Showing posts with label சூழலியல். Show all posts
Showing posts with label சூழலியல். Show all posts

Sunday, 30 November 2025

பறத்தலின் தருணம் - டேவிட் அட்டன்பரோ

டேவிட் அட்டன்பரோ
போர்னியோவின் பசுமையான காடுகளின் மேல் வானில் உயரத்தில் ஒரு வேட்டையாடி பறவை வட்டமிடுகிறது. மரங்களின் நடுவே சுத்த வெண்ணிறத்தில் செங்குத்தாக உயர்ந்து நிற்கும் சுண்ணாம்புப் பாறைகளுக்கு மேலே அது பறக்கிறது. முன்னதாக அன்றைய காலைமுதலே அப்பறவை எவ்வித அசைவுமின்றி மரங்களில் அமர்ந்திருந்தது. அதை பிற விலங்குகள் அதிகம் கவனித்திருக்க வாய்ப்பில்லை. மாலைச்சூரியன் தன் பிரகாசத்தை இழந்து மூழ்கும் வேளையில், தன் எளிய சிறகசைப்பால் காற்றில் மிதந்து இரவு ரோந்தை துவங்கியுள்ளது பறவை. கீழ்நோக்கிய அதன் பார்வையில் சுண்ணாம்புப் பாறையின் முகப்பில் அமைந்துள்ள குகையின் இருண்ட வாய்ப்பகுதி தென்படுகிறது. குகையின் ஆழத்திற்குள் லட்சக்கணக்கான வௌவால்கள் உத்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி, பாறைபரப்பையே மறைக்கும் அளவுக்கு அடர்த்தியாக செறிந்துள்ளன. அவற்றால் பருந்தைப் போல சரிந்து வரும் சூரியனைப் பார்த்து அது மறையப்போவதை தெரிந்துகொள்ள முடியாது. அல்லது வெளியே வெப்பநிலை குறைந்து வருவதையும் அவற்றால் உணர முடியாது, ஏனெனில் குகைக்குள் அபாரமான அளவுக்கு வெப்பநிலை என்பது சீராகவே இருக்கும். இருந்தாலும் வெளியே பகல் முடிவுக்கு வருவதை எவ்வாறோ வெளவால்கள் உணர்ந்து கொள்கின்றன, இருட்டி வரும் காட்டுக்குள் பறந்து பூச்சிகளுக்கான இரவு வேட்டையை அவை சீக்கிரமே தொடங்கப் போகின்றன.

ஒரு நூற்றாண்டின் கதைசொல்லி - லோகமாதேவி

டேவிட் அட்டன்பரோ
வேட்டைக்காரரான ஆர்ச்சிபால்டு கனடாவின் அடர்காடொன்றில் நீரெலி (Beaver) வேட்டையில் ஈடுபட்டிருந்தார். உடன் அவரது மனைவி அனஹாரியோவுமிருந்தார். இங்கிலாந்திலிருந்து கனடாவுக்கு தனது 17-ம் வயதில் வந்த ஆர்ச்சிபால்டு வட அமெரிக்க ஓஜிப்வே (Ojibwe) பழங்குடி மக்களின் வாழ் முறைகளில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். அவர்களுடன் வாழ்ந்து , வேட்டையாடுதல், சிறு விலங்குகளைப் பொறிவைத்துப் பிடித்தல், அசாதாரண வாழ்விடங்களிலும் பிழைத்துக் கொள்ளுதல் போன்றவற்றைக் கற்றுக்கொண்டார். 

பூவுலகு என்னும் அற்புதம் - சு. தியடோர் பாஸ்கரன்

டேவிட் அட்டன்பரோ(1956)
ஒளிப்படக்கருவி புழக்கத்தில் வந்த சில ஆண்டுகளிலேயே அது காட்டுயிரை ஆவணப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் அதை கையாண்ட முன்னோடிகளில் ஒருவராக எஃப். டபிள்யூ. சேம்பியன் (F.W. Champion) என்ற ஆங்கிலேய வனத்துறை அதிகாரி நினைவு கூறப்படுகின்றார். காட்டில் புலி வரும் பாதையை அறிந்து, அங்கே ஒரு காமிராவை பொருத்தி வைத்து, அதிலிருந்து ஒரு சிறு கம்பியை குறுக்கே வைத்து விடுவார். புலியின் கால் அதில் பட்டவுடன் காமிரா இயக்கப்படும்.

