Showing posts with label விஷ்ணு. Show all posts
Showing posts with label விஷ்ணு. Show all posts

Thursday, 14 March 2024

நாட்டார் மரபில் விஷ்ணு - அ.கா.பெருமாள்


தமிழக நாட்டார் தெய்வங்கள், வழிபாடு, நாட்டார் சடங்குகள் பற்றி ஆராய்ந்தவர்களில் பெரும்பாலோர் இவற்றை சைவச்சார்புடன் தொடர்புபடுத்திப் பேசுவது வழக்கமாக உள்ளது. நாட்டார் தெய்வங்களின் வழிபாட்டு மரபில் சிவன், பார்வதி தொடர்பான கதைகளே அதிகம் உள்ளன. சைவத்தை ஒப்பிடும்போது வைணவம் அல்லது விஷ்ணு தொடர்பான கதைகள், தெய்வங்கள், வழிபாட்டு முறைகள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இராமாயண, பாரதக் கதைகள் தமிழகத்தில் வழக்கிலிருந்தன. இவை பற்றிய சில சான்றுகள் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன. இராமாயணத்தின் முழுக்கதையும் அல்லது வான்மீகியின் மூலவடிவமும் சங்க காலத்தில் வந்து சேர்ந்ததா என்பதை சரியாகச் சொல்ல முடியவில்லை. அதே சமயத்தில் சங்கப்பாடல்களில் காணப்படுகின்ற இராமாயணத் துணுக்குகள், வாய்மொழியாகப் பேசப்பட்டவற்றின் அறுபட்ட துண்டுகளும் அல்ல.