![]() |
தில்லை காளி கோவில்லுள்ள அரிகண்ட வீரர்- படம் வே. பார்த்திபன் |
தமிழ் பண்பாட்டில், இலக்கியத்திலும் இலக்கணத்திலும் நெடிது பேசப்பட்ட ஒரு மரபு நடுகல்லுக்கானது. கல்நாட்டும் மரபு தொல்பழங்காலத்திலிருந்து துவங்குகிறது. வீர கதை மரபு அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றது. என் தலைவன் முன்பு வரவேண்டாம் பகைவர்களே அப்படி பகை நின்றவர்கள் எல்லாம் இப்போது நடுகற்களாகி நிற்கிறார்கள் என்கிறது படைச்செருக்கு அதிகாரத்தின் குறள் ஒன்று. ஆரம்ப காலத்தில் குத்துக்கற்களாக இருந்த இந்த ஈமச்சின்னங்கள் கற்களில் எழுத்துப்பொறிப்பு பெற்றன, பின்னர் இறந்த வீரனின் உருவத்தோடு வடிக்கப்பெற்றன. பல அடுக்கு சிற்பங்களாகவும் அழகியல் ரீதியாக இவை வளர்ச்சி பெற்றன.

தமிழகத்தில் நடுகற்கள் அதிகமும் செங்கம் சுற்றுப்பகுதிகளிலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும்தான் கிடைத்துள்ளன. எல்லைக்கு அப்புறமுள்ள கர்நாடகாவில் இக்கற்கள் வீரகல்லு என்று அழைக்கப்படுகின்றன. தாதம்பட்டி, புலிமான் கோம்பை ஆகிய இடங்களில் இருந்து கிடைத்த தொறுபூசல் என்னும் ஆநிரை கவர்தல், மீட்டல் தொடர்பான நடுகற்களே காலம் அறியக்கூடிய கற்களில் மூத்தவை. அவை மட்டுமின்றி மிருகங்களை வேட்டையாடுகையில் இறந்தவர்கள், போரில் இறந்த மனிதர்கள் விலங்குகள், உடன்கட்டை ஏறிய பெண்களுக்கான சதிக்கற்கள், தற்பலிக்கான கற்கள் இப்படி பலவகையாக எடுக்கப்பட்ட நடுகற்கள் நம்மிடம் உள்ளன.
சோழநாட்டில் நடுகற்கள் என்னும் நூல் NCBH (New Century Book House) வெளியீடாக வந்துள்ளது. இந்நூல் ஆசிரியர் வே.பார்த்திபன் திருச்சியை சேர்ந்தவர். பத்து ஆண்டுகளுக்கு மேல் தொல்லியல் சார்ந்து கள ஆய்வுகள் செய்து வருகிறார். வரலாற்றுக்காக இவர் துவங்கிய 'ஆற்றுப்படை' என்னும் மின்னிதழ் தற்போது அச்சு இதழாக வெளிவருகிறது. பார்த்திபன் எழுத்தில் 'கல்லாகிப் போனவர்கள் (ஆதிவனம்), கல்வெட்டு ஓர் அறிமுகம் (காக்கைக்கூடு)' ஆகிய நூல்கள் முன்பே வெளியாகியுள்ளன. ஆற்றுப்படை என்னும் பெயரிலேயே மரபுச்சுற்றுலா அமைப்பை நிறுவி, தமிழகம் துவங்கி சிந்துவெளி நாகரீக களங்கள் வரை தொல்லியல் சார்ந்த பயணங்களையும் இவர் ஒருங்கிணைக்கிறார்.
ஒவ்வொரு நினைவுச்சின்னம் குறித்தும் தனித்தனி கட்டுரைகள். நடுகல்லின் அமைவிடம், அமைப்பு, அதில் இடம்பெற்றுள்ள கல்வெட்டு வாசகம், அதன் காலம் குறித்த கணிப்பு, நினைவுச்சின்னம் கண்டறியப்பட்ட காலம், கண்டறிந்தவர் பெயர் போன்ற தகவல்கள் தரப்பட்டுள்ளன. நூலில் பார்த்திபன் நெடுங்கற்கள், சதிக்கற்கள், தலைப்பலி கற்கள் குறித்து அறிமுகப்படுத்தும் விதமாக தனிக்கட்டுரைகள் எழுதியுள்ளார், காத்தவராயன் சுவாமி கோவிலில் இடம்பெற்றுள்ள நினைவுச்சின்னம் குறித்தும் ஒரு கட்டுரை உள்ளது.
