“கூடியாட்டம்” என்ற கேரளத்தின் செவ்வியல் நிகழ்த்துகலை சமஸ்கிருத நாடகங்களை அரங்கில் நிகழ்த்தகூடியது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியது. உலகில் உள்ள அரங்கு சார்ந்த நிகழ்த்துகலைகளில் மிகமிகப் பழைமையானது என்ற அந்தஸ்தை பெற தகுதியான கூடியாட்டம் சமீபகாலத்தில் உலகெங்குமுள்ள அரங்குகலை ரசிகர்களின், அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது. 2001 ஆம் ஆண்டில் கூடியாட்டம் 'மானுடத்தின் மொழி வழி, பண்பாடு சார்ந்த மரபுசின்னங்களின் தலைசிறந்த படைப்பு'களுள் ஒன்றாக UNESCO அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிற பகுதிகளில் சமஸ்கிருத நாடகங்களை அரங்கில் நிகழ்த்தும் வழக்கம் நின்றுவிட்ட போதிலும் தென்கோடி மாநிலமான கேரளத்தில் மட்டும் இந்நாடக மரபு அறுபடாமல் நீடிப்பது வரலாற்றுப்பூர்வமாக ஆர்வமூட்டும் விஷயம். அஶ்வகோஷர், பாஸன், சூத்ரகர், காளிதாசன், ஸ்ரீஹர்ஷன், போதாயனர், மகேந்திரவிக்கிரமவர்மன் இன்னும் இதுபோன்று பல நாடக ஆசிரியர்களால் எழுதப்பட்ட சமஸ்கிருத நாடகங்களின் வளமான தொகை நமக்கு கிடைக்கிறது. ஆனால் இவை எழுதப்பட்ட காலத்திலேயே மேடையில் அரங்கேற்றப்பட்டதா என்பது குறித்து நமக்கு போதிய ஆதாரங்கள் இல்லை. ஒருசில சமஸ்கிருத நாடங்களிலும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்திலும் அரங்கேற்றம் தொடர்பான குறிப்புகள் உள்ளன. கூடியாட்டத்தின் நிகழ்த்து வடிவம் பெரும்பாலும் நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள அழகியல் விதிகளை கடைப்பிடித்தாலும் அதற்கென தனித்துவமான அரங்க ஒழுங்குகளும் நடிப்பு முறைகளும் உண்டு. பண்டைய காலங்களில் கேரளத்தில் கோவில் சார்ந்த சாதிப்பிரிவினரான அம்பலவாசிகளில் சாக்கியார், நம்பியார் என்ற சாதிகள் தவிர பிற எவருக்கும் கூடியாட்டத்தில் ஈடுபட வாய்ப்பிருக்கவில்லை. 1950ற்கு முன் கூடியாட்டம் கோவிலில் மட்டும் நிகழ்வதாக, ஒருவகையான புனிதமான சடங்குசார்ந்த கலைவடிவமாக இருந்திருக்கிறது. நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் விரிவான அபிநய முறைமையால், சிக்கலான அரங்க இலக்கணங்களால் கூடியாட்டம் மிகக்குறுகிய வட்டத்துக்குள், அவ்வளவாக மக்கள் செல்வாக்கு இல்லாத கலைவடிவமாகவே இருந்து வந்திருக்கிறது. அதன் கைமுத்திரைகளும் நடைமுறைகளும் பரிச்சயமான வெகுசிலருக்கு மட்டுமே புரிந்துகொண்டு பின்தொடர வாய்ப்பளித்தது. கூடியாட்டத்தின் அரங்க நடைமுறைகளுக்கும் நாட்டிய சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளதற்கும் வெளிப்படையான வேறுபாடுகள் உண்டு, இந்த முரண்பாட்டுக்கான காரணமாக அறிஞர்கள் அளிக்கும் அதிகபட்ச விளக்கம் இது நிலப்பகுதி சார்ந்த மாறுதலாக இருக்கலாம் என்பதே. எனில் இந்த அரங்க கலைவடிவின் தனித்தன்மைகள் என்னென்ன?

