Showing posts with label பயண கட்டுரை. Show all posts
Showing posts with label பயண கட்டுரை. Show all posts

Friday, 8 May 2026

டுடன்காமுன் கல்லறை 7: டுடன்காமுன் மம்மி அறை ஓவியங்கள் - பொன். மகாலிங்கம்

டுடன்காமுனின் மம்மி வைக்கப்பட்டுள்ள சிற்றாலயத்தை இழுத்துச் செல்லும் பூசகர்கள். டுடன்காமுன் கல்லறை ஓவியம், மன்னர்களின் பள்ளத்தாக்கு, லக்ஸோர்.

மன்னர்களின் பள்ளத்தாக்கிலுள்ள கல்லறைகளில் கிட்டத்தட்ட அனைத்திலுமே ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மன்னர்கள் என்றில்லை, மந்திரிகள், தலைமைப் பூசகர்கள், முக்கியப் பிரமுகர்கள் என அனைவரின் கல்லறைகளிலுமே அவரவர் வசதிக்குத் தக்கவாறு ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். மரணத்துக்கு பிந்திய சடங்குகள், மறுமை உலகில் ஆன்மா மேற்கொள்ளும் பயணம், மன்னரின் படையெடுப்புக் காட்சிகள், போர் வெற்றிகள், மாண்டோரின் புத்தகத்திலுள்ள சில பகுதிகள், மம்மியாக்கம் முடிந்து உடலை மரப்பெட்டிக்குள் வைத்துச் செய்யப்படும் சடங்குகள், நிறுத்தி வைக்கப்பட்ட சவப்பெட்டிக்கு எதிரில் நின்றும் அமர்ந்தும் பெண்கள் கண்ணீர் விட்டு அழும் காட்சிகள், சொர்க்கத்தில் மன்னரை எதிர்கொண்டழைத்துச் செல்லும் தெய்வங்கள் - எனப் பலவகையான ஓவியங்கள் அங்கே வரையப்பட்டிருக்கும். 

Saturday, 29 November 2025

டுடன்காமுன் கல்லறை 6: மம்மி மீதான சோதனைகள் - பொன். மகாலிங்கம்

எகிப்திய வரலாற்றில் டுடன்காமுன் கல்லறை முழுமையாகக் கிடைத்த அளவுக்கு வேறு எந்தக் கல்லறையும் முழுமையாகக் கிடைத்ததில்லை. எனவே டுட்டின் மம்மியை மட்டும் கைரோவிலுள்ள அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைப்பதற்கு பதிலாக கல்லறையிலேயே காட்சிக்கு வைப்பதென எகிப்திய அரும்பொருள் சேவைத் துறை முடிவெடுத்தது. கார்ட்டர் குழுவினருக்கு மருத்துவ நிபுணத்துவச் சேவைகளில் உதவிய பேராசிரியர் டக்ளஸ் டெர்ரியின் சோதனைகளுக்குப் பிறகு டுட் மம்மியின் உடற்பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அது ஒரு மரப் பெட்டியில் மணல் நிரப்பப்பட்டு அதன்மேல் கிடத்தப்பட்டது. 

