டுடன்காமுன் கல்லறைச் சுவரைத் துளையிட்டுப் பார்த்த முதல் காட்சியில், பசுவின் தலையைப் போன்ற தோற்றத்தோடு கூடிய, உயரமான ஈமச்சடங்குப் படுக்கையும், ஏராளமான பெட்டிகளும் சின்னச் சின்ன நாற்காலிகளும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைக் கொண்ட பெட்டிகளும் தெரிந்தன கார்ட்டருக்கு. டுடன்காமுன் கல்லறையின் இரண்டாவது நுழைவாயில் தடுப்புச் சுவர் முழுமையாக உடைக்கப்பட்டது 1922ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி. பெங்குவின் பதிப்பகம் வெளியிட்ட ஒரு புத்தகம், இந்தத் தேதி நவம்பர் 29 என்கிறது. இருந்துவிட்டுப் போகட்டும். இரண்டாவது தடுப்புச் சுவரை உடைத்து உள்ளே போனதும், கட்டுக்கடங்காத ஆர்வத்தில் எதையும் எடுத்துப் பார்த்து இடம் மாற்றிவிடவில்லை கார்ட்டர். முதலில், கல்லறைக்கு உள்ளே மின்விளக்கு வசதிக்கு ஏற்பாடு செய்து, ஒவ்வொன்றாகப் படம் எடுத்துப் பதிவு செய்தார்.
![]() |
டுடன்காமுன் சிலையுடன் கட்டுரையாசிரியர் |
ஒவ்வொரு பொருளுக்கும் இலக்கமிட்டு அந்த எண்ணோடு சேர்த்துப் படங்களைப் பதிவு செய்தார். எந்தப் பொருள், எந்தத் திசையில், என்ன நிலையில் இருந்தது என்பது, கார்ட்டருக்கு மிகவும் முக்கியம். அது, பல தகவல்களைச் சொல்லாமல் சொல்லும். கல்லறையில் இருந்த பெரிய பொருள்கள் அனைத்திலுமே டுடன்காமுனின் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததாகக் கூறுகிறார் கார்ட்டர். பெரும்பாலான சிறிய பொருள்களிலும்கூட பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
கார்ட்டரும் கார்னர்வான் பிரபுவும் கல்லறையை நன்கு ஆராய்ந்தபோது அங்கே ஒன்றுக்கு மேற்பட்ட அறைகள் இருப்பதை உணர்ந்தனர். இடைவழி சரிவாக இறங்கி முட்டிக்கொள்வது Antechamber எனப்படும் முதலில் உள்ள முன்னறையில். இதற்குத் தென்புற அறை என்றும் பெயர் இருக்கிறது. இது தென் வடலாகச் செவ்வக வடிவத்தில் இருக்கிறது. 26 அடி நீளமும் 12 அடி அகலமும் கொண்டது முன்னறை. கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி இறங்கும் படிக்கட்டுக்கு நேர் செங்குத்தாக அமைந்திருக்கிறது இந்த அறை.
![]() |
கல்லறைத் தோற்றம் பருந்துப் பார்வையில் |
முன்னறையில் நானாவிதமான பொருள்கள் இருந்தன. இரண்டுமுறை உள்ளே புகுந்த கள்வர்கள் அங்கிருந்தவற்றைக் கண்டபடி வாரி இறைத்து கந்தர்கோலமாக்கிப் போட்டிருப்பர் என்று எதிர்பார்த்தால், அப்படி இல்லை என்கிறார் கார்ட்டர். முன்னறை ஓரளவுக்குத் திருத்தமாகவே இருந்தது. முதல்முறை அதைப் பார்ப்போர் அங்குக் கள்வர்கள் நுழைந்தார்களா என்று ஆச்சர்யப்படும் அளவுக்குப் பொருள்கள் ஓரளவுக்குச் சீராகவே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கு ஏதாவது குழப்பம் நேர்ந்ததுபோல உணர்ந்தால், அது ஈமச் சடங்குகள் நடக்கும்போதே நடந்த குழப்பமாக இருந்திருக்கவேண்டும் என்றுதான் முதலில் ஊகித்தார் கார்ட்டர்.
ஆனால், முன்னறைப் பொருள்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து அப்புறப்படுத்தும்போதுதான் அங்கிருந்த ஒழுங்கு, கள்வர்களின் கொள்ளைக்குப் பின் அவசர அவசரமாக அந்த இடத்தை ஒழுங்குபடுத்திய நபர்களின் வேலை என்பது புரிந்ததாகக் கூறுகிறார் கார்ட்டர். கள்வர்கள் அலங்கோலமாக்கிப் போட்டிருந்த முன்னறையைப் பின்னர் யாரோ ஒழுங்குபடுத்திக் கல்லறையை மீண்டும் மூடி முத்திரையிட்டுள்ளனர். முன்னறையில் தூசி, உடைந்த பொருள்கள், பானைத் துண்டுகள், சில கூடைகள், காய்ந்த பூக்கள், இலை-தழைகள் இருந்தன. அலமாரிகள் திறந்து கிடந்தன. நறுமணத் தைலம் வைக்கப்பட்டிருந்த பளிங்குப் புட்டிகள் காலியாகக் கிடந்தன. அவற்றை மூடி வைத்திருந்த துணியால் சுற்றப்பட்ட களிமண் மூடிகள் சிதறிக்கிடந்தன.
![]() |
முன்னறையில் இருந்த பசுத்தலைக் கட்டில். கீழே உணவுப் பெட்டிகள் |
![]() |
பெண் சிங்க முகக் கட்டிலும் டுடன்காமுன் சிலைகளும். கீழே அம்புப் பெட்டியும் துணிமணிப் பெட்டியும். சுவரோரம் கிடப்பவை முனை முறிக்கப்பட்ட அம்புகள் |
உடைந்தும் சிதறியும் கிடந்தாலும் பெரும்பாலான பொருள்கள் அங்கேயேதான் இருந்தன என்கிறார் கார்ட்டர். கள்வர்கள் சில பொருள்களை வெவ்வேறு இடங்களில் தூக்கி எறிந்துவிட்டுப் போயிருந்தனர். ஒரே பொருளின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு அறைகளில் இறைந்து கிடக்கக் காணப்பட்டதையும் கார்ட்டர் பதிவு செய்திருக்கிறார். முன்னறையில் மட்டும் 600 முதல் 700 பொருள்கள்வரை கிடைத்ததாகத் தனது புத்தகத்தின் முதல் பகுதியில் பதிவு செய்துள்ளார் கார்ட்டர். ஒரு பெரிய பெட்டிக்குள் இருப்பனவற்றைத் தனித்தனிப் பொருள்களாகக் கணக்கெடுத்தால் எண்ணிக்கை கூடலாம். முன்னறைக்கு வரும் வழியில் இருந்த இடைவழியைத் துப்புரவு செய்யும்போது அந்தக் குப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் பல்வேறு மன்னர்களின் காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருந்தன. அவை ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பொருள்கள். ஏதேதோ மன்னர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட சிதறல்கள் அங்கே கிடந்தன.
அதனால்தான் முதலில் இது கல்லறைப் பொருள்களைச் சேகரித்துவைக்கும் ஒரு பண்டசாலையோ என்ற எண்ணம் கார்ட்டருக்கு எழுந்தது. ஆனால் இந்த முன்னறையில் இருந்த பொருள்கள் பெரும்பாலானவற்றில் மன்னர் டுடன்காமுனின் பெயர் மட்டும்தான் பொறிக்கப்பட்டிருந்தது. முன்னறையில் இருந்த பெட்டிகள் சிலவற்றின் மூடியில் அந்தப் பெட்டிக்குள் என்னென்ன பொருள்கள் இருந்தன என்பதைப் பட்டியலிடும் குறிப்புகள் இருந்தனவாம். அவற்றை வைத்துத்தான் பெரும்பாலான நேரம் என்னென்ன பொருள்கள் பெட்டியில் இருந்து காணாமற்போயின என்பதையே தெரிந்துகொள்ளமுடிந்ததாம்.
