Showing posts with label வேதம். Show all posts
Showing posts with label வேதம். Show all posts

Saturday, 5 April 2025

வேத தொன்மங்கள் - ஆர்தர் அந்தோணி மெக்டோனல்

மதமும் தொன்மமும்

மதம் ஒருபுறம் தெய்வீகத்தை பற்றியும் இயற்கையை மீறிய ஆற்றல்களை பற்றியும் மனிதர்கள் கொண்டுள்ள கருத்தாக்கத்தை உள்ளடக்கியுள்ளது. இன்னொருபுறம், மனிதன் தன்னுடைய இனத்தின் நலன்கள் அந்த ஆற்றல்களை சார்ந்திருப்பதை உணர்ந்து, அவ்வுணர்வை பல்வேறு வழிபாடுகளில் வெளிப்படுத்தியதை உள்ளடக்கியுள்ளது. தொன்மவியல் முதலில் சொல்லியதுடன் தொடர்புடையது. அது கடவுள்கள் மற்றும் நாயகர்கள் பற்றிய தொன்மக்கதைகளை கொண்டது. அவர்களின் குணம், தோற்றுவாய், செயல், சூழல் ஆகியவற்றை விவரிக்கக்கூடியதாகவும் உள்ளது. இந்த தொன்மங்களின் ஊற்றுமுகம் என பண்படாத மற்றும் அறிவியல்-அறிவு அற்ற காலத்தில் மனிதன் தான் எதிர்கொண்ட பல்வேறு விசைகளையும் இயற்கையின் புரிந்துகொள்ள முடியாத நிகழ்வுகளையும் விளக்க முற்பட்டதையும் குறிப்பிடலாம். தொன்மங்கள் பண்படாத மனதுடைய கற்பனையை காட்டுகின்றன. ஒரு பண்பட்ட மனதிற்கு உருவகங்களாக தெரியும் கூற்றுகள் அனைத்தும் முந்தைய காலத்திலிருந்து அவதானிக்கப்பட்ட நிகழ்வுகளின் விளக்கங்களாகும். வானில் நிகழும் நிகழ்வுகள் பற்றியும் (உதாரணமாக இடி, மின்னல், புயல் போன்றவை) மற்றும் உலகம் எவ்வாறு தோன்றியது எவ்வாறு கட்டமைக்கப்பட்டது போன்ற அறிவார்ந்த கேள்விகளும் எழுந்த போது அதற்கான விடைகள் தொன்மத்தில் கதைகளாக பெறப்பட்டன. தொன்மங்களுக்கான அடிப்படையானது இயற்கையை உயிருள்ள கூறுகளின் தொகுதியாக கருதும் மனிதனின் பண்படாத மனநிலையில் உள்ளது. ஒரு தொன்மம் எப்போது உருவாகிறது என்றால் மனித கற்பனை ஒரு இயற்கை நிகழ்வை ஆளுமையாக உருவகித்து அல்லது மனிதப்பண்பேற்றி விளக்கம் கொடுக்கும்போது உருவாகிறது. உதாரணமாக நிலவு சூரியனை முந்திச்செல்லாமல் தொடர்ந்து செல்வதை அவதானித்த மனிதன் அதை ’ஆண் ஒருவனால் நிராகரிப்பட்டு அவனை தொடர்ந்து செல்லும் பெண்’ என்ற தொன்மமாக ஆக்கியிருக்கலாம். இந்த நேரடியான தொன்மம் அடுத்தநிலையில் கவித்துவமேற்றப்பட்டு படைப்பூக்க கற்பனை கொண்டவர்களால் கையாளப்படத் துவங்குகிறது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கதை கடத்தப்படுகையில் கதைசொல்லியின் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப அதில் பல்வேறு கூறுகள் சேர்க்கப்படுகின்றன. தொன்மக்கதையில் உள்ள இயற்கை நிகழ்வின் இடத்தை பின்னர் விரிவாக சேர்க்கப்பட்ட மனிதப்பண்பு பற்றிய குறிப்புகள் எடுத்துக்கொள்ளும்போது அந்த நேரடியான இயற்கை நிகழ்வு கதையிலிருந்து மங்கத் தொடங்குகிறது. பிறகு காலம் செல்லச்செல்ல அந்த தொன்மக்கதையின் இயல்பான அடிப்படையான இயற்கை நிகழ்வு மறக்கப்படும்போது அதன் அசலான அர்த்தத்திற்கு தொடர்பே இல்லாத புதிய கூறுகள் அந்த தொன்மத்தில் சேர்க்கப்படலாம் அல்லது வேறு தொன்மங்களிலிருந்தும் கூறுகள் இதற்கு மாற்றப்படலாம். தொன்மத்தை அதனுடைய வளர்ச்சியின் இறுதிப்படிநிலையில் பார்க்கும்போது அதன் அசலான வடிவத்திற்கு தொடர்பற்ற சேர்க்கைகளுடன் இணைந்து அந்த தொன்மம் பெரிதாக வளர்ந்திருக்கலாம். அதை ஆய்வு செய்வது மிகக்கடினமானதாக அல்லது சாத்தியமற்றதாக மாறியிருக்கலாம். யூரிப்பிடீஸ் நாடகங்களில் உள்ள மனிதப்பண்பேற்றப்பட்ட தெய்வங்களை நமக்கு தெரியும் என்றாலும் கூட, அந்த ஹெலெனிய கடவுள்களின் பண்புகளில் அல்லது செயல்களில் உள்ள அடிப்படையான இயற்கை கூறுகளை கண்டுபிடிப்பது நிச்சயம் கடினமாகத்தான் இருக்கும்.