Monday, 6 October 2025

டுடன்காமுன் கல்லறை 5: பிரிக்கப்பட்ட மம்மி - பொன். மகாலிங்கம்

டுடன்காமுன் மம்மி பெட்டி திறக்கப்பட்ட போது

டுடன்காமுன் கல்லறை தொடர்

டுடன்காமுன் கல்லறை என்னும் திரைப்படத்தின் உச்சக்கட்டத்தை நெருங்கியிருந்தார் கார்ட்டர். பெட்டிகளுக்குள் இருந்த மம்மியை, கிவிப் பழத்தைத் தேக்கரண்டியால் அள்ளுவதுபோல் பூப்போல எடுத்துவிடலாம் என்று கணக்குப் போட்டிருந்தார் கார்ட்டர். ஆனால், அது அவ்வளவு எளிதாக அமையவில்லை. கல்பெட்டிக்குள் இருந்த மம்மி வடிவப் பெட்டிக்குள், மேலும் இரண்டு பெட்டிகள் இருந்தன. அவை, மிக மிக நெருக்கமாக வைக்கப்பட்டிருந்தன. இரண்டுக்கும் நடுவே ஒரு சுண்டுவிரலைக்கூட விடமுடியாத அளவுக்கு ஒட்டிக்கொண்டிருந்தன அவை. முதல் பெட்டியைக் காட்டிலும் இரண்டாவது மரப்பெட்டியின் அலங்காரம் மிகச்சிறப்பாக இருந்தது. 

Friday, 8 August 2025

டுடன்காமுன் கல்லறை 4: மகத்தான மம்மி அறை - பொன். மகாலிங்கம்

மம்மி அறை உடைத்துத் திறக்கப்பட்டபோது

முந்தைய பகுதி - டுடன்காமுன் கல்லறை 3: கல்லறை முன்னறைப் பொக்கிஷங்கள்

டுடன்காமுன் கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட செய்தி ஒரே நாளில் கார்ட்டரை உலகப்புகழ் பெறச் செய்தது. எகிப்திலிருந்த முக்கியப் புள்ளிகள் எல்லாரும் கார்ட்டரை மொய்க்கத் தொடங்கினார்கள். அவர் தங்களோடு வந்து கல்லறையைத் தனிப்பட்ட முறையில் சுற்றிக்காட்ட வேண்டுமென்று அதிகாரிகள் முதல் அயல்நாட்டு அரச குடும்பத்தவர் வரை ஆசைப்பட்டார்கள். ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இன்று என்ன கிடைத்தது? இந்த ஒற்றைக் கேள்வியோடு செய்தியாளர்கள் தினமும் துளைத்து எடுத்தனர் கார்ட்டரை. தொடக்கத்தில் முகதாட்சண்யத்துக்காகச் சிலரது ஆசையை நிறைவேற்றி வைத்தார் கார்ட்டர்.

Tuesday, 27 May 2025

டுடன்காமுன் கல்லறை 3: கல்லறை முன்னறைப் பொக்கிஷங்கள் - பொன். மகாலிங்கம்

டுடன்காமுன் கல்லறைச் சுவரைத் துளையிட்டுப் பார்த்த முதல் காட்சியில், பசுவின் தலையைப் போன்ற தோற்றத்தோடு கூடிய, உயரமான ஈமச்சடங்குப் படுக்கையும், ஏராளமான பெட்டிகளும் சின்னச் சின்ன நாற்காலிகளும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைக் கொண்ட பெட்டிகளும் தெரிந்தன கார்ட்டருக்கு. டுடன்காமுன் கல்லறையின் இரண்டாவது நுழைவாயில் தடுப்புச் சுவர் முழுமையாக உடைக்கப்பட்டது 1922ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி. பெங்குவின் பதிப்பகம் வெளியிட்ட ஒரு புத்தகம், இந்தத் தேதி நவம்பர் 29 என்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும். இரண்டாவது தடுப்புச் சுவரை உடைத்து உள்ளே போனதும், கட்டுக்கடங்காத ஆர்வத்தில் எதையும் எடுத்துப் பார்த்து இடம் மாற்றிவிடவில்லை கார்ட்டர். முதலில், கல்லறைக்கு உள்ளே மின்விளக்கு வசதிக்கு ஏற்பாடு செய்து, ஒவ்வொன்றாகப் படம் எடுத்துப் பதிவு செய்தார். 