எடுத்துக்காட்டாக, கைத்தடி, அம்புகள், வில் ஆகியவை இருப்பதாகக் குறிப்பு எழுதப்பட்ட ஒரு நீண்ட வெள்ளைப் பெட்டிக்குள், டுடன்காமுனின் உள்ளாடைகள் திணிக்கப்பட்டிருந்தன. அம்புகள் அனைத்திலும் அவற்றின் உலோக முனை ஒடிக்கப்பட்டிருந்தது. அவற்றில் சில தரையில் கிடக்கக் காணப்பட்டன. அம்புகள் முன்னறையெங்கும் சிதறிக் கிடந்தன. முன்னறையில் மூன்று ஈமச் சடங்குக் கட்டில்கள் கிடைத்தன. அந்தக் கட்டில் காலின் மேற்புறத்தில் பெண் சிங்கம், பசு, நீர்யானையும் முதலையும் கலந்த விலங்கு உருவம்-ஆகியவற்றின் தலைப்பகுதிகள் செதுக்கப்பட்டிருந்தன. நீர்யானை, முதலை இரண்டும் கலந்த விலங்கின் நாக்கும் பற்களும் தந்தத்தால் செய்யப்பட்டுப் பொருத்தப்பட்டிருந்தன.
![]() |
முதலை, நீர்யானை முகக் கட்டில். கீழே தங்க அரியாசனம் |
இந்த விநோதக் கலப்பு விலங்கின் பின்புற உடல்பகுதி முதலையின் வால்போல் முடிகிறது. பசுவின் தலையைப் போல் முகப்புக்கொண்ட கட்டிலில் பசுவின் கொம்புகளுக்கு நடுவே சூரியத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. இரவில் ஒளிரும் நட்சத்திரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பசுவின் உடலில் சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகளைப் போல் மூன்று முனைகள் கொண்ட சின்னச் சின்ன வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கடல் அரிப்பைத் தடுக்க மும்பை நகரக் கடற்கரையில் போடப்பட்டிருக்கும் டெட்ராபோட் (Tetrapod) வடிவத்தை ஒத்திருந்தன அந்த வடிவங்கள். சிறுத்தை சொர்கத்தின் குறியீடு என்ற ஒரு நம்பிக்கையும் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. டுடன்காமுனின் சடலம் மம்மியாகப் பதப்படுத்தப்பட்ட ஒவ்வொரு கட்டத்திலும் அது இந்த ஈமச் சடங்குக் கட்டில்கள் ஒவ்வொன்றில் கிடத்தப்பட்டிருந்திருக்கும். உயிரோடு இருந்தபோது மன்னர் ஒருபோதும் இதில் படுத்துத் துயின்றிருக்க மாட்டார். இந்த மூன்று கட்டில்களையுமே நாங்கள் படங்களில்தான் பார்க்க முடிந்தது. நேரில் பார்க்கமுடியவில்லை.
முதலையும் நீர்யானையும் கலந்த வடிவமுள்ள தலையைக் கொண்ட கட்டிலுக்குக் கீழேதான் டுடன்காமுனின் தங்க அரச அரியணை வைக்கப்பட்டிருந்தது. தங்க ரேக்குகளாலும் வண்ணக் கல் சாந்துக் கலவையாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த அரியணை. டுடன்காமுன் கல்லறைக் கண்டுபிடிப்புகளில் முக்கியமான பத்து அரும்பொருள்களில் தங்க முகமூடி, தங்க உருவப்பெட்டிக்குப் பின் இதை வரிசைப்படுத்தலாம். அத்தனை அழகு இந்த அரியணை. நல்லவேளை பெரிதாக இருந்ததால் களவாணிகள் இதைக் கைவிட்டுச் சென்றிருக்கவேண்டும்.
![]() |
தங்க அரியணை |
இந்தத் தங்க அரியணையின் அழகை வண்ணப்படத்தில்தான் உங்களால் முழுமையாக உணரமுடியும். அரியணையின் நான்கு கால்களும் சிங்கத்தின் பாதத்தைப் போல் முடிகின்றன, முன்னாலுள்ள இரண்டு கால்களும் மேலே முடியும் இடத்தில் சிங்கமுகம் பொருத்தப்பட்டுள்ளது. “அரி”யாசனம் அல்லவா? மலர்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தூண்களைக் கொண்ட அரண்மனை அறையிலுள்ள நாற்காலியில், மன்னர் மெத்தைத் திண்டு மேல் அமர்ந்திருக்க, மகாராணி அன்க்கேசெனமுன் அன்போடு அவர்மேல் ஏதோ வாசனைத் தைலத்தைக் கிண்ணத்தில் இருந்து எடுத்துத் தடவுவதுபோன்ற காட்சி அரியணையில் வடிக்கப்பட்டுள்ளது. அரண்மனைக்கு மேலிருந்து சூரியனும் சூரியக் கிரணங்களும் காட்டப்பட்டுள்ளன. கிரணங்களின் முடிவில் ஆசிர்வதிக்கும் கரங்கள் உள்ளன. இருவரின் மூக்கிற்கு முன்னாலும் வழக்கம்போல் அமர்ணா பாணியில் சூரியக் கதிரின் முடிவில் உயிர்க்குறியான அங்க் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது.
மகாராணி ஒளி ஊடுருவக்கூடிய மடிப்புகள் மிகுந்த ஆடையை அணிந்துள்ளார். அந்த ஆடை வெள்ளியால் பதிக்கப்பட்டுள்ளது. மன்னர் மடிப்புகள் மிகுந்த நீண்ட ஆடையை கணுக்காலுக்குச் சற்று மேல்வரை அணிந்திருக்கிறார். அதுவும் வெள்ளியால் பதிக்கப்பட்டுள்ளது. பல வண்ணக் கல்சாந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட இடைவாரும் உள்ளது மன்னருக்கு. அரியணைக்கு முன்னால் கால் வைப்பதற்காகப் போடப்பட்டுள்ள மணைப் பலகையிலும் ஏராளமான வேலைப்பாடு. அதில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம் “மகத்தான வெளிநாடுகள் எல்லாம், மன்னா உன் காலடியில்” என்கிறது.
கால் வைக்கும் மணைப் பலகையின் பக்கவாட்டில் Rekhyt பறவை காட்டப்பட்டுள்ளது. இது எகிப்திய மக்களைப் பிரதிபலிக்கிறது. “மக்கள் அனைவராலும் அன்போடு நேசிக்கப்படும் மன்னர்” என்பதைக் குறிக்கும் சின்னங்கள் இங்கே பொறிக்கப்பட்டுள்ளன. வண்ணக் கல் சாந்துக் கலவையால் நிரப்பப்பட்டுப் பேரழகோடு திகழும் இந்த அரியணை ஒரு வரலாற்று ஆவணம் என்கிறார் கார்ட்டர். டுடன்காமுனின் தந்தை அக்கினாட்டன் உருவாக்கிய ஆட்டன் எனும் ஒற்றைச் சூரியக் கடவுள் வழிபாட்டையும், பழைய அமுன் கடவுள் வழிபாட்டையும் கலந்து பிரதிபலிக்கிறது இந்த அரியணை.
![]() |
மன்னர் டுட்டும் மகாராணி அன்க்கேசெனமுனும் அரியாசனத்தில் |
![]() |
அரியாசனத்தில் வண்ணக் கல் சாந்து அலங்காரம் |
![]() |
அரியாசனக் காலடி மணைப் பலகையில் பாரம்பரிய எதிரிகளின் உருவங்கள் |
![]() |
அரியாசனக் கைப்பிடியில் அரிமா |
மன்னரின் பெயர் பொறிக்கப்பட்ட கார்ட்டூஷ்கள் கலவையாக உள்ளன. (கார்ட்டூஷ் (cartouche) என்பது மாமன்னர்கள், மகாராணிகளின் பெயர்கள் இந்தக் கார்ட்டூஷ் வடிவத்துக்குள்தான் எழுதப்படும். மேலும் கீழும் வளைந்த ஒரு செவ்வகம் ஒரு கிடைமட்டக் கோட்டின்மேல் நிற்பது போல இருக்கும் இந்தக் கார்ட்டூஷ்கள்.) ஆட்டன் என்னும் சூரியனை மட்டும் வழிபடும் சமயத்தைத் தோற்றுவித்தவர் டுடன்காமுனின் தந்தை அக்கினாட்டன். அமுன் என்பது பழைய தெய்வங்கள் பலவற்றில் முக்கியமான தெய்வம். நூற்றுக்கணக்கான தெய்வங்களை வழிபடுவதை நிறுத்திவிட்டு சூரியன் என்னும் ஒற்றைக் கடவுள் வழிபாட்டை டுட்டின் தந்தை அறிமுகப்படுத்தியதால் மன்னர் டுட்டின் பெயர் இரண்டு விதமாகவும் எழுதப்பட்டுள்ளது.