வேங்கையை முதல்முதலாக படமெடுத்தவர் இவர்தான். ஒன்பது புலிகளை, வெவ்வேறு இடங்களில் ஒளிப்படமாக எடுத்தார். அந்த படங்களை பார்த்த போது ஒரு பிரமிக்கத்தக்க அறிவியல் புரிதல் அவருக்கு கிடைத்தது. ஒவ்வோரு வேங்கையின் வரிகளும், மனிதரின் கைரேகையைப்போல தனிப்பட்டவை. ஆகவே ஒளிப்படத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வேங்கையும் அடையாளம் காண முடியும். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றிய இந்த உத்திதான் தானியங்கி காமிராவின் முதல் அவதாரம். பின்னர் சலனப்படம் வந்த போது சிலர் காட்டுயிரைப் படமெடுத்தனர். வேட்டையாடி ஜிம் கார்பெட் (Jim Corbett) வேங்கைகளைப்பற்றி சில ரீல்களை எடுத்ததாக எழுதுகின்றார். அவை பார்க்கக் கிடைக்கவில்லை. தொலைக்காட்சி பரவலாக வந்த பின்னர் தான் காட்டுயிரை படமெடுக்கும் பணி மும்முரமாக தொடங்கியது. 

அவர் நோக்கில் நம் பூமி - தேவனபள்ளி வீணாவாணி

டேவிட் அட்டன்பரோ
எங்கள் ஊருக்கு முதன்முதலில் டிவி அறிமுகமான போது அது ஏற்படுத்திய சலசலப்பு கொஞ்சநஞ்சம் அல்ல. அப்போதெல்லாம் டிவியில் செய்திகள் பார்ப்பது, பாடல்கள் கேட்பது போன்றவை ஒரு பெரிய கோலாகலமாய்க் கடந்து போகும். பின்னர் 90களில் கேபிள் டிவிக்கள் வந்தன. கேபிள் டிவி மூலமாக வீடியோ கேஸட்டில் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மட்டுமல்லாமல் அது வரை பரிச்சயமே இல்லாத டிஸ்கவரி, பிபிசி போன்ற சேனல்களோடு அறிமுகமும் ஏற்பட்டது. இவை ஆங்கில சேனல்கள். பாஷை புரியாவிட்டாலும் அந்தச் சேனல்களில் பறவைகள் மற்றும் விலங்குகள் பற்றிய ஆவணப்படங்கள் வரும்போதெல்லாம் ஆச்சரியம் ததும்பும் கண்களோடு பார்த்துக் கொண்டிருப்போம். அது வரை வீட்டு வாசலில் தென்படும் காக்கை, கூஉஉ என்றால் எதிர்கூவல் விடுக்கும் குயில், பல்லி, பூனை, மிஞ்சிப்போனால் ஒரு சில பூச்சிகள் இவற்றைத் தவிர எதையும் அறிந்திராத எங்களுக்கு இந்தப் பரந்த உலகத்தில் உள்ள எத்தனையோ உயிரினங்களைக் கண்முன்னே காட்டி, அற்புதமான ஒளிப்பதிவு நேர்த்தியுடனும் அதற்கேற்ற பின்னணி இசையோடும் சேர்ந்து ஒரு குரல் இவற்றை விவரித்துக் கொண்டே செல்லும்.

நமது வரவேற்பறையில் காலநிலை மாற்றம் - ரகு ராமன்

வால்ரஸ் (Walrus) photo: vermontpublic.org

கடல் விலங்குகள் அந்தச் சிறிய தீவு முழுதும் பாறைகள் போல் குவிந்திருக்கின்றன. பனிக்கடல் யானை என்று அழைக்கப்படும் வால்ரஸ் (Walrus) கூடியிருக்கும் இடம் அது. ஆகாயத்தில் இருந்து பார்க்கும் பொழுது தீவே நீலக் கடலில் மிதக்கும் ஒரு பெரும் உயிரினத்தைப் போல் உள்ளது. அதன் பழுப்பு சருமம் மெல்ல அதிர்ந்து, தசையாலான அலைகளாக விரிந்து, தீவின் எல்லா திசைகளுக்கும் பரவுகிறது. வாயில் துருத்திக் கொண்டிருக்கும் இரு தந்தங்கள் மின்ன, ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு, கண்களில் மிரட்சியும், கோபமும் எதிரொலிக்க, ஒன்றின் மேல் ஒன்று படர்ந்து, தவழ்ந்து தத்தி தத்தி முன்னேறுகின்றன. 

