும்? முரண்படுகிற சமூகங்களுக்கு இடையில் ஏன் பிரச்சனை என்று பார்க்க வேண்டும். அவ்வாறெல்லாம் பார்த்தால் தான் பண்பாட்டுத் தள வேலைகள் ஆரம்பிக்கும். நான் முன்பே சொன்னது போல இன்றைக்கு முரண்பட்டு கிடக்கிற இரண்டு சமூகக் குழுக்கள் எப்படி ஒரு காலத்தில் ஒன்றாக இருந்தார்கள்? எப்போதிருந்து முரண்பாடு தொடங்கியது என்றெல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறது.

இந்த திசையில் எது ஆதாரமாக, வேராக இருக்கிறது என்று டிஸ்கஸ் பண்ணி பார்க்க முயற்சிக்கிறேன். மதம் பற்றி, மதம் உருவாக்கக் கூடிய கதைகள் பற்றி, கதை செய்கிற ரசவாதம் பற்றி. இப்படி நான் போகும்போது, எனக்கு இந்த அரசியல் விஷயங்களைப் பற்றி எழுதுவதற்கான அவகாசம் குறைந்து போகிறது. மேலும் எனக்கே ஒரு கட்டத்தில் சலிப்பு வந்து விடுகிறது. ஒரு வன்முறை நடக்கும்போது அதை நிறுத்துவதற்கான பலம் நம்மிடம் இல்லை. ஆனால் அதை பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறோம். வன்முறைகள் நடக்க நடக்க எழுதிக் கொண்டே இருப்பது தான் நம் வேலையா? அதனால் தான் வேறு மாதிரி யோசிக்க விரும்புகிறோம். குறைந்தபட்சம் அறிவுத் தளத்திலேயாவது இந்த முரண்பாடுகளை புரிந்து கொள்வதற்கு சில தேடல்களை சில ஆய்வுகளை சில உரையாடல்களை தொடங்கி வைக்க முயற்சி செய்வோம். அப்படி தான் படிப்படியாக நான் பண்பாட்டு ஆய்வுகளுக்கு உள்ளே போய் செட்டில் ஆகிட்டேன். ஒரு எழுத்தாளராக தனிப்பட்ட முறையில் இதில் இருக்கும் சிக்கலும் எனக்கு புரிகிறது.ஒரு காலத்தில் அன்றாட வன்முறைகள் சார்ந்து தீவிரமாக எழுதிட்டு இருந்த மாதிரி இருக்கலாம். அதனால் எனக்கு கிடைத்திருக்கக் கூடிய அடையாளங்கள் இப்போது இல்லை தான். ஆனால் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஒவ்வொரு பிரச்சினை வரும் போதும் இதைப் பற்றி ஸ்டாலின் இதை சொன்னார் என்பதற்காக சடங்கார்த்தமாக சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா? அவ்வாறு செய்திருந்தால் தினமும் என் பெயர் வந்துக் கொண்டேயிருக்கும். அரசியல் வேறு பண்பாடு வேறு இல்லை. இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் என்னுடைய பயணம் இயல்பாகவே அந்த பக்கம் போய்விட்டது. ஆனால் நான் என்னை எப்போதுமே ஒரு விமர்சகன் என்று தான் சொல்லுவேன். விமர்சனத்தில் எழக்கூடிய கேள்விகள் தான் ஆய்வுக்கே இட்டுச் செல்கிறது. இங்கிருக்கக் கூடிய போதாமை மீதான விமர்சனம் தான் நம்மை ஆய்வை நோக்கி இட்டுச் செல்லுகிறது.

சித்ரன்: பெரியார், திராவிடர் கழகம் எல்லோருக்குமே இந்த ஜாதியைப் பற்றின புரிதல் தொடங்குற இடம் மாசிலாமணியுடைய “வர்ண பேத விளக்கம்” நூலிருந்து தான். இங்க எல்லா விஷயங்களுக்கும் பிராமணர்களை கை காட்டிட்டு போவது இருக்கிறது. அது எந்த அளவுக்கு சரின்னு நீங்க நினைக்குறீங்க. ஏன்னா இங்கே தலித்துகளுக்கு எதிரான பெரும்பாலான வன்முறைகள் இடைநிலை சாதிகளிடம்ருந்து தான் வருது.

ஸ்டாலின்: இந்த பிராமண எதிர்ப்பு, வர்ணம், இதெல்லாம் அரசியல் தளத்தில் பேசப்படுகிற அளவுக்கு சமூக தளத்தில் இல்லை. இப்போது சாதி முரண்பாடுகளை அரசியல் தளத்தில் விளக்குகிறவர்கள் மட்டும்தான் வர்ணம் என்பதையும், பிராமணர்கள் என்பதையும் வேதம் என்பதையும் பேசிக் கொண்டு இருக்கிறார்களே தவிர இவை சமூகத்தில் ஆதிக்கம் புரிகிற சாதிக்கோ ஆதிக்கத்தை சந்திக்கிற சாதிக்கோ தெரியாது. களத்தில் இரண்டு சாதிகளுக்கு இடையில் இருக்குற பிரச்சினையாக தான் இருக்கு. இங்கு என்ன நடக்கிறது? ஊரில் வாழும் சாதாரண தலித், அதே ஊர்ல வாழுற இன்னொரு அதிகார சாதியினரைப் போல நாமும் கோயில் கட்டணும், வீடு வாங்கணும், உடுத்திக் கொள்ள வேண்டும், அவங்களைப் போல வாழ்ந்து காட்டணும். இதுதான் ஒரு சராசரி தலித் தன்னை வைச்சுக்க விரும்புற நிலை. இப்படித்தான் ஒவ்வொரு சாதியும் தங்களுக்கு எதிரில் இருக்குற சாதியை வைத்து தங்களை டிசைன் பண்ணிக்க விரும்புகிறார்கள். இதில் சனாதனம், வர்ணம், பிராமணர்கள் இதற்கெல்லாம் எந்த ரோலும் இல்லை. அங்கெல்லாம் போய் யாரும் பேசுவதும் இல்லை. தி.மு.க, - அ.தி.மு.கவில் இருக்கிறவர்கள் கூட பரப்புவதில்லை. அவையெல்லாம் சும்மா உச்சரிக்கக்கூடிய வார்த்தைகளாக தான் இருக்கு. 

ஆனால் தமிழ்நாட்டில் எது நடக்காமல் போய் விட்டதென்றால் ஆதிக்க சாதிகளுக்குள் மாற்றம் வரவே இல்லை. அந்த சாதிகளிலிருந்து படித்து, யோசிக்ககூடிய சில முற்போக்கான சிந்தனையுடையோர் வந்திருக்காங்க. ஆனால் சமூகத்திற்குள் குறிப்பிடும்படியாக மாற்றம் வரவில்லை. தமிழ்நாடு மாதிரியான மாநிலத்தில் பெரிய மாற்றம் வந்திருக்கணும். ஆனால் நடக்கவில்லை. அதிகார சாதிகளிடம் உரையாட ஒரு தரப்பு இங்கே உருவாகாமல் போய்விட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகளில் அதற்கான முயற்சிகள் இருந்தன. ஆனால் இப்போது அவர்கள் செல்வாக்கோடு இல்லை. ஆனால் இவற்றில் இரண்டு பேரை முக்கியமாக பார்க்கிறேன். ஒன்று காந்தி. இன்னொன்று பெரியார். இருபதாம் நூற்றாண்டு நவீன அரசியல்வெளியில் தன் தரப்பிலிருந்து கொண்டு மற்றொரு தரப்பிடம் உரையாடுகிற தன்மை இவர்களிடம் இருந்தது. காந்தியைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. அவருடைய மொத்த பிராசஸ்லேயுமே அது இருக்கு. காந்தி அளவுக்கு வொர்க் பண்ணாவிட்டாலும் கூட, பெரியார் என்ன பண்ணாருன்னா, பிராமணரல்லாதார் எல்லோரையும் ஓரளவு இணைக்க முடிந்தது. “பறையன் பட்டம் போகாம, சூத்திரன் பட்டம் போகாது” என்று அவரால் சொல்ல முடிந்தது. அவங்களுக்கு அப்புறம் அவ்வாறான குரல் பெரிய அளவில் உருவாகவே இல்லை. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இன்றைக்கு ஒரு பிரச்சனை நடந்த பிறகு அங்கே போய் வேலை செய்கிறார்கள். அவ்வளவுதான். மொத்தத்தில் முரண்படும் சமூகங்களோடு தொடர்ந்து உரையாடுவதற்கும். அதன் வழியா சமூகக் குழுக்களுக்கு இடையிலான கூட்டுணர்வை உருவாக்குவதற்கும் எந்த முயற்சிகளும் இல்லாம போய்விட்டது.