சில இடங்களில் சூரியக் கடவுள் கார்ட்டூஷ் அழிக்கப்பட்டு, அமுன் கடவுள் கார்ட்டூஷ் நிரப்பப்பட்டுள்ளது. சில இடங்களில், அவ்வாறு அழிக்கப்படவில்லை. அரியணையின் இடப்பக்கக் கைப்பிடியின் வெளிப்புறத்தில், டுடன்காமுன் (டுட்+அன்க்+அமுன்) என்ற அமுன் கார்ட்டூஷ் உள்ளது. வலப்புறக் கைப்பிடியின் வெளிப்புறத்தில், டுடன்காட்டன் (டுட்+அன்க்+ஆட்டன்) என்ற ஆட்டன் கார்ட்டூஷ் உள்ளது. சூரியனை மட்டுமின்றிப் பல்வேறு கடவுள்களை வழிபடும் பழைய வழிபாட்டு முறைக்குத் திரும்பிய பின்னரும், இவ்வளவு வெளிப்படையாகத் தந்தை தோற்றுவித்த சமயத்தின் அடையாளச் சின்னங்களை, டுடன்காமுன் ஏன் அரியணையில் விட்டுவைத்தார் என்ற கேள்வி, வரலாற்று ஆய்வாளர்களுக்கு எழுகிறது. இல்லை, ஒருவேளை இதைப் பொதுப் பார்வைக்கே கொண்டுவராமல் மறைவாக அரண்மனையில் வைத்திருந்து, மன்னர் பாதுகாத்து வந்திருக்கலாம். இல்லாவிட்டால், ஓரளவு அரியணையில் மாற்றம் செய்தால் போதும், பழையதை ஏன் மறைக்கவேண்டும் என்றுகூட டுடன்காமுன் நினைத்திருக்கலாம். அவர் எழுந்துவந்து விளக்கம் சொன்னால்தான் உண்டு
![]() |
அரியாசன இடப்பக்கக் கைப்பிடியில் டுட்டன்காமுன் பெயர் - டுட்+அன்க்+அமுன். அமுன் கார்ட்டூஷ் உள்ளது |
![]() |
அரியாசன வலப்பக்கக் கைப்பிடியில் டுட்டன்காட்டன் பெயர் - டுட்+அன்க்+ஆட்டன். ஆட்டன் கார்ட்டூஷ் உள்ளது |
இன்னோர் ஊகத்தையும் எகிப்தியவியலாளர்கள் சிலர் முன்வைக்கின்றனர். இந்த அரியணையே டுடன்காமுனின் தந்தை அக்கினாட்டனுடையதுதான் என்கின்றனர் அவர்கள். அக்கினாட்டனும் அவரது மனைவி நெஃபர்டிட்டியும்தான் அதில் முதலில் பொறிக்கப்பட்டிருந்தனர். அவர் மறைந்தபிறகு, மகன் டுடன்காமுனின் முகமும் அவரது மனைவி அன்க்கேசெனமுனின் முகமும் அரியணையில் ஒட்டப்பட்டன என்பது சிலரின் நம்பிக்கை. அதற்கு வலு சேர்க்கும் வகையில் அன்க்கேசெனமுனின் முகத்தைச் சுற்றி குறிப்பாகத் தலைக்குப் பின்னால் ஏதோ சீரமைப்பு வேலை நடந்த தடயத்தைப் பார்க்கமுடிகிறது.
அதேபோல், சூரியக் கதிரின் முடிவில் உள்ள அங்க் உயிர்க்குறி டுடன்காமுனின் மூக்கிற்குச் சரியாக நேர் எதிரே பொறிக்கப்பட்டிருக்க, மகாராணி அன்க்கேசெனமுனுக்கு முன்னால் உள்ள உயிர்க்குறி கண்ணுக்கு நேரே உள்ளது. மூக்கு ஒரு விரற்கடை கீழே உள்ளது. முதலில் இருந்த நெஃபர்டிட்டியின் உருவத்துக்காகப் பொறிக்கப்பட்டபோது அங்க் சரியாக மூக்கிற்கு முன்னால் இருந்திருக்கவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அழகிய தங்க அரியணை தவிரப் பல வடிவத்தில் அமைந்த நாற்காலிகள், பதப்படுத்தப்பட்ட உணவு வைக்கப்பட்ட பெட்டிகள், மலர்களாலும் இலை, தழைகளாலும் உருவாக்கப்பட்ட ஆரங்கள் இருந்தன இந்த முன்னறையில். உணவுப் பெட்டிக்குள் மாட்டிறைச்சித் துண்டுகளும் மம்மியாக்கம் செய்யப்பட்ட வாத்துகளும், உலர்ந்த பழங்கள் உள்ளிட்ட மற்ற சில உணவுப் பொருள்களும் இருந்தன.
எகிப்தின் பழமையான வேறு சில கல்லறைகளில் கண்டுபிடிக்கப்பட்ட உணவுப் பெட்டிகள், உள்ளே மம்மியாக்கம் செய்யப்பட்ட பறவைகளைப் போன்ற வடிவத்திலேயே இருந்தன. எடுத்துக்காட்டாக, புறாக்களும் வாத்துகளும் மம்மியாக்கம் செய்யப்பட்டு மரத்தால் ஆன புறா, வாத்து வடிவப் பெட்டிகளுக்கு உள்ளே வைக்கப்பட்டு, வெளியே நாரினால் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்தைப் போல் மேலோகத்திலும் மன்னருக்குச் சுவையான மம்மு தேவை!
நுழைவாயிலுக்கு இடப்புறமாக நான்கு ரதங்கள் பிரித்துப் போடப்பட்டிருந்தன. ஆறு ஆரக்கால்களைக் கொண்ட சக்கரங்கள் தனித்தனியே பிரித்துப் போடப்பட்டிருந்தன. ரதங்களைக் கள்வர்கள் உடைத்துப் போடவில்லை. கல்லறை நுழைவாயில் மிகக் குறுகியது. ரதங்களை முழுமையாக அப்படியே உள்ளே எடுத்துவர முடிந்திருக்காது என்பதால், அவற்றின் அச்சு நடுவில் அறுக்கப்பட்டு இரு துண்டுகளாக்கப்பட்டது. சக்கரங்கள் பிரித்தெடுக்கப்பட்டு உள்ளே அடுக்கப்பட்டன என்கிறார் கார்ட்டர். இந்த ரதங்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட மரம் மூவாயிரம் ஆண்டுகள் கடந்தும் ஓரளவு நல்ல நிலையிலேயே இருந்தது. பெரிதாக அதைச் சீரமைக்கும் அவசியம் ஏற்படவில்லை. ரதங்களைப் பழைய நிலைக்குக்கொண்டுவரப் படாதபாடு பட்டது கார்ட்டர் குழு. ஆனால், முழுமை பெற்ற ரதங்களைப் பார்த்ததும் அதற்காகப் பட்ட சிரமங்கள் எல்லாம் ஒரு பொருட்டாகவே படவில்லையாம்.
![]() |
பிரித்துப் போடப்பட்டிருந்த ரதங்கள் |
ரதத்தின் ஒவ்வொரு பகுதியும் தங்கத் தகடால் போர்த்தப்பட்டு அதில் வெவ்வேறு கீறல் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இந்த ரதங்கள் சில பெட்டிகளின்மீது வரையப்பட்டுள்ள மன்னரின் ரதங்களோடு ஒத்துப்போகின்றன. ரதத்தைச் செலுத்தும்போது குதிரைக் கடிவாளத்தை இறுகப் பற்ற உதவும் கையுறைகளும் கூட இங்கே கிடைத்துள்ளன. வண்ணக் கல், கண்ணாடிச் சாந்துகொண்டு ஆங்காங்கே ரதம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமச் சடங்குப் பொருள்களில் பெரும்பாலானவை அலபாஸ்டர் பளிங்கு, கருங்காலி மரம், தங்கம், லாப்பிஸ் லாஸுலி (Lapis lazuli) எனப்படும் ஒருவகை அடர்நீல அரியவகைக் கல், டர்க்கொய்ஷ் (Turquoise-அதாவது துருக்கிய நீலம்) கல்மணி ஆகியவற்றால் செய்யப்பட்டிருந்தன அல்லது அழகூட்டப்பட்டிருந்தன.