டுடன்காமுன் சிலையுடன் கட்டுரையாசிரியர்

ஒவ்வொரு பொருளுக்கும் இலக்கமிட்டு அந்த எண்ணோடு சேர்த்துப் படங்களைப் பதிவு செய்தார். எந்தப் பொருள், எந்தத் திசையில், என்ன நிலையில் இருந்தது என்பது, கார்ட்டருக்கு மிகவும் முக்கியம். அது, பல தகவல்களைச் சொல்லாமல் சொல்லும். கல்லறையில் இருந்த பெரிய பொருள்கள் அனைத்திலுமே டுடன்காமுனின் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார் கார்ட்டர். பெரும்பாலான சிறிய பொருள்களிலும்கூட பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

Saturday, 5 April 2025

டுடன்காமுன் கல்லறை 2 : அகழ்ந்தெடுக்கப்பட்ட அதிசயம்- பொன். மகாலிங்கம்

டுடன்காமுன் கல்லறையைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட கார்ட்டருக்கு, முதலில் தோன்றியது மலைப்பு. எங்கிருந்து தோண்டத் தொடங்குவது என்பதைத் தீர்மானிக்க முடியாமல் திண்டாடினார் அவர். குப்பையாகக் கிடக்கும் ஒரு வீட்டைச் சுத்தம் செய்யக் கிளம்பினால், எங்கிருந்து தொடங்குவது என்று திணறுவோமே! அதுபோல இருந்தது, கார்ட்டரின் நிலை அன்று. மலைத்துப்போய் நின்றுவிட முடியுமா ? செய்யவேண்டிய வேலை, மலையாய்க் குவிந்து கிடக்கிறதே. ஏற்கெனவே மன்னர்களின் பள்ளத்தாக்கில், தோண்டித் துருவி ஆய்வு நடத்தியவர்கள் அள்ளிக்கொட்டிய குப்பையே, மலைபோல் குவிந்து கிடந்தது.

பிரமிடைப் போன்ற தோற்றமுள்ள குன்றும் மன்னர்களின் பள்ளத்தாக்கும்

Sunday, 12 January 2025

டுடன்காமுன் கல்லறை 1 - கார்ட்டர் அறிமுகம், பொன். மகாலிங்கம்

டுடன்காமுன் (இளவயது)

வரலாறு விசித்திரமானது. யாரை வரலாற்றிலிருந்து துடைத்தொழிக்க வேண்டுமெனச் சிலர் விரும்பினார்களோ அதற்கு நேர்மாறாக நடப்பதுண்டு. தனக்குப் பிடிக்காதவர்களை இருந்த இடம் தெரியாமல் நசுக்கி அழித்து ஒழிக்க வேண்டுமெனக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட ஆட்சியாளர்கள் உண்டு. ஆனால், யாரை மறைக்க விரும்பினார்களோ அவர்கள் ஒன்றுமே செய்யாமல் புதுவரலாறு படைப்பதுண்டு. சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து!... ஆசான் ஜெமோவின் வார்த்தைகளில் சொன்னால், “வீழ்வதனூடாக எழுந்தவர்கள் வரலாற்றில் எப்போதுமுண்டு”.

எகிப்திய வரலாற்றில் அப்படிப்பட்ட அடையாள அழிப்புக்கு ஆளான மாமன்னர்களில் ஒருவர் டுடன்காமுன். அவரது அப்பாவுக்கும் அதே கதிதான். ஆனால், மற்ற எல்லாரைக் காட்டிலும் அவர்களே இன்று ஆக அதிகமாகப் பேசப்படுகின்றனர். டுடன்காமுனின் தந்தை அக்கினாட்டன், பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்திலிருந்த பழைய சமயத்தைக் கைவிட்டு ஆதவனைக் கடவுளாக்கித் திடீரென ஒரு புதிய சமயத்தைத் தோற்றுவித்தார். எண்ணற்ற கடவுள்களை வணங்கும் எகிப்தின் பாரம்பரியப் பழக்கத்தைக் கைவிட்டு, ஆட்டன் என்னும் ஒற்றைச் சூரியக் கடவுளை வணங்கும் புதிய சமயத்தை உருவாக்கினார்.