இந்த போக்கு எந்த அளவுக்கு ஆகிவிட்டதென்றால் தலித் சமூகக் குழுக்களுக்கு இடையில் கூட உரையாடல் இல்லாத அளவுக்கு ஒரு சூழல் உருவாக காரணம் ஏற்பட்டு விட்டது. அது நடந்திருந்தால் ஒரு மாற்றத்தைக் கொடுத்திருக்கும். இன்னைக்கு ஒரு பிரச்சினை நடந்துச்சுன்னா களத்துக்கு வந்து நிக்குறதுக்கு ஒரு ஆள் இல்லையே. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இயக்கம் இல்லையே. குறைஞ்சபட்சம் கி.வீரமணி கூட வர மாட்டேங்குறாரே. கி.வீரமணி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆள் இல்லைன்னாலும், தி.க.வை தாய் கழகம் என்று சொல்லிக் கொள்வதால் வரலாமே. ஒரு இந்து அமைப்பு – நாங்கள் எல்லோரையும் இந்துக்களாகத்தான் பார்க்குறோம் என்று சொல்கிற இந்து அமைப்புகள் கூட பிரச்சினை நடக்கிற இடத்திற்கு போய் பேசவோ நிற்கவோ செய்வதில்லையே.

கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ‘பெரிய’சண்டைகள் வர வில்லை என்றாலும் கூட சண்டை வருவதற்கான எல்லா சூழல்களும் நிறைந்து கிடக்கிறது. இவர்கள் கிட்ட உரையாடல் நிகழ்த்துவதற்கு யாருமே இல்லை. சமூகம் வெகு விரைவாக சாதிமயமாகிக் கொண்டிருக்கிறது. இப்போது கிராமங்களில் சாதி கயிறோ, பனியனோ, விளையாட்டோ, சாதி வாட்ஸப் குரூப்போ இல்லாமல் போகவில்லையே. நம் சமூகத்தில் என்ன நடந்திருக்கணும்? இதெல்லாம் மாறியிருக்கணும். ஆனால் இந்த சாதிக் குழுக்கள் இன்றைக்கு பெரிய கட்சிகள்கிட்ட பேரம் பேசுகிற அளவுக்கு வந்திருக்காங்க. அதில் ஒரு நாலு பேர் மந்திரிகள், நாலு பேர் எம்.எல்.ஏ, நாலு பேர் காண்டிராக்டர் இப்படி வளர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் இந்த ஜாதிக் குழுக்கள் வெற்றி பெறுவதில்லை என்று நினைக்கிறார்கள். 

சாதி ஒழிப்பு அல்லது சாதி எதிர்ப்போடு சம்பந்தப்பட்டிருந்த தலித் குழுக்களுக்குள்ளே கூட, நாம் சாதியாக ஒன்று திரண்டால் தான் சர்வைவ் ஆக முடியும் என்று எண்ணும் சூழல் எழுந்திருக்கிறது. இதையெல்லாம் யோசிப்பதை விட்டுட்டு நாம் என்ன செய்கிறோம் என்றால் ஒப்பீட்டு அரசியலை கண்டுபிடித்துக் கொள்கிறோம். ஒப்பீடு செய்வதே ஒரு அரசியல் தான். நம்மை விட மோசமாக இருப்பதோடு ஒப்பிட்டு நம்மை மேலானவர்களாக காட்டிக் கொள்வதைக் காட்டிலும், நம்மை விட சிறப்பாக இருப்பதோடு ஒப்பிட்டுக் கொண்டால் தான் நாம் வளர்ச்சி அடைவோம். நாம் என்னென்ன வேலைகளை செய்திருக்கிறோம், எவற்றையெல்லாம் செய்ய தவறியிருக்கிறோம் என்ற சுய பரிசீலனை இங்கில்லை.

நான் கிராமங்களுக்கு போகும் போது மாணவர்கள் என்ன மாதிரி மனநிலை இருக்கிறார்கள் என்பதை அறிய அவர்களிடம் பேசிப் பார்ப்பேன். ஆசிரியர்களுக்கு சுதந்திரம் வேண்டுமென்று முன்பே சொன்னேன் இல்லையா. ஆனால் வகுப்பறைகளில் சில விஷயங்களை சுதந்திரமாக பேசுறதுக்கே பயமா இருக்கு. மாணவன் என்ன மனநிலையில் இருப்பான் என்றே தெரிவதில்லை. நாங்குனேரியில் நடந்த விஷயம் ஒரு உதாரணம். அந்த வட்டாரமே அப்படி தான் இருக்கிறது. இவ்வாறு ஏன் நடக்கிறது? இவற்றில் கட்சிகளுக்கு என்ன பங்களிப்பு? இதை பற்றியெல்லாம் தமிழ் ஆய்வுலகத்தில் எந்த விதமான ஆய்வும் இல்லை. 

இன்றைய கள எதார்த்தத்தில் தொடங்கி எதைப் பற்றியும் பேசலாம். நான் என் கட்டுரைகளில் இக்கருத்தை தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இன்றைய கள எதார்த்தத்தை எதிர்கொள்வதற்கோ, புரிந்து கொள்வதற்கோ பயன்படாமல் வரலாற்றை கடந்த காலத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது.நூறு வருஷத்துக்கு முன்னாடி வைக்கம் நடக்கட்டும், நவகாளி நடக்கட்டும். நான் அதை மறுக்கவில்லையே. இன்றைக்கு என்ன நடக்கிறது என்பதையும் சேர்த்து பேசுங்கள் என்கிறேன். 

கள ஆய்வில் ஸ்டாலின்
சுனில்: ஆனால் இன்றைக்கு ஒரு வாதத்திற்கு என்ன சொல்றாங்கன்னா: இந்த மோதல் போக்கு எல்லா காலத்துலேயுமே இருந்தது; இப்போ சமூக ஊடகங்களால அது பெருசா தெரியுது, நீங்க அதை மிகைபடுத்துறீங்க அப்படின்னு சொல்றாங்க. ஆனால் நான் இதை எப்படி பார்க்குறேன்னா, இந்த துருவப்படுத்துதலுக்கு இந்த டெக்னாலஜியை ரொம்ப சாதகமா பயன்படுத்திக்குறாங்க அப்படின்னு நினைக்குறேன். இதை பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க?