முன்னறையில் கிடைத்த மற்றொரு முக்கியமான பொருள் தடிமனான தங்கத் தகடு வேயப்பட்ட மரப் பெட்டி அல்லது மாடம். இறைத் திருமேனியை உள்ளே வைத்து வழிபடும் 50 சென்டிமீட்டர் உயரமே உள்ள சிற்றாலயம் (Shrine) அது. வெள்ளித் தகடால் போர்த்தப்பட்டிருந்த அந்தப் பெட்டியின் அடிப்பகுதி வழக்கம்போல் பனிச்சறுக்கு வண்டியின் அடிப்பகுதியை ஒத்திருந்தது. மேல்பாகம் வழக்கம்போல் சரிவுக் கூரை. முன்பக்கமாகத் திறக்கும் இரண்டு கதவுகள் கருங்காலிக் கோலால் நடுவே தாழிடப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிற்றாலயத் தங்கத் தகட்டுப் பகுதி முழுவதும் டுடன்காமுனும் அவர் மனைவியும் சேர்ந்திருப்பதைக் காட்டும் கீறல் உருவங்கள் உள்ளன. கல்லறைப் பொருள்களில் மன்னரும் ராணியும் சேர்ந்தவாறு காட்டப்பட்டுள்ள ஐந்து பொருள்களில் இந்தச் சிற்றாலயமும் ஒன்று. இவ்வாறு மன்னரும் ராணியும் ஏகாந்தமாக இருப்பதை ஓவியங்கள், சிற்பங்கள், பொருள்களில் சித்திரிப்பது அமர்னா காலத்துக் கலை பாணி என்கிறார் கார்ட்டர்.
இந்தப் பெட்டிக்குள் என்ன இருந்திருக்கும் என்பது இன்னும் முக்கியம். உள்ளே இருந்தது அமுன் கடவுளின் சொக்கத் தங்கச் சிலை. ஆனால் கள்வர்கள் அதைக் கொண்டுசென்றுவிட்டனர். சுமார் ஒரு கிலோகிராம் எடையும் 18 சென்டிமீட்டர் உயரமும் இருந்திருக்கக்கூடிய சொக்கத் தங்கக் கடவுள் சிலையைப் பின்பக்கமாகத் தாங்கிப் பிடிக்கும் தாங்கிதான் பெட்டிக்குள் இருந்தது. எகிப்தில் இத்தகைய கல்லறைச் சிற்றாலயங்களில் வைக்கப்படும் அமுன் கடவுளின் தங்கச் சிலை ஒன்றே ஒன்று மட்டும் இப்போது உலகில் எஞ்சியுள்ளது. அது நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் அரும்பொருளகத்தில் உள்ளது.
![]() |
அமுன் கடவுளின் தங்கச் சிலை. படம் - மெட்ரோபாலிட்டன் அரும்பொருளகம், நியூயார்க் |
அரையாடை அணிந்து, இடக்காலை முன்னெடுத்து வைத்து நடக்கும் நிலையில் உள்ள அமுன் கடவுளின் தொங்கவிடப்பட்ட இடக் கையில் உயிர்க்குறியான அங்க் இருக்கும். உயர்ந்து, நெஞ்சுக்கு நடுவே நிற்கும் வலக்கையில், சற்றே அகலமான கதிர் அரிவாள் போன்ற சிறிய ஆயுதம் இருக்கும். இந்த அமுன் கடவுள்தான் கர்னாக் ஆலயத்தின் முக்கியக் கருவறைத் தெய்வம். அங்குள்ள கருவறையில் அமுன் கடவுளின் கனமான, அளவிற் பெரிய தங்கச் சிலை இருந்திருக்கவேண்டும் என ஊகிக்கப்படுகிறது. சுமார் ஒரு சதுரகிலோமீட்டர் (100 ஹெக்டேர்) பரப்பளவுள்ள மாபெரும் ஆலயம் கர்னாக். அவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை அலங்கரித்த கருவறைத் தெய்வம் எப்படி இருந்திருக்கும் என்று ஊகித்துக்கொள்ளுங்கள்.
டுடன்காமுன் கல்லறையில் நுழைவாயிலுக்கு வலப்புறம், முன்னறையில் இருந்து மம்மி அறையைப் பிரிக்கும் தடுப்புச் சுவருக்கு வெளியே, மன்னரின் ஆளுயரக் கறுப்பு மற்றும் தங்க வண்ணச் சிலைகள் இரண்டு ஒன்றையொன்று நோக்கியவாறு நின்று கொண்டிருந்தன. வாயிற்காப்போனைப் போல் இருந்தன அவை இரண்டும். மன்னரின் ஆன்மாவைக் (Ka) குறிக்கும் சிலைகள் என்று இவை குறிப்பிடப்படுகின்றன. டுடன்காமுனின் உண்மையான உயரத்தைக் காட்டிலும் ஒரு அடி கூடுதல் உயரத்தோடு (198 செ.மீ) உள்ளன இந்த இரண்டு சிலைகளும்.
![]() |
மம்மி அறை நுழைவாயில் உடைத்துத் திறக்கப்பட்ட போது... படம்-டுடன்காமுன் மாதிரிக் கல்லறை |
கைரோ அரும்பொருளகத்தில் இந்தச் சிலைகளில் ஒன்றை உயரமான கண்ணாடிப் பெட்டிக்குள் காட்சிக்கு வைத்திருக்கின்றனர். கறுப்பு நிறம் நைல் நதியின் வளமான வண்டல் மண்ணைக் குறிக்கிறது. அது செழிப்பின் நிறம் என்பதால் மன்னரின் உடல் வண்ணமாகக் காட்டப்பட்டிருந்தது. இடக் கையில் உயரமான கம்பு. அதன் நடுவே பப்பைரஸ் மலர் போன்ற வடிவத்தில் ஒரு தாங்கி. அதில்தான் மன்னரின் கை முஷ்டி அமர்கிறது. அந்த பப்பைரஸ் தண்டு மன்னரின் இளமையையும் மலர்ச்சியையும் குறிக்கிறதாம். மற்றொரு கையில் நமது பீமனின் கதாயுதம் போன்ற சின்னக் குண்டுடன் கூடிய தண்டு. அது எகிப்தின் பிரபலமான ஆயுதம்.
எதிரிகளை மன்னர் மன்னர்கள் தாக்குவதுபோன்ற ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் இந்த ஆயுதம்தான் பெரும்பாலும் காட்டப்பட்டிருக்கும். இந்த ஆயுதம் வெற்றி பெற்ற மன்னரைக் குறிப்பது. ஒரு சிலையின் தலைப் பகுதி பெரிய கோடரிக் கொண்டை போட்டு முடிந்திருப்பது போலவும் மற்றொன்று தங்க முகக்கவசத்தில் இருக்கும் நெமிஸ் அணிந்திருப்பது போலவும் உள்ளது. நாங்கள் கொண்டை போட்ட தலையுள்ள சிலையை மட்டும்தான் பார்க்கமுடிந்தது. நெமிஸ் அணிந்த சிலை நாங்கள் போனபோது கைரோ அரும்பொருளகத்தில் இல்லை. படத்தைப் பார்த்தால் இரண்டு சிலைகளிலுமே காது மடல்கள் வெளித் தெரிகின்றன. நெற்றியின் மேல் பாதுகாப்பைக் குறிக்கும் விதத்தில் படமெடுத்த நாகம் மட்டும் உள்ளது. இரண்டிலுமே வல்லூறுத் தலை பக்கத்தில் இல்லை.