Monday, 25 November 2024

முதல்வினா- அனங்கன்


இந்தியர்களாகிய நம்மில் ‘வேதம்’ என்ற சொல்லை கேள்விப்படாதவர்கள் மிகச் சிறிய அளவில் தான் இருப்பார்கள். நேர்நிலையாகவோ எதிர்நிலையாகவோ வேதம் என்பதை அறிகிறவர்கள் எவ்வளவு பேர் அதை மேலும் அறிய முற்பட்டிருப்பார்கள்  என்று தெரியாது. சொற்பொழிவுகள் அறைகுறை தத்துவ நூல்கள் மூலம் அறிபவர்கள்  வேதங்கள் முக்திக்கான வழிமுறை மற்றும்  நல்லொழுக்கங்கள் ஆகியவற்றால் ஆனது என்று நினைக்கிறார்கள். ஒருமுறை எனது நண்பர் வேதத்தில் முக்தியை பற்றி என்ன சொல்லிருக்கிறது என்று கேட்டார்.  வேதங்கள் {முக்தி} விடுதலையைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று சொன்னேன். அவரால் அதை நம்பமுடியவில்லை. நீங்கள் இன்னும் ஆழ்ந்து வாசித்துப்பாருங்கள் எங்காவது சொல்லப்பட்டிருக்கும். வேதத்தில் சொல்லப்படாத கருத்து எவ்வாறு இத்தனை பெரிய அளவில் வளர்ந்திருக்க முடியும் என்று வாதிட்டார். இதே எண்ணம் பலருக்கும் இருக்கலாம் ஆனால் வேதம் சொல்வது அவற்றை அல்ல.

Saturday, 8 June 2024

சங்கத் தமிழில் கடவுளர் - மு. சண்முகம் பிள்ளை

இந்திரன்


இந்திரன் வானுலகத் தேவர்களின் அதிபதி. 'துறக்கத்து அமரர் செல்வன்' (பரி.5:69), ’அமரர் செல்வன்’ (பரி.5:51), ’வானத்து வளம்கெழு செல்வன்' (பரி.5:59), 'அருநிலை உயர் தெய்வத்து அணங்கு' (பரி.9:12), ’விண்ணோர் வேள்வி முதல்வன்’ (பரி.5:30), என்று சிறப்பிக்கப்படுகின்றான். இவன் வடபால் உயர்ந்தோங்கியுள்ள பெருமலையைக் காவல் புரிபவன் (பரி.9:1-3). நூறு வேள்விகளைப் புரிந்தவன். அதனால் விளைந்த பகைவரை வென்று கொல்லும் வெற்றி படைத்தவன் (முருகு.155-156). ஆயிரம் கண்களை உடையவன் (முருகு155; கலி.105,15; பரி.9-9). பகைவர்களை வருத்தும் இயல்புடைய வச்சிராயுதத்தைக் கையில் ஏந்தியவன் (புறம்.241:3, படி.18:30, கலி.105:15), நெடியோன் என்றும் இவன் குறிக்கப்படுகிறான் (புறம்.241:3). நான்கு கொம்புகள் படைத்த யானையின் பிடரியில் ஏறி நடத்துபவன்.