மீட்சியின் சாட்சியம் - கடலூர் சீனு

மேட்ரிக்ஸ் படத்தில் தன்னிடம் சிக்கிக்கொண்ட மார்ஃபிஸ் வசம் " நீங்கள் எல்லோரும் பாலூட்டி வகை என்றுதான் எண்ணி இருந்தேன். அப்படி இல்லை. பாலூட்டிகள் கொண்டும் கொடுத்தும் சூழல் அமைப்புக்கு தகவமைத்து வாழ்ந்தவை. நீங்கள் வேறு. பெற்றுப் பெருக வேண்டும் எனில் எதையும் எல்லாவற்றையும் அழிப்பவர்கள் நீங்கள். எல்லாம் அழிந்த பிறகு, அதே முறையில் வாழ வேறு பூமி தேடி செல்பவர்கள் நீங்கள். நீங்கள் வெறும் பாலூட்டிகளாக இருந்திருந்தால் உங்களுக்கு இப்போது உள்ள இந்த நிலை வந்திருக்காது" என்று ஸ்மித் சொல்வான்.

Saturday, 29 November 2025

Cereal and Natural History - Sambavi

David Attenborough 
Hans and Lotte Hass, Austrian filmmakers, were already pushing the boundaries of what was possible by taking cameras down below the sea and touring the world aboard their schooner, the Xafira, in the 1950s when Attenborough’s broadcasting career just began. In one of their 1953 Galápagos films, a crewman handled a sea lion pup, having crawled across the volcanic rock of Fernandina honking at sea lions to attract them. A penguin and giant tortoise were brought on board the Xafira. And as Lotte Hass took photographs, she’d coax the poor creature to “not be frightened” and “look pleasant.” 

Thursday, 14 March 2024

என்னை ஈர்க்கும் இந்திய கானுயிர் - மா. கிருஷ்ணன்

ஏன் இந்திய காட்டுயிர் என்னை  ஈர்க்கிறது?  என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், கடந்த முப்பது வருடங்களில் நாடு முழுவதும் நான் காணநேர்ந்த காட்டுயிர், தாவரங்கள் பற்றிய நினைவுகளை மீட்டுக்கொள்கிறேன் என்று சொல்லலாம். இருந்தும் அதிலிருந்து குறிப்பிட்ட ஒன்றை மட்டும் சொல்வது  எளிதல்ல.

Sunday, 5 March 2023

நாம் ஒருபுறம் சூழலியல் பற்றி பேசிக்கொண்டே மறுபுறம் அதை சீரழித்துக்கொண்டிருக்கிறோம் - தியடோர் பாஸ்கரன் நேர்காணல்

சு. தியடோர் பாஸ்கரன் தமிழ் எழுத்தாளர்.  தமிழின் முன்னோடி சூழலியல் ஆளுமை. தமிழில் சூழலியலை முதன்மைப்படுத்தி எழுதியவர். சூழலியலுக்கான சொற்றொடர்களை உருவாக்கியவர். சினிமாவின் மீது பண்பாட்டு நோக்கில் ஆய்வுகள் செய்திருக்கிறார். நாடகங்களை பற்றியும் ஆய்வுகள் செய்திருக்கிறார். தன்னுடைய இளமை முதல் வரலாற்றில் ஆர்வமுடைய பாஸ்கரன், பிரபல ஆங்கில பத்திரிக்கைகளில் வரலாற்றுக் கட்டுரைகளை 1967 முதல்  தொடர்ந்து எழுதி வருகிறார். 


தியடோர் பாஸ்கரன் மனைவி திலகாவுடன்