இரண்டு சிலைகளின் இடக்காலும் முன்னெடுத்து வைத்து நடக்கும் தோரணையில் உள்ளன. அரையாடை கல்லறை ஓவியத்தில் காணப்படுவதுபோல் தார் பாய்ச்சிக் கட்டிய துணியைப் போல் அல்லாமல், ஏராளமான மடிப்புகளுடன் அரசர்களுக்கே உரிய விடைத்த முக்கோண வடிவில் உள்ளது. இந்த ஆடை அக்கால மோஸ்தர். கண்களின் ஓரங்களிலும் புருவத்திலும் தங்கமுலாம் பூசிய வெண்கலம் பதிக்கப்பட்டுள்ளது. கண்களில் மணிக்கல் பதிக்கப்பட்டுள்ளது. கைகளில் கங்கணமும் வங்கியும் காட்டப்பட்டுள்ளன. காலில் தனியே பொருத்தப்பட்ட காலணிகள் உள்ளன.
இந்த இரண்டு சிலைகளுக்கு நடுவே ஒரு தடுப்புச் சுவர். அந்தச் சுவரின் கீழ்ப்பகுதியில் ஒரு திறப்பு. அது உடைக்கப்பட்டு மறுபடியும் அடைக்கப்பட்டுப் பூசிய தடயம் தெளிவாக இருந்தது. கள்வர்கள் முன்னறையில் இருந்து இந்தச் சுவரில் கன்னமிட்டு வடபுறம் உள்ள Burial Chamber அதாவது மம்மி அறைக்குள் சென்ற அடையாளம் அது. கார்ட்டர், கார்னர்வான், ஈவ்லின் சீமாட்டி மூவரும் அந்த ஓட்டையைப் பெரிதுபடுத்தி, உள்ளே சென்று பார்த்தனர். மம்மி அறையை அடைத்துக்கொண்டு ஒரு மாபெரும் பெட்டி உட்கார்ந்திருந்தது. தங்கத் தகடு போர்த்தப்பட்ட ஓக் (Oak) மரப்பெட்டி அது.
அதற்குள் என்ன இருக்கும் என்பதை கார்ட்டரால் ஊகிக்க முடிந்தாலும் அவர் அவசரப்படவில்லை. 1900ஆம் ஆண்டில் கிடைத்த அனுபவம் அவரைக் கட்டுப்படுத்தியது. அப்போது அவர் இதேபோல முத்திரையிடப்பட்ட ஒரு கல்லறையைக் கண்டுபிடித்து அதைத் திறக்கும்போது அதிகாரிகளையும் ஊடகங்களையும் அழைத்திருந்தார். ஆனால் அதை உடைத்து உள்ளேபோகும்போது அங்கு ஒரேயொரு சிலையும் காலியான சவப் பெட்டியும் சில ஈமச் சடங்குப் பொருள்களும் மட்டுமே கிடைத்தன. அது வந்திருந்தோருக்குப் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கார்ட்டருக்கோ தர்மசங்கடம். மீண்டும் அத்தகைய ஏமாற்றத்துக்கு ஆளாக அவர் விரும்பவில்லை. ஆகவே அடக்கி வாசித்தார். எதையும் கண்ணால் பார்த்தபின் உலகுக்கு அறிவிக்கலாம் என்று முடிவெடுத்தார் கார்ட்டர்.
மம்மி அறைக்குக் கிழக்கே சதுரமாக ஒரு சின்ன அறை இருந்தது. மம்மி அறையிலிருந்து அதற்கு ஒரு சின்ன வாசல் இருந்தது. தமிழகக் கோயில் கதவுகளில் ஒருவர் உள்ளே போய்வரத்தக்க அளவுக்கு ஒரு திட்டிவாசல் இருக்குமே, அதுபோல. Treasury அறை அதாவது கருவூல அறை என்று அதற்குப் பெயர். இது தடுப்புச் சுவரால் தடுக்கப்படவில்லை. இயற்கையான பாறையை வெட்டி ஒரு வாசலை மட்டும் வைத்துப் பின்னால் பெரிய அறையாகக் குடைந்துவிட்டனர்.
இந்த இரண்டு அறைகளிலும் இருந்தனவற்றை, மூவரும் மேலோட்டமாகப் பார்த்தபின் அங்கிருந்து வெளியேறி நுழைவாயிலில் இருந்த துளையை மறுபடியும் மூடிவைத்தனர். முன்னறையில் உள்ள பொருள்கள் அனைத்தையும் படம் எடுத்துப் பதிவுசெய்து அவற்றைப் பாதுகாப்பாக வெளியே எடுத்தபிறகுதான், அதிகாரபூர்வமாக மம்மி அறைக்குள் நுழைவதென கார்ட்டரும் கார்னர்வானும் முடிவெடுத்தனர்.
முன்னறையில் இருந்த ஈமப் படுக்கைகளில் ஒன்றின்கீழே, மற்றொரு வாசல் இருந்தது. அதன் நுழைவாயிலும் உடைக்கப்பட்டுப் பின்னர் பூசப்பட்டிருந்தது. இதற்கு Annex அதாவது துணை அறை என்று பெயர். முன்னறைக்கு இணையாகச் செவ்வக வடிவில் தென் வடலாக உள்ளது இந்த அறை. முன்னறைக்கு மேற்குத் திசையில் கிட்டத்தட்ட அதில் பாதியளவுக்கு இருந்தது துணை அறை. அளவிற் சிறியதாக இருந்தாலும் இந்த அறையில்தான் ஏராளமான பொருள்கள் இருந்தன.
ஆனால் கள்வர்கள் இந்த அறையைச் சூறையாடி இருந்தனர். தரையில் கால்வைக்கக் கூட இடமில்லை என்று எழுதுகிறார் கார்ட்டர். தங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டபின் மற்றவற்றைக் குப்பையாகப் போட்டுவிட்டு வெளியேறி இருந்தனர் கள்வர்கள். இரண்டாவது கொள்ளையின்போது கல்லறைக்குள் போதிய வெளிச்சம் இருந்திருக்காது. இரண்டாவது தடுப்புச் சுவருக்கு முந்திய இடைவழியில் ஒரே ஒருவர் மட்டுமே உட்புகும் அளவுக்குத் தோண்டப்பட்ட சுரங்கத்தின்வழியே அதிக வெளிச்சம் வந்திருக்கமுடியாது. அதனால் கல்லறையின் வெவ்வேறு அறைகளுக்கு உள்ளிருந்து முன்னறைக்குப் பொருள்களை எடுத்துவந்து, சொற்ப வெளிச்சத்தில் பார்த்து, தங்கம் போல் மின்னிய, கையில் எடுத்துச் செல்லக்கூடிய பொருள்களை மட்டும் கள்வர்கள் எடுத்துச் சென்றிருக்கவேண்டும் என்கிறார் கார்ட்டர்.
இங்கே ஒரு சுவைத் தகவல். டுடன்காமுனின் அழகிய தங்க மோதிரங்கள் சில, மன்னருடைய கழுத்துத் துணிக்குள் வைத்துக் கட்டப்பட்ட நிலையில் முன்னறையில் கண்டெடுக்கப்பட்டன. கண்டிப்பாக இது கள்வர்களின் வேலை என்கிறார் கார்ட்டர். தங்க மோதிரங்களைப் பார்த்ததும் அவற்றைக் கைப்பற்றிய கள்வர்கள், அங்கேயே ஒரு பெட்டிக்குள் இருந்த கழுத்துத் துணிக்குள் அவற்றைப் போட்டு இரண்டு சுற்று சுற்றி ஒரு முடிச்சுப் போட்டு ஒரு பொதிபோல் கட்டிவிட்டனர். ஆனால் ஏன் அவர்கள் அதை வெளியே எடுத்துச் செல்லாமல் விட்டனர்? ஒன்று கொள்ளை நடக்கும் தகவல் தெரிந்து அதிகாரிகள் உள்ளே புகுந்து கையும் களவுமாகக் கள்வர்களைப் பிடித்திருக்கலாம். அல்லது, ஆள் வருவது தெரிந்து அவசரத்தில் ஓடும்போது தவறவிட்டிருக்கலாம் என்கிறார் கார்ட்டர்.