Sunday, 28 April 2024

சங்கத் தமிழில் வேதநெறி - மு. சண்முகம் பிள்ளை


மறை, வேதம், வாய்மொழி (பரி.3:11-12), எழுதாக் கற்பு (குறுந்.156), கேள்வி (பதிற்.21:1, பரி.2:24,61;3:48, பரி.தி.1:19), முதுமொழி (பரி.3:42,47;8:11;13:10), முதுநூல் (புறம்.166.4) என்றெல்லாம் ‘வேதம்’ சங்க இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது. நான்கு கூறுபாடாக அமைந்தது. ஆறு அங்கத்தாலும் உணரப்பட்டது. பழமையான ஒரு நூல் (புறம்.166:3-4), அருமறை (பரி;1:13,2:57,3:14,4:65), நான்மறை (புறம்.26:13;93:7;362:9; பரி.9:12), நால் வேதம் (புறம்.2:18;15:17), அருமை நான்கு என்னும் அடை மொழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தணரால் ஓதப்படுவது என்னும் கருத்தில் அந்தணர் வேதம், அந்தணர் வேதம் (மது.654-656), அந்தணர் அருமறை (பரி1:13,2:57, 3:14, 4:65), அந்தணாளர் நான்மறை (புறம்.363:8-9), என்றும் குறிக்கப்படுகிறது. நீண்ட சடையையுடைய முதுமுதல்வனது வாக்கை விட்டு நீங்காது உறைவது வேதம் (புறம்.166:12), இது எழுதாமல் செவிவழிக் கேட்டுக் கற்கப்படும் நூல் (குறுந்.156:5). வேதம் இசையோடு பாடப்பெறுவது என்பது,

தாதுஉண் பறவை போது முரன்றாங்கு
ஓதல் அந்தணர் வேதம் பாட (மதுரைக்காஞ்சி 655-656)

என்பதனால் விளங்கும். 'சிறந்த வேதம் விளங்கப் பாடி” (மதுரைக்காஞ்சி.468) என்னும் மதுரைக்காஞ்சித் தொடருக்கு, ''அதர்வ வேதம் ஒழிந்த முதன்மைப்பட்ட வேதங்களைத் தமக்குப் பொருள் தெரியும் படி ஓதி' என்று பழைய உரைகாரர் பொருள் எழுதியுள்ளார். இங்கே 'சிறந்த' என்பது வேதங்கள் நான்கையும் குறிக்கும் பொது அடை மொழியாகவும் கொள்ளத்தக்கது. ஆயினும், வேதங்களுள் சாமவேதம் சிறப்பாகக் கூறப்படுவதனாலும் வேதங்களுள் கானம் செய்யப்படுவதற்கு ஏற்ப அமைந்தது இதுவே ஆதலானும், 'சிறந்த வேதம் என்னும் அடைமொழியும் ’'பாடி” என்னும் தொழிலும் குறிக்கப்பெறுவதனாலும் இது சாமவேதத்தைக் குறிப்பதாகக் கருதலாம் என்று தோன்றுகிறது.

Thursday, 30 November 2023

புதிரும் தீர்வும் - ஸ்ரீ அரவிந்தர்


எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டதா? அல்லது இன்றும் வேத இரகசியம் என எதாவது இருக்கிறதா? 