ஸ்டாலின்: இன்றைய இந்த சமூக வலைதள யுகம் பற்றி நம்மிடமிருந்து பெரிய பெரிய ஆய்வுகள், விவாதங்கள் வந்திருக்கணும். புதிய மீடியா வரும்போது அதையொட்டி உருவாகிற மாற்றங்கள், உளவியல் பற்றிய ஸ்டடியெல்லாம் வரும். ஆனால் அப்படியான சிந்தனை பின்புலமே இங்கு இல்லாமல் போய்விட்டது. சமூக வலைதளங்கள் வந்த பின்னாடி அறிவு பரவலாகுது, நாம ஒரு இடத்துல இருந்தே இன்னொரு இடத்தை பார்க்குறோம் என்றால் நம்முடைய சிந்தனையும் விசாலப்பட்டிருக்கணும். ஆனால் அப்ப கும்பல் சேர்ப்பது தான் புதுவிதமாக அதிகரித்திருக்கிறது. கூட்டம் சேர்ப்பது என்றால் கண்ணுக்குத் தெரிகிற கூட்டம் இல்லை. வாட்ஸாப் வழியா சேர்க்குறது. என்னைகூட இப்படி ஒரு கல்யாண குரூப்ல சேர்த்திருக்கிறார்கள். என்ன நடக்கிறதென்றால் கன்னியாகுமரியில் இருப்பவரும், காரைக்குடியில் இருப்பவரும், தர்மபுரியில் இருப்பவரும் ஒரே நேரத்தில் கண்ணுக்குப் புலப்படாமல் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளாமலே ஒருங்கிணைகிறார்கள். ஒரே கருத்துள்ளவர்களிடையே மட்டும் உரையாடல் நடக்கிறது. ஒரு சாதியை ஒட்டி ஓரிடத்தில் உருவாக்கப்படும் கருத்து எல்லா இடத்திற்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி பரவுகிறது. ஒருவர் போஸ்ட் போட்டால் ஒத்த கருத்துடையவர் லைக் போடுவார், பிறகு இவருக்கு அவர் அவரு லைக் போடுவார். இப்படியே ஒரு டீம் உருவாகி கொள்கிறது.இப்படி இவர்கள் கும்பலாக தான் உருவாகிறார்கள். இப்போக்கு சாதி கும்பல்களுக்கு அதிகம் உதவி செய்கிறது.

சுனில்: அதாவது எதிர் கருத்தை கேக்குறதே இல்லை.

ஸ்டாலின்: ஆமாம். உரையாடலே இல்லாம போய்விடுகிறது. வெளிப்படையான தீட்டு, ஜாதி எல்லாம் வேற ஒரு வடிவத்தை எட்டியிருக்கு. இவ்வாறு வெளிப்படையாக இல்லாமல் இருப்பதை தான் ஜாதி இல்லாம போய்விட்டது என்பதற்கான உதாரணமாக காட்ட விரும்புகிறார்கள். இன்றைக்கு பெரும்பாலும் யாரும் வெளிப்படையாக நீ வேற ஆளு, தள்ளி நில் என்று சொல்வது இல்லை. ஆனால் ஒரு மனிதன் அதிகாரத்தை கட்டமைத்துக்கொள்கிற வழி சாதியை ஒட்டி அமைய முடியும் என்ற புரிதல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. அதாவது சாதி என்பது ஓர் அதிகாரம் என்ற புரிதல் அடிப்படையில் இன்றைக்கு கையாளப்படுகிறது. இவ்வாறு கையாளப்படுவதற்கு வெளிப்படையான தீட்டு போன்ற அம்சங்கள் தேவையில்லை. இன்றைய சமூக வலைதள யுகம் ஒரு வகையில் ஜாதியை வெளிப்படுத்துபவர்களை அடையாளம் காண உதவியிருக்கிறது. அதே நேரத்தில் ஒரு பிரச்சினை உடனடியாக வெளி தெரியவும், நடவடிக்கைகள் எடுக்கவும் உதவியிருக்கிறது. தலித் உள்ளிட்ட எந்தவொரு ஒடுக்கப்படுற சமூகத்திற்கும் ஒரு ரெசிஸ்டன்ஸ் உருவாகவும் இச்சூழல் உதவி இருக்கு. ஆனால் இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு எதிர் தரப்பு ஒருங்கிணைப்பு ஆகவும் இது உதவி இருக்கிறது. நாம் இதனை தீவிரமாக எடுத்து அணுக வேண்டும்.

நான் இன்னொன்றும் சொல்வேன். மனுதர்மம் இருந்தால் சாதியை ஒழிக்க முடியாது, முதலாளித்துவம் இருந்தால் சாதியை ஒழிக்க முடியாது என்றெல்லாம் சொல்வது மாதிரி இன்றைய தேர்தல் முறை இருந்தாலும் ஜாதியை ஒழிக்க முடியாது. இந்த தேர்தல் அமைப்பு முறைக்குள் இருந்து கொண்டு நான் சாதியை ஒழிப்பேன் என்று சொல்வதெல்லாம் சாத்தியமே இல்லை. இன்றைய இந்தியாவில் சாதி தான் மூலதனம். சில விதிவிலக்கான ஆட்கள், இடங்கள் தவிர. எனவே இன்றைய எந்த அரசியல் இயக்கமும் சாதி ஒழிப்பை பற்றி தீவிரமாக எடுத்துக் கொள்வதே இல்லை. இது தலித் இயக்கங்களுக்கும் பொருந்தும். விடுதலை சிறுத்தைகள் இயக்கம் கூட சாதி ரீதியான வாக்காளர்கள், தொகுதிகள், வேட்பாளர்கள் என்று தானே இயங்குகிறது. எனவே இன்றைய தேர்தல் லாப-நட்ட கணக்குகளை யோசிக்காத ஒரு தலைமை தான் இவற்றையெல்லாம் யோசிக்க முடியும்.

சுனில்: இப்போது எத்தனை சீட்டு ஜெயிக்கிறோம், எவ்வளவு ஓட்டு வாங்குறோம் என்ற இடத்துக்குள்ளே இது சுருங்கிடுது. இப்போது நீங்கள் “நீலம் பண்பாட்டு மையத்தோடு” அசோசியேட் ஆகி இருக்கீங்க. அதனுடைய ரோல் இன்னைக்கு என்னன்னு நீங்க நினைக்குறீங்க?

முருகன்: இதில் எனக்கு இன்னொரு கேள்வியும் இருக்கு. எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் ஆழமா ஆய்வு பண்ணாத போக்கு இங்கிருப்பதாக நீங்க சொல்றீங்க. அது உண்மைதான். ஆனால் நீங்க ஒரு காலக்கட்டத்தில் தலித் இன்டெலெக்சுவல் சர்க்கிள் என்கிற பெயரில் செயல்பட்ட நீங்கள் “சாதி இன்று” என்று ஒரு ஸ்டடி பண்ணி நூல் ஆக்கி இருக்கீங்க. அப்படி பார்க்கும்போது இன்னைக்கு அது என்னவா மாறி இருக்கு?

விக்னேஷ்: எனக்கும் இதோடு தொடர்புடைய கேள்வி இருக்கு. நீங்கள் ரொம்ப நாளிலிருந்து அம்பேத்கரிய இயக்கங்களோடு தொடர்பில் இருந்தவர். அதன் வரலாறு பற்றி கட்டுரைகளெல்லாம் கூட எழுதி இருக்கீங்க. இன்னைக்கு நீலம் பண்பாட்டு மையம் வரைக்கும் நீங்க வந்திருக்கீங்க. இந்த விஷயங்களில் செயல்பாடு எப்படி வளர்ந்திருக்கு அல்லது மாறி இருக்கிறதென்று சொல்லுங்கள். இந்த மொத்த ஹிஸ்டாரிக்கல் செட்டப்ல அம்பேத்கரிய இயக்கங்களுடைய வளர்ச்சி அல்லது வீழ்ச்சியை நீங்க எப்படி பார்க்குறீங்க?

ஸ்டாலின்: விக்னேஷ் உங்கள் கேள்வியில் தொடங்கி சுனில் கேள்விக்கு வந்து முருகனில் முடிக்கிறேன். நான் சின்ன வயதில் இருந்தே அம்பேத்கரிய இயக்கங்களோடு தொடர்பில் இருந்தவன். இடையில வேறு இயக்கங்களோடும் ஊடாடி வந்தவன். குறிப்பா இடதுசாரி இயக்கங்கள். தமிழ்நாட்டு தலித் இயக்கங்களுக்கு அப்புறம் நான் மதிக்கக்கூடிய இயக்கங்கள் இடதுசாரி இயக்கங்கள் தான்.தமிழ்நாட்டு தலித் இயக்கங்களுடைய ஒன்றரை நூற்றாண்டு நவீன அரசியல் செயல்பாடுகளை குறித்து எழுத வேண்டும் என்பது என் விருப்பம். ஒடுக்கப்பட்டோர் இயக்கங்கள் நவீன அரசியல் தளத்தில் செயல்படுகிற இயக்கங்கள் தான். அதற்கு முன்னால் இருந்ததைப் பற்றியெல்லாம் நாம வேறாக தான் பேசணும். 