கல்லறை இரண்டாவது முறை கொள்ளையிடப்பட்டபின், முன்னறையில் சிதறிக் கிடந்த எல்லாப் பொருள்களையும் கூட்டிப் பெருக்கி, கிடைத்த பெட்டிக்குள் போட்டுத் திணித்து மூடிவைத்ததால், அங்கே ஒருவகை ஒழுங்கு இருந்தது. ஆனால் இந்தத் துணை அறையை அதிகாரிகள் அவ்வாறு ஒழுங்குபடுத்தாமல் கள்வர்கள் விட்டுச்சென்ற நிலையில் அப்படியே விட்டுவிட்டனர் போலும்.
ஒவ்வொரு அறையையும் பார்க்கப் பார்க்க மலைத்துப்போனார் கார்ட்டர். ஒவ்வொன்றிலும் நூற்றுக்கணக்கான பொருள்கள். அந்த ஒவ்வொரு பொருளுக்கு உள்ளேயும் பொருள்கள். அவை அனைத்தையும் தனித்தனியே பதிவு செய்யவேண்டும். நுணுக்கமாகக் குறிப்பு எடுக்கவேண்டும். அதிலுள்ள சித்திர எழுத்துகளைப் படிக்கவேண்டும்.
அதற்கு அடுத்தபடியாக அவற்றை பத்திரமாக வெளியே எடுத்துச் சென்று பாதுகாத்துப் பராமரிக்கவேண்டும். தமக்கு முன்னே உள்ள பணியின் கடுமை கார்ட்டருக்குப் புரிந்தது. டுடன்காமுன் கல்லறைக் கண்டுபிடிப்பு மிக மிக முக்கியமானது என்பது வேறு யாரைவிடவும் கார்ட்டருக்கு மிக நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால் கல்லறைக்குள் இவ்வளவு அதிகமான பொருள்கள், அதுவும் இத்தனை மதிப்புமிக்க கலைப்பொருள்கள் கிடைக்கும் என்பதைக் கார்ட்டரே எதிர்பார்க்கவில்லை. அவற்றைப் பட்டியலிட்டுப் பாதுகாக்கும் நடைமுறைக்கு அவர் தயாராகவும் இல்லை.
![]() |
காலி செய்யப்படும் கல்லறை. படம்-டுடன்காமுன் மாதிரிக் கல்லறை |
ஒவ்வொரு பொருளையும் கையால் தொடுமுன்னரே அவற்றை முறையான பராமரிப்புக்கு உட்படுத்தவேண்டியிருந்தது. சில பொருள்களை எப்படிக் கையாண்டால் அவை உதிர்ந்து போகாமல் உண்மையான, ஒழுங்கான வடிவத்திலேயே நீடிக்கும் என்பதுகூடக் கார்ட்டருக்குத் தெரிந்திருக்கவில்லை. முன்மாதிரியாகப் பின்பற்ற இத்தகைய பணி இதற்குமுன் நடந்ததும் இல்லை. மலைத்துப் போனார் கார்ட்டர்.
ஒற்றை ஆளாக இதைச் செய்வது சாத்தியமில்லை. ஆகவே தமக்குத் துணையாக ஒரு நிபுணர் குழுவை அமைத்தார் கார்ட்டர். ஒரு புகைப்பட நிபுணர், ஒரு ரசாயன நிபுணர், எகிப்தியவியலில் அதிக ஞானமுள்ள பழுத்த அனுபவசாலிகள் இருவர், இரண்டு வரைபடக் கலைஞர்கள், பொறியியல் துறை அனுபவமுள்ள ஒரு கட்டடச் சிற்பி இவர்கள்தான் அந்த ஆதரவுக் குழுவினர்.
![]() |
கல்லறைச் சீரமைப்பில் கார்ட்டருக்கு உதவிய குழுவினரில் சிலர் |
கல்லறையில் உள்ள பொருள்கள் காலத்தால் இற்றுப் போனவை. லேசாக அசைத்தாலே அவை உடையலாம் அல்லது நொறுங்கிப்போகலாம். எடுத்துக்காட்டாக, மணிகள் கோக்கப்பட்ட ஒரு காலணியைக் குறிப்பிடுகிறார் கார்ட்டர். அந்த மணிகளைக் கோத்திருந்த சரடு மக்கிப்போயிருந்தது. எனவே வெளிப்பார்வைக்கு உறுதியாகத் தெரிந்தாலும், அதைக் கையிலெடுத்ததுமே பொலபொலவென உதிர்ந்து மணிகள் எல்லாம் ஒரு குவியலாகிவிட்டன.
![]() |
மணிகளோடு கூடிய காலணி |
இன்னொரு பிரச்சினையும் இருந்தது. அந்தக் கல்லறைப் பொருள்கள் எல்லாமே சுமார் 3300 ஆண்டுகளுக்குமேல் காற்றோ வெளிச்சமோ படாதவை. புதிதாக இப்போது உள்ளேவரும் சூடான காற்றும், மனிதர்களின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை ஆவியாகி உருவாகும் ஈரப்பதமும், பொருள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே தேவையில்லாமல் கண்டவர்களையும் கல்லறைக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதில் சற்றுக் கடுமையாகவே நடந்துகொண்டார் கார்ட்டர்.
பிரகாசமான வெளிச்சமும் ஈரப்பதமும் அரும்பொருள்களுக்கு எப்போதுமே எதிரிகள்தாம். அதனால்தான் இப்போதும் அரும்பொருளகங்கள் உலகெங்கும் தணிந்த வெளிச்சத்தில் பேணப்படுகின்றன. முக்கியப் பொருள்கள் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டு அவற்றின் ஈரப்பதம் சீரான அளவில் பராமரிக்கப்படுகிறது. முன்னறையில் பொருள்கள் ஒன்றன்மேல் ஒன்றாகக் குவிக்கப்பட்டிருந்தன. சிறுவயதில் தீக்குச்சிகளைக் கலைத்துப்போட்டு விளையாடுவோமே. மற்ற குச்சிகளைக் கலைக்காமல் ஒரு குச்சியை மட்டும் உருவி எடுப்பதில் உள்ள அதே சவால்தான் இந்தப் பொருள்களை பத்திரமாக எடுப்பதிலும் இருந்தது என்கிறார் கார்ட்டர். முன்னறைக்குள் நுழைவதே ஒவ்வொரு நாளும் சவால்தான்.
முன்னறை நுழைவாயிலில் ஓர் அழகான பளிங்குக் கிண்ணம் கிடந்தது. அதற்கு இலக்கமிட்டு, இருந்த இடத்திலேயே அதைப் படமெடுத்து ஆவணப்படுத்தி அப்புறப்படுத்தும்வரை மிக கவனமாக அதை மிதித்து நொறுக்கிவிடாமல் உள்ளே நுழையவேண்டியிருந்தது. முன்னறையில் கிடக்கும் பொருள்களை முறையாக அப்புறப்படுத்திய பின்னர்தான் அதிகாரபூர்வமாக மம்மி அறையைத் திறக்கமுடியும். சுமார் 7 வாரங்களில் முன்னறைப் பொருள்களை அப்புறப்படுத்தி முடித்தனர் கார்ட்டர் குழுவினர். நிதானமாக, பதற்றமின்றி, மிகுந்த கவனத்துடன் பொருள்கள் சிதறிக்கிடந்த விதத்தை வரைந்து குறித்துக்கொள்வார் கார்ட்டர்.
![]() |
இலக்கமிடப்பட்டுப் படம் எடுக்கப்பட்ட முன்னறை அரும்பொருள்கள். படம்-கார்ட்டர் வசித்த இல்லம் |
ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் எண்ணை ஒதுக்கி, அதன் இயல்பான இடத்தில் அதைப் படமெடுப்பார். அங்கிருந்த ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பொருள்களையும், குறிப்பிட்ட எண்களோடு அதனதன் இடத்தில் தனித்தனியாகவோ சில பொருள்களோடு கலந்தோ படம் எடுத்து ஆவணப்படுத்தினார் கார்ட்டர். ஒரு படத்திலாவது ஒரு பொருள் வந்துவிடவேண்டும். எதுவும் தப்பிவிடக்கூடாது. இது முதலில் எங்கே கிடந்தது என்ற சந்தேகம் பின்னாளில் வந்துவிடக்கூடாது என்பதற்காக இத்தனை முன்னேற்பாடு.