தற்கால கருத்துக்களின்படி, பழங்கால புதிரொன்று தீர்க்கப்பட்டு அனைவரின் பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளது, அல்லது என்றுமே அப்படி புதிரென ஒன்று இருந்ததில்லை. நவீனகால கருத்துக்களின் படி, ’வேதம் என்பது நாகரிகமடையாத பழங்குடிகளால் ஆளுமையாக உருவகிக்கப்பட்ட இயற்கை சக்திகளை நோக்கி எழுதப்பட்ட வேண்டுதல் மற்றும் சடங்கு சார்ந்த பாடல்களின் தொகை. தொடக்க நிலை வான்வெளி உருவங்களாலும், முழுதும் உருப்பெறாத தொன்மங்களாலும் நிறைந்தவை. பின்னர்வரும் பாடல்களிலேயே ஆழ்ந்த உளவியல்ரீதியான அம்சங்களும் உயர் கருத்துக்களும் காணப்படுகின்றன. அவை ‘கள்வர்’ என்றும் ‘வேத மறுப்பாளர்’ என்றும் வேதப்பாடல்களில் குறிப்பிடப்படும் திராவிடர்களிடமிருந்து பெறப்பட்டவை என்ற கருத்தையும் சிலர் முன்வைக்கின்றனர். எனினும் அப்பாடல்களே பிற்காலத்தில் தோன்றிய வேதாந்த பார்வையின் முதல் விதை.’ இந்த நவீன கோட்பாடு பெரிய அளவில் நிகழ்ந்த சமுகவியல் திறனாய்வுகளின் (critical research) துணைகொண்டுள்ளது. இன்னும் முதிர்ச்சியடையாத ஒப்பீட்டு-சொல்லாய்வியல், ஒப்பீட்டு-தொன்மவியல், ஒப்பீட்டு-மதவியல் போன்று ஊகம்சார் முறைமைகளைக் கொண்டு முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்கும் அறிவியல் துறைகளால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

Sunday, 3 September 2023

வேதக் கடவுள்கள் - மோனியர் வில்லியம்ஸ்

வேதத்திலுள்ள வழிபாட்டு பாடல்களும் துதி பாடல்களும் எந்தெந்த தெய்வங்களுக்காக பாடப்பட்டவை என்று பார்ப்போம். வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வங்கள் மத்திய ஆசியாவில் ஆரிய முன்னோர்களால் வழிபடப்பட்ட தெய்வங்களாக இருக்கலாம். அவர்கள் காற்று, நெருப்பு, நீர், சூரிய கதிர்கள், புயல், மழை ஆகிய இயற்கை ஆற்றல்களை முதலில் கவித்துவமாக உருவகப்படுத்தி, பிறகு வடிவம், குணம், தனித்தன்மை ஆகியவற்றை ஏற்றி வழிபட்டுள்ளனர். இந்த ஆற்றல்கள் ஒரு தெய்வத்தின் பலவித வெளிப்பாடாகவோ அல்லது தனித்தனி தெய்வங்களின் வெளிப்பாடாகவோ கருதப்பட்டிருந்தால் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. தெய்வத்தன்மை ஏற்றப்பட்ட இந்த ஆற்றல்கள் ஒவ்வொன்றுக்கும் நிலவியல் மற்றும் பருவகாலங்களை பொருத்து முதன்மை இடம் அளிக்கப்பட்டு வழிபாடு நிகழ்த்தப்படும். காற்றிலும் வானிலும் உள்ள ஆற்றல்களுக்கே முதலில் தெய்வத்தன்மை ஏற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது. தொடக்கத்தில் அவை அவ்வளவு தெளிவில்லாத பொதுவான ஒரு ஆளுமைப் பண்பையே கொண்டிருந்தன. மதங்களுக்கு விதைகளாக இருந்த துவக்ககால முயற்சிகள் இவை. சில அசலான நம்பிக்கைகள் துவக்ககாலத்தில் சரியாக வரையறுக்கப்படாமல் இருந்தது. உதாரணமாக ’ஒன்று அல்லது பல தெய்வீக ஆற்றல்கள் இந்த பிரபஞ்சத்தை வழிநடத்துகின்றன’ என்ற நம்பிக்கையை சொல்லலாம். ஆனால் இத்தகைய நம்பிக்கைகளில் இருந்தே எல்லா மதங்களும் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். 

மோனியர் வில்லியம்ஸ்