அவ்வாறு பார்க்கும் பொழுது தலித் அரசியல் இயக்கங்கள், தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி தரப்பு இருந்திருக்கு. ஒரே மாதிரி அளவுகோல், சிந்தனை எல்லாம் இருந்ததில்லை. ஆரம்பத்திலேயே பத்திரிக்கைகள் நடத்தி இருக்கிறார்கள். மாநாடுகள் நடத்தி இருக்கிறார்கள். தொடர்ந்து அரசை சந்தித்து தங்கள் தேவைகளுக்காக நிர்பந்தித்திருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்தே தலித் இயக்கங்கள் இத்தகைய போக்குகளுக்குள்ளிலிருந்து தான் இயங்கி இருக்கிறார்கள். இவர்களில் உங்களுக்கு தெரிந்த ரெட்டைமலை சீனிவாசன், ஜான் ரத்தினம், அயோத்திதாச பண்டிதர், எம்.சி. ராஜா, எல்.சி.குருசாமி, இளையபெருமாள் என்று பார்த்து திருமாவளவன் வரைக்கும் வரலாம்.

விக்னேஷ்: வேற கட்சிகளிலிருந்தும் தலித் இயக்கங்களோடு பங்காற்றியவர்கள் இருந்திருக்காங்க இல்லையா?.

ஸ்டாலின்: ஆமாம். அப்படி ஒரு மரபும் தொடர்ச்சியும் இருக்கிறது. அவ்வாறு பார்க்கும்பொழுது, தலித் இயக்கங்களிடம் ஒரு அறுபடாத தொடர்ச்சி இருக்கிறது என்று சொல்லலாம்.ஒரு இயக்கம் ஒரு காலக்கட்டத்தில் எழுச்சி பெறுகிறது. சில பத்தாண்டுகள் வரை நீடிக்கிறது. பிறகு தேக்கம் காணும் போது அந்த இடத்தில் வேறொரு இயக்கம் உருவாகி வருகிறது அல்லது தேக்கம் கண்ட இயக்கமே திரும்பவும் எழுச்சி பெறுகிறது. ஆரம்ப காலத்தில் ஆளுமைகளால் தான் தலித் இயக்கங்கள் நடத்தப்பட்டன. அவர்களுடைய தனிப்பட்ட அரசியல் பார்வை, சம்பாத்தியம் ஆகியவற்றால் தான் இயக்கங்கள் உருவாகி நடந்தன. ரெட்டைமலை சீனிவாசன் பெரிய கனவான். அவர் சொந்த சம்பாத்தியத்திலிருந்து தான் இயக்கத்தை நடத்துகிறார். அயோத்திதாசரும் சம்பாதிச்சுதான் பணிகளை மேற்கொண்டார். எம். சி. ராஜாவும் அப்படித்தான். என்னைக் கேட்டால் தமிழ்ப்பகுதியில் உருவான முதல் மக்கள் திரள் இயக்கங்கள் தலித் இயக்கங்கள்தான். இவ்வாறு சொல்வதை பல பேர் மிகையாக நினைக்கக்கூடும். ஆனால் அதுதான் உண்மை. பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியிலேயே அவங்க மாநாடுகள் கூட்டும்போது பெரிய அளவு கூட்டம் வருகிறது. பத்திரிக்கைகள் நடத்தினால் விற்றுத் தீருகிறது. எம்.சி.ராஜா, ரெட்டைமலை சீனிவாசன் எல்லாம் பெரிய மாநாடுகள் நடத்துறார்கள்.அதேவேளையில் அவர்கள் படித்தவர்களாக பணப்பின்புலம் உள்ளவங்களாக இருக்கிறார்கள். ஆங்கிலேயர்களோடு உரையாடக்கூடியவங்களாக இருந்தார்கள். இப்போக்கு சில வட்டாரங்களில் – குறிப்பா மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா மாகாணங்கள் மாதிரியான இடங்களில் தீவிரமாக இருந்திருக்கு. இப்போது அயோத்திதாசர் தேசிய அளவில் போகவில்லைன்னு சொல்லுகிறார்கள். அந்த காலக்கட்டமே அப்படித்தான். தலித் அரசியல் எப்போது தேசிய அரசியலாக மாறுகிறது என்றால் 1920களில் தான். இதே காலகட்டத்தில் தான் அம்பேத்கருடைய வருகையும் நடக்கிறது. ஒரு பக்கம் காந்தியின் எழுச்சி, கம்யூனிஸ்டுகளுடைய எழுச்சி, தமிழ்நாட்டுல சுயமரியாதை இயக்கத்தோட வளர்ச்சி இது எல்லாமே இந்த காலக்கட்டத்தில் இருக்கிறது.
 
ஏற்கனவே பிராந்திய அளவில் பல்வேறு செயல்பாடுகள் நடந்து வந்திருக்கக் கூடிய நிலையில், தேசிய அளவில் இவர்கள் எல்லாரையும் ஒன்றாக்கி பார்க்கும் போக்கு கால மாறுதல்கள் சார்ந்து உருவாகிறது. ஒரு இயக்கமாக, ஒன்றுபடுத்தப்பட்ட தனிக்குழுவாக உருவாகக்கூடிய சாத்தியம் 1920களில் அம்பேத்கருடைய தலைமையில நடக்க ஆரம்பிக்கிறது. அவர் படித்தவர், அவர் கூட இருந்தவர்களும் அப்படித்தான். ஆனால் ரொம்ப சாதாரணமான எளிய மக்களை சென்றடையக்கூடிய விஷயங்களை அவர் பம்பாயில் தொடங்குகிறார். அப்புறம் அவற்றை தேசிய அளவிலேயும் செய்கிறார். அவர் முதலில் சுதந்திரா தொழிலாளர்கள் கட்சி என்ற இயக்கத்தை ஆரம்பிக்கிறார். அது மஹாராஷ்டிராவுல செயல்படுகிறது. அப்புறம் அவரே “ஆல் இண்டியா ஷெடியூல்ட் காஸ்ட் ஃபெடெரேஷன்” என்கிற இயக்கத்தை ஆரம்பிக்குறார். அதுதான் தமிழ்நாட்டில் அம்பேத்கருடைய தாக்கத்தில் உருவான முதல் இயக்கம். நான் அறிந்தவரையில் அந்த இயக்கத்தில் தான் சாதாரண மக்கள் நிர்வாகிகளாக முதல் முறையா வந்தார்கள். அப்புறம் அக்காலக்கட்டம் கிட்டத்தட்ட இந்திய விடுதலை நெருங்குகிற நேரம் அது. எல்லோரும் இந்தியா அளவில் யோசிக்கக்கூடிய சூழல் இருந்தது. அப்போது இந்த இயக்கத்தோட செயல்பாடுகள் சாதாரண மக்களை இலக்காக வைத்து தான் இருந்தது. இழிதொழில் மறுப்பு மாதிரியான சாதாரண மக்களுடைய சுயமரியாதையை முன்னிறுத்தக்கூடிய விஷயங்களை அவர்கள் முன்வைத்திருந்தார்கள். அப்புறம் 1950 களில் அம்பேத்கருடைய மரணத்துக்குப் பிறகு தொடங்கப்பட்ட இந்திய குடியரசு கட்சி தமிழ்நாட்டில் பெரிய இயக்கமாக இருந்தது. தேர்தலில் போட்டியிட்டன.அப்புறம் சிறு சிறு இயக்கங்களாக பிரிந்தது. அது ஒரு வரலாறு என்று வைத்துக் கொள்ளலாம். 