பெரிய பொருள்கள் கவனமாகப் பிரிக்கப்பட்டு, துணியால் சுற்றப்பட்டுப் தூக்குபலகைமேல் வைத்து எடுத்துச் செல்லப்பட்டன. டுடன்காமுன் கல்லறையில் இருந்து அகற்றப்படும் பொருள்களை முதற்கட்டச் சீரமைப்புக்கு உட்படுத்த, இரண்டாம் செட்டியின் கல்லறைக்கு (KV15) அவை எடுத்துச் செல்லப்பட்டன. அரும்பொருள்களை அதிக அளவில் சேகரித்து வைக்கவும், தேவையான அடிப்படை ஆய்வுகளைச் செய்யவும் போதுமான இடவசதியுள்ள கல்லறையாக அது விளங்கியது. அந்தக் கல்லறையைத் தற்காலிகமாகக் கைப்பற்றி, அங்கு பணியாற்றுவதற்கான ஒப்புதலை, எகிப்திய அரசாங்கத்திடமிருந்து பெற்றார் கார்ட்டர். அந்த இடம் திருடர்களால் எளிதில் அணுகமுடியாத இடமாகவும் இருந்தது. டுடன்காமுன் கல்லறைக்குத் தெற்கே சுமார் 250 மீட்டர் தொலைவில் தனித்து இருந்தது இரண்டாம் செட்டியின் கல்லறை.
![]() |
அரும்பொருள்களின் வெளியேற்றம் |
சுற்றுப் பயணிகள் அதிகம் எட்டிப் பார்க்காத, ஆளரவமற்ற, மன்னர்களின் பள்ளத்தாக்கின் ஒரு கோடியில் இருந்தது அந்தக் கல்லறை. அதற்குப் பிறகு வேறு கல்லறைகள் ஏதும் இல்லாததால், கல்லறைக்கு முன்னால் காவல்போட்டு நடமாட்டத்தை நிறுத்துவதும் எளிதாக இருந்தது. இதைவிட ஒரு பெரிய வசதி, அந்தக் கல்லறை மலைச் சிகரங்களால் சூழப்பட்டு, பகலின் எந்தவொரு நேரத்திலும் நேரடியாகக் கல்லறை நுழைவாயிலுக்குள் வெயில் வர இயலாத அளவில் அமைந்திருந்ததுதான். ஆகவே ஒப்பீட்டளவில் மற்ற கல்லறைகளைக் காட்டிலும் இரண்டாம் செட்டியின் கல்லறை ஓரளவு குளிர்ச்சியான இடம் என்று சொல்லலாம். கல்லறையின் முன்பகுதியிலும் வெவ்வேறு வேலைகளுக்குத் தேவையான திறந்தவெளி இருந்தது இன்னும் வசதியாகிப் போனது ஆய்வகப் பணிகளுக்கு.
டுடன்காமுன் கல்லறைப் பொருள்களைப் படம் எடுக்கும் நிபுணர் பார்ட்டன் அவற்றை அங்குதான் கழுவிப் படங்களை பதிப்பிப்பார். கார்ட்டரின் இல்லத்திலும் புகைப்படங்களைக் கழுவும் இத்தகைய Darkroom ஒன்று இருந்தைப் பார்த்தோம். கல்லறைப் பொருள்களில் முதலாவது 1922 டிசம்பர் 15 ஆம் தேதி அங்கிருந்து அகற்றப்பட்டது. டுடன்காமுன் கல்லறையில் இருந்து அகற்றப்படும் ஒவ்வோர் அரும்பொருளும் மரத் தூக்குபலகையில் (Wooden Stretcher) நன்கு கட்டிவைக்கப்பட்டு இரண்டாம் செட்டியின் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பத்துப் பதினைந்து தூக்குபலகைகள் தயாரானதும் பலத்த பாதுகாப்போடு அவை டுடன்காமுன் கல்லறையைவிட்டுப் புறப்படும். இந்த இடத்தில்தான் அரும்பொருள்களை முதலில் கண்ணால் காணும் வாய்ப்பு பொதுமக்களுக்கும் செய்தியாளர்களுக்கும் கிடைத்தது. ஏராளமான கூட்டம் காத்திருக்குமாம் இந்த ஊர்வலத்தைக் காண. படங்களைச் சுட்டுத் தள்ளினர் பத்திரிகையாளர்கள்.
![]() |
அரும்பொருள்களைப் படம் எடுக்க புகைப்படக் கலைஞர் பர்ட்டன் பயன்படுத்திய கேமரா |
இரண்டாம் செட்டியின் கல்லறையில் அடிப்படைப் பழுதுபார்ப்புப் பணி முடிந்ததும் ஒவ்வொரு பொருளும் மீண்டும் படம் எடுக்கப்பட்டது. பின்னர் அவை முறையாகப் பொட்டலமிடப்பட்டு கைரோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அடிப்படைப் பராமரிப்பு முடிந்ததும் பொருள்களை பத்திரமாகப் பொதிந்து எடுத்துச் செல்ல கார்ட்டர் ஏராளமான பஞ்சையும் பருத்தித் துணியையும் பயன்படுத்தினார். அதிர்வு காரணமாக அரும்பொருள்கள் பாழாகிவிடக்கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார் கார்ட்டர். பூங்கொத்து, மலர்ச்சரம், இலைக்கொத்து, காலணிகள் ஆகியவை மிகவும் நொய்மையான அரும்பொருள்கள் என்பதால் அவை கோழி முட்டைகளைப் போலத் தவிட்டுக்குள் பொதிந்து வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டனவாம்!
கல்லறைச் சேகரிப்புக் கூடத்திலிருந்து அரும்பொருள்களை நைல் நதிவரை எடுத்துச் செல்ல கார்ட்டருக்கு மூன்று வழிகள்தான் இருந்தன. பஞ்சில் பொதிந்து துணியால் சுற்றப்பட்டுப் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கப்பட்ட பொருள்களை ஒட்டகத்தின் முதுகில் ஏற்றி அனுப்பலாம், தூக்குபலகை மீது வைத்து இருவர் தூக்கிச் செல்லலாம், அல்லது தற்காலிகத் தண்டவாளம் போட்டு அதில் சக்கரமுள்ள பெட்டிகளில் எடுத்துச் செல்லலாம். கார்ட்டர் கடைசி வாய்ப்பைத் தெரிவுசெய்தார். அதுதான் அதிர்வு குறைவான வழி. இதற்காக பொருள் சேகரிப்புக் கூடமாகப் பயன்பட்ட கல்லறையில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நைல் நதிவரை ஓரளவு தரமான சாலை போடப்பட்டது.
இந்த 9 கிலோமீட்டர் தொலைவுக்குத் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பெட்டிகளை ஊழியர்கள் தள்ளிச் செல்ல 15 மணி நேரம் தேவைப்பட்டது. குறிப்பிட்ட தொலைவுக்குப் பெட்டியைத் தள்ளியதும் அதுவரை பெட்டி உருண்டுவந்த தண்டவாளப் பாதையை எடுத்து ஊழியர்கள் முன்னால் போடுவார்களாம். அப்புறம் பெட்டிகள் உருளும். இப்படியே உருட்டி உருட்டி நைல் நதி வரை எடுத்துச் சென்றனர் ஊழியர்கள். ஏராளமான சவால்களில் இதுவும் ஒன்று. அவ்வளவுதான்.
பொட்டலமிட்டுப் பாதுகாக்கப்பட்ட பொருள்கள் நைல் நதிக்குச் சென்று சேர்ந்ததும் அங்கிருந்து அவை படகில் தலைநகர் கைரோவுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. டுடன்காமுன் அரும்பொருள்கள் நைல் நதியில் எடுத்துச் செல்லப்படுவதைக் காணும்போதெல்லாம் பெண்கள் அதை மன்னர் டுட்டின் இரண்டாவது இறுதி ஊர்வலமாகவே கருதி அஞ்சலி செலுத்தினார்களாம்.
மிக முக்கியமான விலைமதிப்பற்ற அரும்பொருள்கள் ஆயுதந்தாங்கிய காவலர்கள் பாதுகாப்புடன் லக்ஸோரில் இருந்து ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டன. நைல் நதியில் செல்லும்போது படகு மூழ்கி அரும்பொருள்கள் ஜலசமாதியாகி விட்டால்? டுடன்காமுனின் பிரபலமான தங்க முகமூடி, சொக்கத் தங்கத்தால் ஆன ஈமப் பேழை-போன்றவை, ரயிலில்தான் எடுத்துச் செல்லப்பட்டனவாம்.