சோழமண்டலத்தில் நடுகற்கள் அதிகம் இல்லை என்ற பொதுக்கருத்து ஒன்றுள்ளது. பார்த்திபன் சோழ மண்டல சதகம் காட்டும் எல்லைகளை எடுத்துக்கொண்டு அதற்குட்பட்ட பகுதியில் 69 நடுகற்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை இந்நூலில் ஆவணப்படுத்துகிறார். ஆறாம் நூற்றாண்டு துவங்கி பதினெட்டாம் நூற்றாண்டு வரை உள்ள இச்சின்னங்களில் அரிகண்ட நவகண்ட கற்கள் மிகுதியாக உள்ளன. அடுத்தபடியாக ஆநிரை மீட்பு, பூசல், விலங்குகளோடு போரிட்டு வீழ்ந்தவர்கள், சதிக்கற்கள் ஆகியவை உள்ளன. வீரர்களுக்கான நடுகற்கள் பெரிதும் கிடைத்துள்ள இடங்கள் முல்லை மருதத்திணைகள் சந்தித்துக்கொள்ளும் எல்லைப்பகுதி என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
நீலகண்டரைசர் என்று குறிப்பிடப்படும் சிற்றரசரது மருமக்கள் ஈடுபட்ட போர் சார்ந்த செந்தாரப்பட்டி நடுகற்கள் இத்தொகுப்பில் முக்கியத்துவம் பெறும் காலத்தால் பழமையான நடுகற்கள் எனலாம். எழுத்துப்பொறிப்பை அடிப்படையாகக்கொண்டும், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தில் கிடைக்கக்கூடிய இந்த அரசர் தொடர்பான பிற நடுகற்களின் செய்திகளை அடிப்படையாக்கியும் இக்கற்கள் காலம் ஆறாம் நூற்றாண்டு என்று அறியப்பட்டுள்ளது. இதே காலகட்டமாக இருக்கலாம் என்று கருதத்தக்க தோகைமலை குதிரைகுத்திப்பட்டான் நடுகல்லில் எழுத்து பொறிப்பும் கோட்டோவியமும் இடம்பெறுகிறது. கோட்டோவியங்கள் அரிதாகவே நடுகற்களில் இடம்பெறுகின்றன.
கோவில் வளாகத்திலும் கோவில்களுக்கு உள்ளேயும் பாதுகாக்கப்படும் தலைப்பலி சின்னங்களை இந்த நூலின் வழி அறிந்து கொள்ள முடிகிறது. தேவாரம் பாடப்பட்ட குளித்தலை, திருவானைக்கா சிவன் கோவில்கள், திவ்ய பிரபந்தம் பெற்ற சாரங்கபாணி பெருமாள் ஆலயம் இங்கெல்லாம் கூட இவை உள்ளன. சில கற்கள் தனியாக வழிபடப்படுகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நடுகற்கள் வேடியப்பன் என்ற தெய்வமாக வணங்கப்படுவது போல் இரட்டைமலை பகுதியில் உள்ள கல் ஒன்று வேட்டை கருப்பர் என்று வழிபடப்படுகிறது. தொண்ணூறுகளில் திருச்சியை சேர்ந்த ஆய்வாளர் கலைக்கோவன் இக்கல்லை முதலில் பதிவு செய்கையில் இக்கல் வழிபாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வரிசைகளாக உள்ள இக்கல்லில் மேற்பகுதியில் ஆயுதங்களும், கீழ்ப்பகுதியில் குதிரையை பற்றிச்செல்லும் வீரனும் காட்டப்படுகின்றனர். பொ யு 10ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கல் குதிரை பலி குறித்தது என்று ஆசிரியர் கருதுகிறார். கல்வெட்டுச்செய்தியும் வேட்டன் மதிரை என்பவர் கொடுத்த 'காவு' குறித்து தெரிவிக்கின்றது.
![]() |
வே.பார்த்திபன் |
இந்த நூலின் சிறப்புகளாக சொல்லவேண்டுமென்றால் பார்த்திபனின் இலகுவான மொழி, கூற வந்ததை தெளிவாக அதே சமயம் தகவல்களின் தொடர்ச்சி அறுபடாமல் கூறிச்செல்ல அவரால் முடிகின்றது. அது முக்கியமானது, தொடர்ந்து களப்பயணங்கள் செல்வது மூலமாகவும் தான் ஒருங்கிணைக்கும் பயணங்களில் பங்கேற்பாளர்களிடம் விளக்கும் அனுபவம் மூலமாகவும் இது அவருக்கு சாத்தியமாகிறது. இன்னொரு சிறப்பு இந்த நூலில் நடுகற்களின் அமைவிடங்களுக்கு செல்ல QR Code கொடுக்கப்பட்டுள்ளது, நேரில் காண விருப்பமுள்ளவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆர்வம் உள்ளவர்களுக்கு இதன் அருமை தெரியும். ஏனெனில் இந்த உதிரிச்சின்னங்கள் காடுகரைகளில் கிடக்கும், தனியார் இடங்களில் இருக்கும். வழிகாட்ட எல்லா நேரங்களிலும் உதவி கிடைக்காது. நாளெல்லாம் அலைந்தாலும் தேடிவந்ததை காணமுடியாமல் ஆகலாம்.
வரலாறு பேராலயங்களில் உள்ள கல்வெட்டுகளில் பாதுகாக்கப்படுகின்றது என்றால், அது முழு உண்மை அல்ல. வரலாறு இது போன்ற பல உதிரிச்சின்னங்கள் வழியாகவே முழுமை பெறுகிறது. ஆர்வலர்கள் இவற்றை தொகுக்க வேண்டிய அவசியம் முன்னெப்போதும் இல்லாத அளவில் தேவைப்படுகிறது. நிலங்களை தோண்டும், பாறைகளை உடைக்கும் பொறிகளின் வருகையால் பல சின்னங்கள் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டன. இதுபோன்ற புத்தகங்களிலாவது அவை எஞ்சியிருக்கட்டும். உதாரணத்திற்கு 2021ம் ஆண்டு நூலாசிரியர் பதிவு செய்த தின்னக்கோணம் நெடுங்கல்லை நீங்கள் இப்போது பார்க்க முடியாது, சோழ நாட்டில் பதிவு பெற்ற ஒரே நெடுங்கல் அது என்கிறார் ஆசிரியர். அது இப்போது சிதைக்கப்பட்டு விட்டது.
தாமரைக்கண்ணன் புதுச்சேரி