ஆனால் இக்கட்சிகளில் இருந்த தலைவர்கள் ஒவ்வொருத்தரும் சாதாரண நிலையில் இருந்து வந்தவர்கள், தீவிரமா போராடியவர்கள், இந்த சமூகத்திடமிருந்து எதையுமே திரும்ப பெறாதவர்கள். நீலத் துண்டு போட்டுக்கிட்டு, ஊர் ஊரா போயி சின்னச் சின்ன வேலைகளை எல்லாம் செய்தார்கள். உள்ளூர் அலுவலகங்களில் பட்டா வாங்கி கொடுக்க போராடுவாங்க, ஜாதிச் சான்றிதழ் வாங்கி கொடுப்பாங்க. இப்படி சாதாரண அளவிலான வேலைகளிலும் ஈடுபாட்டோடு இருந்தார்கள். சுந்தரராஜனார், கரியமால், மணவாளன், டி. எம். மணி, எஸ்.பி.ராஜ், சந்திர போஸ் என்று இன்றைய தலைமுறைக்கு பெயரே தெரியாத எத்தனையோ தலைவர்கள் இருந்தார்கள். பகல் முழுக்க கலெக்டர் ஆபீஸுக்கு நடப்பார்கள். அவர்களுக்கு ஒரு டீ வாங்கி கொடுத்தால் அது பெரிய விசயம். அப்படி நிறைய வட்டார அளவிலான தலைவர்கள் பணியாற்றினார்கள். ஆனால் இப்படி அன்றாட பிரச்சினைகளுக்காக செயல்பட்ட அவர்கள் பெரிய முழக்கங்களோடு தங்களை இணைத்துக்கொள்ளவில்லை.
 
கீழ்வெண்மணி சம்பவத்துக்குப் பிறகு 1970களில் அடுத்த தலைமுறை தலித் இளைஞர்கள் இடதுசாரி சிந்தனைகளின் தாக்கத்தோடு தலித் இயக்கங்கள் உருவாயின. குறிப்பாக சென்னையை தாண்டிய இயக்கங்கள் உருவாயின. பரமக்குடியை மையமாகக் கொண்டு சந்திரபோஸ் இயக்கம் ஆரம்பித்தார். திருமாவளவன் இடதுசாரி அமைப்பில் இருந்திருக்கவில்லை என்றாலும் இடதுசாரி பார்வை கோணத்தால் உந்தப்பட்டவர்தான்.இந்தவகையில் நிறைய அமைப்புகள் உருவாயின. இவர்கள் முந்தைய தலைமுறை தலைவர்களிடமிருந்து பாரிய அளவில் வேறுபட்டிருந்தார்கள். அவர்களுடைய முழக்கம் முன்புபோல மதமாற்றம், இடஒதுக்கீடு மாதிரியானதாக இருந்திருக்கவில்லை. அவர்களிடையே ஆயுத குழுக்கள்மீதான ஈர்ப்பு இருந்தன. அப்புறம் தேசிய அரசியல் மாதிரியான விஷயங்களால் ஈர்க்கப்பட்டிந்தார்கள். 

தொண்ணூறுகளில் இவற்றின் விளைச்சலை தான் நாம் கண்டோம். ஆனால் இவ்வாறு தொடங்கிய தலித் இயக்கங்கள் துரதிஷ்டவசமாக முற்றும் முழுவதும் தேர்தல் அரசியலை நோக்கி சிந்திப்பவையாக மாறிவிட்டது. இன்றைக்கு தலித் அடையாளம் என்பது பண்பாட்டு அடையாளங்கள் போன்றவற்றையெல்லாம் விட்டுட்டு வெறும் அரசியலாக சுருங்கிவிட்டது. அரசியல் என்றால் அது தேர்தல் அரசியலாக சுருங்கி விட்டது. அதேவேளையில் அவர்கள் தேர்தல் அரசியலில் தாக்கம் செலுத்தக்கூடிய ஒரு சக்தியாக மாறி இருக்கிறார்கள் என்று சொல்லுவேன். இந்த அளவிலான சக்தியை வைத்துக் கொண்டு என்ன வேலை செய்திருக்கிறார்கள் என்று பார்ப்பது வேறு விசயம். நிறைய சமரசங்கள் நடந்திருக்கிறது. நான் அவற்றை கடுமையாக விமர்சிக்கக்கூடியவன்தான். ஆனால் இன்னைக்கு தமிழ்நாடு மந்திரி சபையில் தலித்துகளுக்கு பொதுத் துறைகள் வழங்கப்படுகின்றன என்றால் அதற்கு இவர்களுடைய எழுச்சி ஏதோவொரு அளவில் காரணமாக இருக்கிறது என்றும் சொல்வேன். எனவே இந்த போக்கு இப்படி ஏறி இறங்கிட்டு தான் இருக்கு. 

இவற்றில் என்னுடைய நிலைபாடு என்னவென்று கேட்டால் நான் எப்போதும் தலித் இயக்கங்களுடைய ஆதரவாளன். எனக்கு பல இயக்கங்களோடு தொடர்பு இருந்திருக்கிறது. இப்பவும் உறவு இருக்கு. அவற்றை தொடர்ந்து கவனித்து வருகிறேன். என்னை ஒரு விமர்சகனாக வைத்துக் கொள்ள விரும்புவதால் குறிப்பிட்ட இயக்கத்தின் ஆதரவாளனாக என்னை நிறுத்திக் கொள்ளாமல் எல்லா தலித் இயக்கங்களுடனும் பணியாற்றுவது என்று முடிவு பண்ணினேன். அவங்க செய்யக்கூடிய பெட்டரான (நல்ல) வேலைகளில் இணைத்துக் கொள்வது. மற்ற நேரங்களில் விலகி இருப்பது என்று இருக்கேன். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு நல்லுறவில் இருந்துருக்கேன். ரவிக்குமாரோடு இணைந்து நிறைய வேலைகள் செஞ்சிருக்கேன். தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா தலித் அமைப்புகளின் பலம் பலவீனத்தை மதிப்பிடக்கூடிய அளவிற்கு அவற்றைத் தெரியும். 

வி.சி.க.முற்றிலுமான தேர்தல் இயக்கமாக தன்னை இருந்திக்கொள்ள முயன்ற போது என்னுடைய நெருக்கம் குறைந்துவிட்டது. பிறகு தான் ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையத்தை ஆரம்பித்தார். நீலம் பண்பாட்டு மையம் ஒரு அரசியல் இயக்கமாக மாறவிலை. அது எதிர்காலத்தில் அப்படி மாறுமா? இல்லையா? என்பதெல்லாம் ரெண்டாவது. முதலில் தலித் விஷயங்களைப் பற்றி பேசுறதுக்கான ஒரு பொதுப் பிளாட்ஃபார்ம் (தளம்) இங்கே இல்லை. அப்படி ஒரு பிளாட்ஃபார்மா நீலம் பண்பாட்டு மையம் மாறனும் அப்படின்னு அவரு நினைச்சாரு. இப்போது அண்மையில் நடந்த வேர்ச்சொல் நிகழ்வில் ஆதவன் தீட்சண்யாவுக்கும் ஷாலின் மரியா லாரன்ஸுக்கும் நடந்த விவாதத்தைக்கூட நீலம் நண்பர்கள் எப்படி பார்த்தார்கள் என்றால், இரு வேறு தரப்புகளின் விவாதமாத்தான் பார்த்தார்கள். பிரச்சினைகள் நடக்கும்போது போய் மக்களுக்கு ஆதரவா இருக்குறது, கலை இலக்கியச் செயல்பாடுகளை முன்னெடுப்பது என்று இருக்கிறார்கள். அந்த அளவில் தான் நானும் செயல்படுறேன். ஆனால் நான் எப்படி மற்ற இயக்கங்களோடு என்னை சுதந்திரமாக வைச்சிக்குறேனோ அப்படித்தான் நீலம் பண்பாட்டு மையத்துடனும் என்னை சுதந்திரமாக வைச்சுக்குறேன். அதற்கான இடம் அங்கே இருக்கு. ரஞ்சித் பல விஷயங்களை சுதந்திரமாக பேசுறார். நானும் சுதந்திரமாக பேசுறேன். என்னுடைய எல்லா ஐடியாவும் அவருக்கு ஏற்புடையதா இருக்குமா என்று எனக்குத் தெரியலை. அவருடைய கருத்துக்களிலும் எனக்கு ஏற்பில்லாத விஷயங்கள் இருக்கலாம். எங்கள் உறவில் அதுவொரு பிரச்சினையாக இல்லை. ஆனால் ஒரு பொது பிளாட்ஃபார்மா – இன்றைக்கு வரக்கூடிய இளைஞர்களுக்கான பிளாட்ஃபார்மா நீலம் பண்பாட்டு மையம் இயங்குகிறது. அதுல எந்த பிரச்சினையும் இல்லை. அப்புறம் ரஞ்சித் போன்ற ஒரு இளைஞர் சொந்த சிந்தனைகளுடனும், பொருளாதார தற்சார்புடனும் உள்ளே வரும்போது, அவரைப் பற்றி பல விதமான கதை வெர்ஷன்ஸ் வரத்தான் செய்யும். அதெல்லாம் எனக்கு முக்கியமில்லை. அவருடைய வேலைகள் சார்ந்து எனக்கு மரியாதை இருக்கிறது. என்னுடைய வேலைகள் சார்ந்து அவருக்கும் மதிப்பு இருக்கிறது.அங்கே சிற்சில வேறுபட்ட கருத்துகளுடன் அடிப்படை விசயங்களில் ஒன்றுபட்டு ஒன்றாக இருக்கிறோம்.