சில அரும்பொருள்கள் தங்களுக்குள் வெவ்வேறு பொருள்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஒரு பெட்டிக்குள் பத்துப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கலாம். அவற்றை முழுமையான ஒரு பொருளாகவும், தனித்தனிப் பொருள்களாகவும் பட்டியலிட வேண்டும், பாதுகாக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, டுடன்காமுன் கல்லறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட முதலாவது அரும்பொருள், வண்ணம் தீட்டப்பட்ட ஒரு மரப்பெட்டி. டுடன்காமுன் வேட்டையாடும் காட்சியும், போர்க்களக் காட்சியும் அதில் மிக அழகாக வரையப்பட்டிருக்கும். வெற்றுக் கண்களால் மட்டுமே அந்தப் பெட்டியின் முழுமையான அழகை ஒருவரால் ரசித்துவிட முடியாது. உருப்பெருக்கிக் கண்ணாடி வைத்துப் பார்த்து ரசிக்க வேண்டிய அளவுக்கு நுட்பமான வண்ண ஓவியங்கள் பெட்டிமேல் வரையப்பட்டிருந்தன.
![]() |
மன்னரின் துணிமணிப் பெட்டி. ஓவியம் - வீழ்த்தப்பட்ட எதிரிகளோடு மன்னர் |
![]() |
மன்னரின் துணிமணிப் பெட்டி. ஓவியம் - எதிரிகளின் தலையை மோதும் ஸ்பிங்க்ஸ் வடிவ மன்னர் |
அந்தப் பெட்டிக்குள் மட்கிப்போகக்கூடிய, இற்றுப் போகக்கூடிய பல பொருள்கள் இருந்தன. அவற்றுள் பெரும்பாலானவை துணிகள். முதல் அடுக்கில் பப்பைரஸ் தாளால் செய்யப்பட்ட காலணிகள், மணிகளாலும் ஜிமிக்கிகளாலும் அலங்கரிக்கப்பட்ட அரச அங்கி போன்றவை இருந்தன. அவற்றுக்குக் கீழே இன்னும் சில அலங்கார அங்கிகள், தங்க ரேக்குகள் பதிக்கப்பட்ட அரசக் காலணிகள் என்று கலவையான பொருள்கள் இருந்தன.
அந்த ஒரு வண்ணப் பெட்டியை மட்டும் காலி செய்து, தேவையான பராமரிப்புப் பணிகளை முடிக்க, ஒரு நிபுணருக்கு மூன்று வாரங்கள் பிடித்தன என்றால் அந்தப் பணியின் கடுமை எவ்வளவு என்பது நமக்குப் புரியும். டுடன்காமுன் கல்லறையில் பெட்டிகள் மட்டும் 50க்கும் அதிகமானவை இருந்தன. கல்லறைக்குள் கனஜோராகக் காட்சியளிக்கும் சில அரும்பொருள்கள் வெளிப்புறத் தட்ப வெப்பச் சூழலுக்கு வந்தவுடன் சிதையத் தொடங்கும். இந்த வண்ண மரப்பெட்டி வெளிப்பார்வைக்கு நன்றாகத்தான் இருந்தது. அதை சேகரிப்புக் கல்லறைக்கு எடுத்துவந்த மூன்று வாரத்தில் பாலைவனச் சூடு தாங்காமல் பெட்டி உலர்ந்து சுருங்க ஆரம்பித்தது. பெட்டிமீது வரையப்பட்ட ஓவியத்துக்கு அடியிலிருந்த பூச்சு உட்குழிய ஆரம்பித்து ஓவியம் விரிசல்விடத் தொடங்கியது.
கலங்கிப் போனார் கார்ட்டர். நல்லவேளையாக இத்தகைய அரும்பொருள்களின் பாதுகாப்பில் அனுபவமுள்ள நிபுணர்கள் உடனிருந்தனர் அவருக்குத் துணையாக. உடனடியாக பாரஃபின் மெழுகைப் பதமான சூட்டில் உருக்கிப் பெட்டியின்மேல் ஊற்றி அதை பிளாஸ்டிக் தாளால் கவசமிடுவதுபோல் மூடிவிட்டனர். மெழுகு, மேல்பூச்சைப் பசைபோல் கெட்டியாகப் பிடித்துகொண்டதால், பெட்டி மேலும் சிதையாமல் பாதுகாக்கப்பட்டது. அக்கால லேமினேஷன்!
இதேபோல் பல பொருள்களைக் காப்பாற்றியது கார்ட்டரின் நிபுணர் குழு. இல்லாவிட்டால் இந்நேரம் பல பொருள்களைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்காமலேயே போயிருக்கும். கிடைத்த இடத்திலேயே அரும்பொருள்களைச் சீரமைத்து தேவையான பராமரிப்பைச் செய்யத் தவறியிருந்தால், டுடன்காமுன் அரும்பொருள்களில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே கைரோவுக்குச் சென்று சேர்ந்திருக்கும் என்கிறார் கார்ட்டர்.
இந்த இடத்தில் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கெனச் சில ஆலோசனைகளைக் கூறுகிறார் கார்ட்டர். “தொல்பொருள்களைத் தோண்டி எடுத்து அப்புறப்படுத்துவது மிக மிகப் பொறுமையாகவும் நிதானமாகவும் செய்ய வேண்டிய பொறுப்பான வேலை. தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு பொருளும் அவர்களுக்கு உரிய உடைமைப் பொருள் அல்ல. மனம்போன போக்கில் அதை அலட்சியமாகக் கையாளக் கூடாது. அவை கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்துக்கு வந்து சேர்ந்திருக்கும் மாபெரும் மரபுச் செல்வங்கள். அவற்றைக் கையாளும் பெரும்பேறு ஆய்வாளர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அறியாமை, கவனமின்மை, சோம்பேறித்தனம் என ஏதேனும் ஒரு காரணத்தால் ஓர் அரும்பொருளைச் சிதைத்துவிட்டால், ஆயுள் முழுவதும் அதற்காக ஒருவர் குற்ற உணர்வில் குன்றிப்போக நேரும்” என்று எச்சரிக்கிறார் கார்ட்டர். அரும்பொருள் தடயங்களை அழிப்பது மிக எளிதானது... ஆனால், அது ஈடுகட்டவே முடியாத இழப்பு.
“களைப்படைந்ததன் காரணமாகவோ மற்றவர்களின் நெருக்குதலுக்கு அடிபணிந்து அவசரமாகவோ சிரமமான ஒரு பணியை அரைமனத்தோடு செய்து ஒரு முக்கியமான தடயத்தைப் புறக்கணித்தால், வரலாற்றையே மாற்றி எழுதக்கூடிய ஒரு விவரத்தைத் தவறவிட்டுவிட்ட தொல்லியல் குற்றத்தைப் புரிந்தவர்கள் ஆவீர்கள் நீங்கள்!” என்றும் எச்சரிக்கிறார் கார்ட்டர்.
கட்டுரை மற்றும் புகைப்படங்கள்: பொன். மகாலிங்கம்
ஆசிரியர் குறிப்பு
இராஜபாளையத்தில் பிறந்த பொன் மகாலிங்கம், கட்டடப் பொறியியலில் இளநிலைப் பட்டமும் சுற்றுச்சூழல் பொறியியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். சிங்கப்பூரிலுள்ள தமிழ் வானொலி 96.8 பண்பலையில் அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் 14 ஆண்டுகள் பணிபுரிந்தவர். சிங்கப்பூர்த் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிவழியான வசந்தத்தில் செய்தித் தயாரிப்பாளராகவும் 11 ஆண்டுகள் பணியாற்றியவர்.
தமிழ்நாட்டில், புதிய தலைமுறை தொலைக்காட்சி உருவான தொடக்ககாலத்தில், அதில் செய்தி ஆசிரியராக ஈராண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது ஓய்வு பெற்று சென்னையில் வசிக்கிறார். கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் பேராலயம் பற்றிய இவரது பயணக் கட்டுரை, நூலாக வெளிவந்துள்ளது. பயணம் செய்வதில் அதீத ஆர்வமுள்ளவர்