![]() |
| Music and Devotion by Angelo da Fonseca, 1902–1967 |
சாகித்ய அகாதமி நிறுவனம் வெளியிட்ட இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் வேதநாயகம் சாஸ்திரி பெயரிலான நூல் ஒன்றுள்ளது. அந்த புத்தகத்தை படித்தபிறகு சாஸ்திரி குறித்து இன்னும் அதிகமாக புரிந்துகொள்ள முடிந்தது. அதுவரை அந்த நூலை எழுதிய ஞானசந்திர ஜாண்சன் குறித்து நான் கேள்விப்படவில்லை. ஞானசந்திர ஜாண்சன் மீண்டும் மீண்டும் வேதநாயகம் சாஸ்திரியாரின் வாழ்க்கை, அவரது கீர்த்தனைகள் அவரது சிற்றிலக்கியங்கள் இவற்றை வெவ்வேறு சமயங்களில் தொகுத்திருக்கிறார். கிருஸ்தவ இலக்கிய முன்னோடியான சாஸ்திரியின் பங்களிப்பு குறித்த முழுமையான பார்வைக்கு நீங்கள் ஜாண்சனைத்தான் நாடவேண்டும். கலையின் ஈர்ப்பு விசித்திரமானது. சாஸ்திரியின் படைப்புகளின் அழகுணர்ச்சியைப் பற்றி அவை எழுதப்பட்டு இருநூறு ஆண்டுகளுக்குப் பின் மொத்த கிருஸ்தவ இலக்கியங்களை தொகுத்து வெளியிட்டவரான ஞான சந்திர ஜாண்சன் வியந்து பேசுகிறார். இத்தனைக்கும் அவர் குறைந்தது இருநூறு படைப்பாளிகளையாது பதிவு செய்துள்ளார். அவர்களில் வீரமாமுனிவரும், திட்டூர் தேசிகரும், கிருஷ்ணப்பிள்ளையும் அடங்குவர்.