சித்ரன்: நீங்கள் “எழுதாக் கிளவி”நூலில் மாயவரத்தில் சுயேட்சையாக நின்று எம்.பி. ஆன வீராச்சாமியை பற்றி எழுதி இருக்கீங்க. ஆனால் இன்னைக்கு அதற்கான இடம் இல்லை. இது எப்படி அன்னைக்கு சாத்தியமாச்சு?

ஸ்டாலின்: இடமில்லை, முன்பை விட நாம் பின்னடைந்து போயிட்டோம் என்று நான் சொல்ல வரலை. முன்னைவிட நாம முன்னேறிதான் வந்திருக்கோம். ஆனால் முன்னிருந்த அரசியல் சூழல் இன்றைக்கு இல்லை. முன்பிருந்த அரசியல் இயக்கங்களுக்கோ, தலைவர்களுக்கோ இருந்த தார்மீகம் இன்றைக்கு இல்லாமல் போய்விட்டது. உதாரணத்துக்கு சொல்றேன். இந்திய விடுதலைக்கு வந்த பிறகு அரசியல் சட்டத்தால் இட ஒதுக்கீட்டை உறுதிபடுத்துவதற்கான குரல்கள் ஒலித்தன. அவற்றில் மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், இந்திய சமூகத்தில் நாம ஒரு சாராருக்கு செய்யாம விட்ட நியாயத்தை செய்ய வேண்டும் என்று அரசியல் நிர்ணய சபையில் பேசுவதற்கான இடம் இருந்தது. அப்படியொரு இடத்தை உருவாக்கியதில் காந்தியின் அரசியலுக்கு பெரிய பங்கு இருந்தது. அது மாதிரியான ஒரு தார்மீகம் இன்றைக்கு இல்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு விருப்பம் இருக்கிறது. பெரியார் செயல்படுத்திய சுயமரியாதை இயக்கம் போல தலித்துகளுக்கு ஒரு இயக்கம் இருக்க வேண்டுமென்று நான் நினைக்குறேன். என்னையெல்லாம் கூட பியூர் தலித் பாலிடிக்ஸ் பேசுகிறவன் என்று நினைப்பாங்க. ரஞ்சித்தையும் அப்படி நினைக்கக்கூடும். திருமாவளவன்கூட சமயங்களில் அப்படி பேசிடுவார். அதனை அப்படி பார்க்க வேண்டியதில்லை. அதனை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஆனால் தலித் அல்லாதவர்களும் இங்க உரையாடல்களில் இருந்திருக்காங்க என்பதை நான் ரெகார்ட் பண்ண விரும்புறேன். அதுக்கான ஸ்பேஸ் கடந்த காலங்களில் இங்கே இருந்திருக்கு. அது திரும்ப உருவாக வேண்டுமென்று நான் நினைக்கிறேன். 

வேலாயுதம்: எனக்கு ஒரு கேள்வி. அரசியலைப் பற்றி நிறைய பேசியிருக்கோம். ஆனால் தற்கால சூழலில் சினிமா மாதிரியான கலை இலக்கிய செயல்பாடுகளில் தலித் வாழ்வும் அரசியலும் சித்தரிக்கப்படுறதைப் பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க? குறிப்பா சமீபத்திய படங்களில் சமூகத்தில் இருக்குற சாதியமும் அரசியலும் ரொம்ப தீவிரமா சித்தரிக்கப்படுறதைப் பார்க்க முடியுது. 
 
ஸ்டாலின்: பொதுவாக எனக்கு தலித் லைஃப் என்று இங்கே காட்டப்படுகிற விதத்திலேயே சில மாற்றுக் கருத்துகள் இருக்கின்றன. தலித் லைஃப் சார்ந்து ஒரு அதிபுனைவு மாதிரி விஷயங்கள் இங்கே எழுதப்படுவது இல்லை. தலித் லிட்ரேச்சர் என்றாலே தன் வரலாறு தானென்று ஆகிவிட்டது. தன்வரலாறுக்கு ஒரு வரையறை இருக்கிறது. அப்புறம் நாம் எதை படிக்குறோமோ அது மட்டும் தான் தலித் லைஃப் என்றும் ஆகிவிட்டது. 

சித்ரன்: இல்லை. இங்க அதெல்லாம் எழுதப்படலைனு சொல்ல முடியாது. இங்க எழுதப்பட்டதே ஒழுங்கா படிக்கப்படலைனுதான் நான் நினைக்குறேன். இப்போ பிரமிளுடைய “பிரசன்னம்” கதை இருக்கு, பிரேம்-ரமேஷோட “பிரம்மனின் உடலுக்கு வெளியே” இருக்கு. சரியா வாசிக்கத்தான் படலை.

சுனில்: இல்லை, ஸ்டாலின் சொல்றதை நாம் இப்படி பார்க்கலாம். இப்போ பிளாக் பேந்தர் இருக்கிறது. அதில் வந்து மார்ட்டின் லூத்தர் கிங்குக்கும் மால்கம் எக்ஸுக்கும் நடந்த உரையாடலை அவன் ஒரு ஃபாண்டஸி ஆக்குகிறான். அந்த மாதிரி ஒரு விஷயம் இங்க இன்னும் நடக்கவே இல்லை. அயோத்திதாசரை ஃபாண்டஸி மாதிரி கூட எழுதி பார்க்கலாம்.

வேலாயுதம்: ஆமாம், இந்த சந்தேகம் எனக்குமே இருக்கிறது. இப்போது தலித் தளத்துலதான் இங்க நிறைய ஆய்வுகள் நடக்குது. ஆனால் அது புனைவுல வரவே இல்லை. இப்போ வெள்ளை யானையில் வருகிற மாதிரியோ மெல்லிய நூல்ல வருகிற மாதிரியோ தலித் ஆளுமைகள் ஐடியலைஸ் பண்ணப்பட்டால் இந்த அரசியல் பொது வாசகர்கள் மத்தியில தாக்கத்தை ஏற்படுத்தும் என்றுத் தோன்றுகிறது.

ஸ்டாலின்: நீங்கள் சொல்வதை நான் ஒத்துக்குறேன். ஆனால் நான் எப்போதும் சொல்கிற இன்னொன்றும் இருக்கிறது. இப்போது தலித் தரப்புல சில வேலைகள் நடந்திருக்கிறது. அது புனைவில் குறைவாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் ஆய்வுகளில் நிறைய நடந்திருக்கிறது. அதற்கு முன்னோடியாக இருந்தவர் அயோத்திதாசர் தான்‌. சிலர் அதை ஏத்துக்கலாம். சிலர் அதை ஏத்துக்காம இருக்கலாம். ஆனால் அவருடைய எழுத்தின் வருகை ரொம்ப முக்கியமானது. ஒரு முறை பா.ரஞ்சித் வேற ஒரு நண்பர்கிட்ட, "வரலாற்று ஆய்வு பண்றவங்களே புனைவும் எழுதணும்னு எதிர் பார்க்காதீங்க. அவங்க கொடுக்குற தரவுகளை வைச்சிகிட்டு ஒரு சினிமா டைரக்டர் சினிமா எடுக்கலாம். ஒரு சிறுகதை ஆசிரியர் சிறுகதை எழுதலாம்"என்று சொன்னார். அந்த மாதிரி விஷயங்கள் தான் இங்கே நடக்கவில்லை. 

ஆனால் வேறு விஷயங்கள் நடந்திருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் தமிழில் வெளியாகியிருக்குற மிக முக்கியமான வாழ்க்கை வரலாற்று நூல் என்று டி. தருமராஜ் எழுதிய "அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை" நூலை சொல்லுவேன். அந்நூல் அயோத்திதாசருடைய வரலாற்றை தகவல் ரீதியாக வரிசைப்படுத்தி சொல்லும் நூல் இல்லை. வரலாறு கொஞ்சமாக தான் இருக்கும். அந்த புத்தகம் ஒரு சிந்தனையாளனை தகவல்களின் வழியாக இல்லாமல் அவனுடைய சிந்தனைகள் வழியாக வரைகிறது. அதில் ரொம்ப முக்கியமான விஷயம் புனைவுக்கும் அபுனைவுக்கும் நடுவிலுள்ள இடைவெளி தாண்டப்படுகிறது என்பது தான். தமிழில் தலித் அபுனைவுகள் எழுதிய பலபேருக்கு இலக்கியம் பற்றி நல்ல புரிதல் உண்டு. ராஜ் கௌதமன், ரவிக்குமார் மாதிரி. ஆனால் அவர்கள் கொஞ்சமாக தான் எழுதி இருக்கிறார்கள். ஆனால் அயோத்திதாசர் பற்றிய புத்தகம் ஒரு புனைவுக்கு இணையான நான் ஃபிக்ஷனா (அல்புனைவு) இருக்கு. இப்போது இந்த மாதிரி எஸ்.ஜே. சிவசங்கர் சில முயற்சிகளை செய்கிறார். அப்புறம் யாத்ரா (எ) மனோஜ் சில கதைகளை எழுதி இருக்கிறார். ஆனால் அது பெரும் போக்காக மாறவில்லை.
 
அந்த விதத்தில் எனக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருக்குறது, வெகுஜன தளத்திலான சினிமாவில் நடக்கிற முயற்சிகள் தான். குறிப்பாக தங்கலான் மாதிரி படத்தில் சில குறைகள் இருந்தாலும், அது வந்து இந்த எதார்த்ததிலிருந்து வெளியேற முயற்சி பண்ணுகிறது. வெற்றி பெறவில்லை என்றாலும் அது முக்கியமான முயற்சி தான். அதில் அயோத்திதாசருடைய கதையாடல் பாணி இருக்கு. கனவாக நினைக்கிற ஒன்று மெய்யாகவும், மெய்யாக நினைக்கிற ஒன்று பொய்யாகவும் மாறிடுது. இதுல குறிப்பா அயோத்திதாசருடைய இந்திர தேச சரித்திரம் வந்து ஒரே நேரத்துல ஒரு வரலாற்று புத்தகமாகவும், அதே நேரத்துல புனைவோட வாசிப்பு இன்பத்தையும் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அந்த மாதிரி ஒரு விஷயம் தங்கலானில் நடப்பதை நான் பார்க்கிறேன்‌. 

இதில் என்னவென்றால், ஒரு தலித்துக்கு அவனுடைய எதார்த்தமே அயர்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் அது அவன் பார்த்த உலகம் தான். அந்த எதார்த்த உலகம் கொடுக்காத ஆசுவாசத்தை அவனுக்கு புனைவு கொடுக்கிறது. அதுவே அவன் வரலாறாகவும் ஆகிவிடுகிறது. இங்கே இருந்துதான் நான் வரலாற்றையே பார்க்குறேன். வரலாறு தான் புனைவு. புனைவுதான் வரலாறு. இப்புரிதலிருந்து கிடைக்கிற உலகம் இருக்கில்லையா, அந்த புனைவு சமூகத்தில் இயங்குமானால் அதுவே நிலவும் எதார்த்தத்தை மாற்றி அமைக்கும் என்று நான் நினைக்குறேன். எதார்த்தத்தை கவித்துவமாக்குவது தான் இலக்கியத்தின் வேலை என்கிறார் மார்க்வெஸ். எனில் நாம இந்த நிலவும் எதார்த்தத்தை கவித்துவத்தோடு கலாப்பூர்வமாக மாற்றணும். அது குறைவாக நடக்கிறது என்று விசனப்படுகிறோமே தவிர வேற ஒன்றும் இல்லை. இப்போது அயோத்திதாசர் வந்து மாரி என்ற பெயரிலுள்ள “ரி” யை “றி” யா மாற்றுவதன் வழியாக ஏற்கனவே இருக்கிற ஒரு கதையை குளோஸ் பண்ணிட்டு வேற ஒரு கதையை ஓபன் பண்ணுகிறார். “ஐந்திரன்”ல இருக்குற “ஐ”யை “இ” ஆக்குனா வேற ஒன்னா மாறுகிறது. இதை அவர் பண்ற விளையாட்டாக சிலர் நினைக்கலாம். ஆனால் நீங்கள் இன்றைக்கு பார்க்கிற பல எதார்த்தங்கள் விளையாட்டாக ஆரம்பிச்சதுதான். அது இங்கே கலை இலக்கிய தளத்தில் நடக்கணும்.

இதில் நீ ஏன் எழுதவில்லை என்று கேட்டால் நான் ஃபிக்ஷனில் வொர்க் பண்றேன். நான் இலக்கியம் கற்பிக்கிற வாத்தியாராக இருப்பதால் பிக்ஷனையும் தொடர்ந்து கவனிக்குறேன். நான் நேரடியா ஃபிக்ஷன் (புனைவு) எழுதவில்லையே தவிர என் எழுத்துகளில் ‘சம்பந்தம்’ இல்லாத விஷயங்களை ஒரு சரடில் இணைத்து அர்த்தத்தை விரிவுபடுத்தும் பணியை லிட்ரரி வேலை என்று தான் நினைக்கிறேன். அம்பேத்கர் “தீண்டத் தகாதவர்கள் யார்” (Who were the untouchables?) என்ற புத்தகத்தில் அதை தான் சொல்கிறார். நான் ஒரு தலை இழந்த புத்தரைப் பற்றி பேசும்போது தலை இழக்குறதைப் பற்றின ஒரு அரவான் கூத்தை சான்றாக எடுத்துக்குறேன். இதுவே புனைவுடைய மனநிலை தான்‌.

அம்பேத்கர், பெரியார்
சுனில்: உங்க கனவு வொர்க் என்று ஏதாவது இருக்கா?

ஸ்டாலின்: நாவல் எழுதணும். அதுதான் கனவு. ஆய்வில் நந்தன் வரலாறு தான் டிரீம் வொர்கா இருந்துச்சு. ஆனால் அதை எதிர்பாராத விதமா ஆரம்பிக்க வேண்டியதா போச்சு. அதை நான் எப்படி முடிக்கப் போறேன்னு நினைச்சாலே மலைப்பா இருக்கு.

முருகன்: உங்களுடைய பதிப்பு பணிகள் பற்றி பேசவே இல்லை. நீங்க நிறைய சிறுவெளியீடுகளை பதிப்பிச்சிருக்கீங்க. அதைப் பற்றி சொல்லுங்க.

ஸ்டாலின்: ஆமாம். அது எல்லாமே ஒரு பிரச்சார நோக்கத்துல கொண்டு வந்தவை. குறைவான நேரத்தில் அச்சடிச்சு, குறைவான நேரத்துல கொண்டு வந்து, குறைவான காசுக்கு விக்கிறது தான். நான் கொண்டு வந்த சிறு நூல்கள் எல்லாமே அரசியல் விமர்சனங்கள் செஞ்சுகிட்டு இருந்த காலத்தில் வந்தது தான். உதாரணமாக உத்தபுரம் பிரச்சினை வந்த போது அதில் தலித் தரப்பை சொல்றதுக்காக “போராளி எனும் நான்”என்ற ஒரு சிறு நூல் கொண்டு வந்தேன். ஆனால் இன்னைக்கு சிறுவெளியீடுகளுடைய இடத்தை எல்லாம் சமூக வலைதளம் எடுத்து கொண்டது. பதிப்பை பொருத்த வரைக்கும் நான் கொண்டு வந்த முக்கியமான நூல்கள் என்று மூன்று நூல்களைச் சொல்லுவேன், “சிங்கார வேலர் அயோத்திதாசர் உரையாடல்”, “விழுப்புரம் படுகொலை”, ஜி. அப்பாதுரையாருடைய “புத்தர் அருளறம்”. 


சித்ரன்: எனக்கு ஒரு கேள்வி இருக்கு, இப்போ அயோத்திதாசர் சொல்ற மாதிரி பௌத்தத்துல இருந்துதான் சனாதனம் எல்லாத்தையும் போலச் செய்து எடுத்துகிச்சுனு வைச்சுகிட்டா, அப்போ ஜாதியும் பௌத்ததுலதான் இருந்துச்சா? நான் ஏன் கேக்குறேன்னா இப்போ சிங்களத்துலேயோ பர்மாவுலேயோ இருக்கக்கூடிய பௌத்தத்தை வைச்சு பார்த்தால், அதுலேயும் பிரிவினைகள் இருக்கு.

ஸ்டாலின்: ஆமாம். ஆனால் எனக்கு இவற்றில் இன்னொன்றும் தோன்றுகிறது. இப்போது இலங்கை பௌத்தம் மாதிரியோ நாம் பொதுவா பார்க்கக்கூடிய பிற நாட்டு பௌத்தம் மாதிரியோ இல்லாத வேறு விதமான பௌத்தம் தான் இங்கே இருந்தது என்பதற்கான வாதத்தையே அயோத்திதாசர் வைக்கிறார். எப்படி சாதியை ஒரு இந்திய அளவிலான விஷயமாக பார்க்க முடியாதோ, அப்படி பௌத்தத்தையும் இந்திய அளவில் பொதுமை படுத்தி பார்க்க முடியாது என்று நினைக்கிறேன். பௌத்தமும் ஓர் இடத்தில் ஒரு பண்புடனும், இன்னொரு இடத்தில் இன்னொரு பண்புடனும் இருக்க முடியும். இதற்கான சான்றுகளை தரக்கூடிய அயோத்திதாசர் மாதிரியானவர்கள் பௌத்தத்தை எந்த நோக்கத்திலிருந்து விளக்குகிறார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இப்போது இருக்க வேண்டிய விசயங்களை கடந்த காலத்திலேயே இருந்தது என்று உருவகிப்பது ஒரு நிலைபாடு. அதனை திரும்ப கொண்டு வர வேண்டும் என்று நினைக்குறாங்க. அதைத்தான் நாம யோசிக்கணும். சாதிபேதமற்ற சமூகத்திற்கு பௌத்த காலம் என்று பெயரிடுகிறார். நிலவும் பண்பாட்டு நடைமுறைகளை தொகுத்து அவற்றுள் வைத்து விளக்குகிறார். அவர் காலத்தில் எழுச்சி பெற்ற பெளத்தத்தோடு தன்னுடைய வரலாற்று மீட்பை இணைக்கிறார். அதற்கு நீங்கள் வேறு பெயரை கூட இட்டுக்கொள்ளலாம். ஆனால் அவரின் பண்பாட்டுத் தொகுப்பின் மீதான வாசிப்பை நீங்கள் புறக்கணிக்க முடியாது.

சுனில்: சரி, கடைசியா பஞ்சா ஏதாவது இருந்தால் சொல்லுங்க.

ஸ்டாலின்: சொல்றேன். நம்ம பிரச்சினையே நவீன கல்வி தான் என்று நினைக்குறேன். தலித்துகளுக்கு கூட நீங்க படித்துவிட்டால் போதும் எல்லாம் மாறிடும் என்பதை நிரந்தர தீர்வு போல சொல்லுவதுண்டு. ஆனால் அத்தகைய அனுபவங்களை திரும்பி பார்த்தால் அப்படியெல்லாம் எதுவும் பெரிதாக மாறிவிடவில்லை என்றுதான் தோன்றுகிறது. கல்வியினால் தலித் விடுதலையோ அடித்தட்டு மக்களுடைய விடுதலையோ அப்படி ஒன்றும் தலைகீழாக நடக்கவில்லை என்று தான் தோன்றுகிறது.இப்படி சொல்வதன் பொருள் கல்வியை மொத்தமா கைவிடுவது என்பதில்லை. ஆனால் அதை ஒரு தீர்வாக இனிமேலும் பார்க்க முடியுமா என்பது தான். அது இங்கே பொருளாதார வசதிகளை கொடுத்திருக்கே தவிர நமக்குள் இருக்குற முரண்களை சரி செய்வதற்கு தேவையான கருவியாக அமையவில்லை. தேவர் மகன், மெட்ராஸ், அசுரன் என்று எல்லா சினிமாக்களிலும் படித்தால் நமக்குள்ளிருக்கிற முரண் சரியாகி விடும் என்று சொல்றாங்க. கிராமத்தில் தான் பாகுபாடு என்று சொல்லி நவீன கல்வி நிறுவனங்களுக்குள் அனுப்பப்பட்ட ரோஹித் வெமூலா என்னவானார்? நவீன கல்வி நிறுவனங்களைப் பற்றி நம்மகிட்ட சரியான ஸ்டடி இல்லை. நான் அதிரடியாக இக்கருத்தை சொல்லவில்லை. ஆனால் நாம இந்த அனுபவங்களையும் எடுத்துகிட்டு நிதானமாக யோசித்து பார்க்க வேண்டும். படித்தவர்கள் எல்லாம் என்னவாக இருக்கிறார்கள்? நாம் என்னவாக இருக்கிறோம்? இருபதாம் நூற்றாண்டின் பெரும் முழக்கமே அனைவருக்கும் கல்வி என்பது தான். அதில் ஒரு கணிசமான அளவு வெற்றி அடைந்திருக்கோம். இப்போது அது நம்மிடம் என்ன மாதிரியான தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது என்று பார்க்க வேண்டாமா? 

சுனீல்: அப்போ இன்னைக்கு “அநிஹிலேஷன் ஆஃப் காஸ்ட்” (சாதி அழித்தொழிப்பு) சாத்தியமா? இல்லை இனிமே மரபான சாதிய ஏற்றத் தாழ்வு இன்மைங்குறது மட்டும்தான் சாத்தியமா?

ஸ்டாலின்: இல்லை. “அனிஹிலேஷன் ஆஃப் காஸ்ட்” தான் லட்சியம். ஆனால் இன்றைக்கு இருக்குற நிலைமைக்கு, இந்த ஜாதிகள் ஒன்றினைஞ்சு வாழ்ந்தாலே பெரிய விஷயமாக ஆயிருச்சு.

விக்னேஷ்: இது பஞ்ச் கேள்வி இல்லை. நீங்க ஏற்கனவே நவீன தேர்தல் அரசியல் தலித்துகளுக்கான தீர்வாக இல்லை என்று சொன்னீர்கள். இப்போது நவீன கல்வியும் தீர்வு இல்லை என்று சொல்றீங்க. அப்போ எது தான் தீர்வு?

ஸ்டாலின்: தெரியலை. அதை நாமதான் யோசிக்கணும். யோசித்தால் அதுவும் இன்னொரு பதிலாகத்தான் இருக்கும்.

காரைக்குடி மரப்பாச்சி இலக்கிய வட்ட கலந்துரையாடலில் ஸ்டாலின் (29-9-2024)
இந்த நேர்காணல் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் காரைக்குடியில் ஒருங்கிணைக்கும் மரப்பாச்சி இலக்கிய வட்டத்தின் சார்ப்பாக 29-9-2024 அன்று நடந்த கலந்துரையாடலின் எழுத்து வடிவம்.

நன்றி: எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன்

எழுத்தாக்கம்: விக்னேஷ் ஹரிஹரன்

poster design: கலைவாணி